Skip to main content

"யார் சிறந்த கேப்டன்?..." அணி தேர்வு முறையை கடுமையாகச் சாடிய காம்பீர்!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

gambhir

 

 

சிறந்த கேப்டன் என்றால் அது ரோகித் ஷர்மாதான் என்று கூறிய கவுதம் காம்பீர், இந்திய அணியின் தேர்வு முறை குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி கோப்பையை வென்றது. ரோகித் ஷர்மா வழிநடத்தும் அணி கோப்பையை வெல்வது இது ஐந்தாவது முறையாகும். இதனையடுத்து, இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பை ரோகித் ஷர்மாவிற்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இந்தக் கருத்திற்கு ஆதரவு கரம் நீட்டினர். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் தொடர்ந்து இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகிறார்.

 

இதுகுறித்து அவர் பேசுகையில், "விராட் கோலி மோசமான கேப்டன் அல்ல. இங்கு பேசுபொருளே யார் சிறந்த கேப்டன் என்பதுதான். அது ரோகித் சர்மாதான். இருவருக்குமான வித்தியாசம் பெரிய அளவில் உள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடியதைப் பார்த்து இந்திய அணியில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றால், அதே அளவுகோலை வைத்து ஒருவருக்கு ஏன் கேப்டன் வாய்ப்பு வழங்கக்கூடாது. அது முடியாது எனும்பட்சத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும் ஐபிஎல் என்பது அளவுகோலாக இருக்கக்கூடாது. அதிலிருந்து ஏன் வீரர்கள் தேர்வு அமைய வேண்டும்?. அது முடியாதென்கையில், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், யுகேந்திர சாஹல் ஆகிய வீரர்களின் தேர்வும் தவறே" எனக் கூறினார்.

 

 

Next Story

“உணர்ச்சிவசப்படாமல் இருங்கள்” - கம்பீருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

Delhi High Court advises gautam Gambhir

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கௌதம் கம்பீருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. 

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் பாஜக எம்.பியுமான கௌதம் கம்பீர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். பிரபல இந்தி பத்திரிகை ஒன்று சமீபத்தில் கௌதம் கம்பீர் ஐபிஎல் போட்டிகளில்தான் பிஸியாக இருக்கிறார் என்று கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தன்னுடைய செயல்திறன் குறித்து தவறான கட்டுரையை வெளியிட்டுள்ளது என்று கூறி சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது 2 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், “நீங்கள் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். மக்கள் சேவையில் இருப்பவர். பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாமல் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

Next Story

கவுதம் கம்பீருக்கு கரோனா!

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

gautam gambHir

 

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு, தற்போது குறைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும்  கரோனா உறுதியாகியுள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தனக்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து சோதனை செய்துக்கொண்டதில் கரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கம்பீர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.