Skip to main content

விராட்டின் சாதனைப் பட்டியலில் இணைந்த கில்; மூன்றாவது டி20யில் இந்தியா வெற்றி

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

Gill joins Virat's record list; India win third T20I vs newzealand

 

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுகிறது. டி20 போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

ஒருநாள் தொடரில் நியூசி-யை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி தொடரை வென்றது. தொடர்ந்து ஐசிசி பட்டியலிலும் முதல் இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து மோதும் டி20 தொடருக்கான முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.

 

இந்நிலையில், இன்று அஹமதாபாத்தில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இஷான் கிஷன் 1 ரன்னில் வெளியேற ராகுல் திரிப்பாதியுடன் சுப்மன் கில் இணைந்தார். அதிரடியாக ஆடிய சுப்மன் கில் நியூசிலாந்து பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தார். மறுபுறத்தில் திரிப்பாதியும் அடித்து ஆட இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

 

திரிப்பாதி 44 ரன்களில் ஆட்டமிழக்க சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா முறையே 24 மற்றும் 30 ரன்களை எடுத்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய கில் அசத்தலாக சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 234 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கில் 63 பந்துகளில் 126 ரன்கள் குவித்தார்.

 

235 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்கில் வெளியேற மிட்செல் மட்டும் பொறுமையாக ஆடி 35 ரன்களை எடுத்தார். பின் வரிசையில் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக மிகக் குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்தது. 

 

சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சாதனையை படைத்தது. இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு டப்லினில் நடந்த ஆட்டத்தில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சாதனையாக இருந்தது.

 

எதிரணியின் மொத்த ரன்களை விட தனிநபர் அதிக ரன்களை அடித்ததில் விராட்டின் சாதனைப் பட்டியலில் கில்லும் இணைந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு துபாயில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி 111 ரன்களுக்கு சுருட்டியது. அதில் விராட் மட்டும் 122 ரன்களை எடுத்திருந்தார். அதே போல் இன்றைய போட்டியில் நியூசிலாந்து 66 க்கு ஆல் அவுட் ஆனது. ஆனால் கில் 126 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். 

 

இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் தொடரையும் வென்றது. ஆட்டநாயகனாக சதம் அடித்த சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். தொடர்நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.

 

 

 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.