2003-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டித்தொடரில், செஞ்சூரியன் நகரில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த போட்டியின் போது நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்று குறித்து தற்போது ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார்.

harbajan shares an incident from 2003 worldcup series

Advertisment

Advertisment

இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், "2003 உலகக்கோப்பை தொடரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நான் 11 பேர் அணியில் இல்லை. எனக்கு பதிலாக கும்ப்ளே விளையாடினார். போட்டி நாளன்று மதியம் சாப்பிடுவதற்காக நான், ஸ்ரீநாத், கும்ப்ளே, ராகுல் திராவிட் அனைவரும் சென்றோம். அப்போது மேஜையின் மறுபுறம் பாகிஸ்தான் வீரர்கள் முகமது யூசுப், ஷோயிப் அக்தர், சயித் அன்வர், வாசிம் அக்ரம் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

நான் நகைச்சுவையுடன் பேசத் தொடங்கினேன். அப்போது மறுமுனையில் அக்தரும், முகமது யூசுப்பும் பஞ்சாபி மொழியில் பேசினார்கள். எனக்கு அவர்கள் பேசியது புரிந்தது. முதலில் என்னைப் பற்றி முகமது யூசுப் தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். பின்னர் என் மதத்தைப் பற்றி விமர்சித்தார்.

இதனால் ஆத்திமரமடைந்த நான் யூசுப்பின் காலைப் பிடித்து இழுத்தேன். அவரும் என் காலைப் பிடித்து இழுத்த நிலையில், அமர்ந்திருந்த இருவரும் எழுந்தோம். சாப்பிடப் பயன்படும் முள்கரண்டியை கையில் எடுத்து முகமது யூசுப்பை நோக்கி நகர்ந்தேன். அவரும் முள்கரண்டியை எடுத்து என்னை நோக்கி வந்தார். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்தவர்கள் எங்களை விலக்கினர். திராவிட்டும், ஸ்ரீநாத்தும் அமைதியாக என்னை அமர வைத்தனர். மேலும் அவர்கள் யூசுப்பை எச்சரித்தனர். அதன்பிறகு நானும், யூசுப்பும் சமீபத்தில் சந்தித்த போது இந்த சம்பவத்தை குறித்து பேசி சிரித்தோம். களத்துக்கு வெளியே பாகிஸ்தான் வீரர்களுடன் நாங்கள் நட்புறவோடு இருப்போம். குறிப்பாக எனக்கு அக்தரிடமும், அப்ரிடியிடமும் நல்ல நட்பு உண்டு" என கூறினார்.