
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி, டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இரண்டாம் முறையாக வீழ்த்திய வரலாற்று வெற்றியுடன் தாய்நாடு திரும்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள், இன்று தங்களது வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இந்தநிலையில், நெட் பவுலராக இந்திய அணியோடு சென்று, ஒருநாள், இருபது ஓவர், டெஸ்ட் ஆகிய மூன்று வடிவப் போட்டிகளிலும் இந்தியாவிற்கு அறிமுகமான நடராஜனுக்கு, அவரது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் நடராஜன், ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார். செண்டை மேளங்கள் அதிர, நடராஜன் வரும் வழியெங்கும், அவரின் கிராம மக்களும், ரசிகர்களும் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.