Skip to main content

இந்திய அணியில் தேர்வு செய்யாததால் விரக்தி? - ரிஷப் பாண்ட் விளக்கம்

Published on 14/05/2018 | Edited on 14/05/2018

தான் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வதந்திக்கு ரிஷப் பாண்ட் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

pant

 

 

 

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பாண்ட். இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பாண்ட் 12 போட்டிகளில் 582 ரன்கள் குவித்து, அதிக ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதில் ஒரு சதமும், நான்கு அரைசதங்களும் அடக்கம். குறிப்பாக டெல்லி அணிக்காக விளையாடி அதிக ரன்கள் அடித்த கவுதம் கம்பீரின் சாதனையையும் ரிஷப் பாண்ட் முறியடித்துள்ளார். 2008ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் கவுதம் கம்பீர் 534 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், மே 8ஆம் தேதி ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் விவரம் வெளியானது. அதில் ரிஷப் பாண்டின் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து, ‘ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணியில் என் பெயரைத் தேர்வுசெய்யாத தேர்வுக்குழுவின் மீது நான் கடுங்கோபத்தில் இருக்கிறேன். என்னுள் இருக்கும் அத்தனை கோபங்களின் வெளிப்பாடுதான் நான் களத்தில் அடிக்கும் சிக்ஸர்கள். அவர்கள் என் விளையாட்டைப் பார்த்தாவது, என்னை அணியில் எடுக்காமல் விட்டதை நினைத்துப் பார்க்கட்டும்’ என ரிஷப் பாண்ட் சொன்னதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவிவருகிறது. 

 

 

இதையறிந்த ரிஷப் பாண்ட், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து நான் கூறியதாக ஒரு வதந்தி சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. நான் ஒருபோதும் அப்படி சொன்னதேயில்லை. அதை விளக்கவே இங்கு வந்தேன். எனவே, தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். என் விளையாட்டில் கவனம் செலுத்தவிடுங்கள்’ என விளக்கமளித்துள்ளார்.

 

 

Next Story

ஒரு ஆட்டம், இவ்வளவு சாதனைகளா? கலக்கிய கொல்கத்தா அணி!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
dc vs kkr record break victory for kolkata

ஐபிஎல் 2024இன் 16ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சால்ட், நரைன் பேட்டிங்கின் அதிரடியால் டெல்லி அணி நிலை குலைந்தது. விசாகப்பட்டினம் மைதானத்தில் ரசிகர்கள் அனைவரும் விண்ணைப் பார்த்தபடியே இருந்தனர் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு கொல்கத்தாவின் பேட்டிங்கில் சிக்சர்களும், பவுண்டரிகளும் பறக்கத் தொடங்கின.

2023 இல் நரைன் துவக்க ஆட்டக்காரராக மூன்று போட்டிகளில் களமிறக்கப்பட்டார். ஆனால், மூன்று போட்டிகளிலும் சொதப்ப, அந்த முடிவு கைவிடப்பட்டது. ஆனால், இந்த முறை கம்பிரின் துணிவான முடிவால் மீண்டும் நரைன் மீது நம்பிக்கை வைத்து துவக்க வீரராக களமிறங்க வைத்தார். ஆனால் முதல் போட்டியில் 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார். இருந்தாலும் மீண்டும் நம்பிக்கை வைத்து அவரையே களமிறக்க முடிவு செய்தார் காம்பிர். அந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 22 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார்.

நேற்றைய ஆட்டத்தில் முத்தாய்ப்பாக 39 பந்துகளில் 85 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியின் இமாலய ரன் குவிப்புக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கு துணையாக ரகுவன்சி 27 பந்துகளில் 54 ரன்களும், ரசல் 41 ரன்கள், ரிங்குவின் 26 ரன்கள் என அதிரடி கூட்டணியின் அசர வைத்த பேட்டிங்கால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது.

பின்னர், 273 என்ற இமாலய இலக்கை துரத்திய டெல்லி அணி 17.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 54 ரன்களும், கேப்டன் பண்ட் 25 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ரன்ரேட் தாறுமாறாக எகிறி +2.518 என முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்த ஆட்டத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக 272 பதிவாகியுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக அதிகபட்சமாக 18 சிக்சர்கள் இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக உலக டி20 வரலாற்றில் ஐந்தாவது அதிகபட்ச ஸ்கோராகும். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக நரைன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் 14 ஆவது முறையாக ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் கொல்கத்தா சார்பில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற ரசலை சமன் செய்துள்ளார்.

Next Story

பந்து வீச்சில் கலக்கிய ராஜஸ்தான்; ஜெய்ப்பூரில் கிடைத்த இரண்டாவது வெற்றி!

Published on 28/03/2024 | Edited on 29/03/2024
rr vs dc live score update rajasthan wins

ஐபிஎல் 2024 இன் 9ஆவது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் நட்சத்திர ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார்.  பின்பு பட்லருடன் சாம்சன் இணைந்தார்.

ஆனால் சாம்சனும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 15 ரன்களில் கலீல் அஹமது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிறகு பட்லருடன் ரியான் பராக் இணைந்தார். அந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பராக் அதிரடி காட்ட, பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் தடுமாறியது. அடுத்ததாக ஜுரேல் இறங்காமல், அஸ்வின் களமிறக்கப்பட்டார். அந்த முடிவு ஓரளவு சாதகமாகவே அமைந்தது. அஸ்வின் 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய ஜுரேலும் 20 ரன்களில் வீழ்ந்தார்.

விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும், மறுபுறம் பராக் தன் அதிரடியை நிறுத்தவில்லை. 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். அடுத்த 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார். ஹெட்மயரும் 1 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. 

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு அதிரடி துவக்கம் தந்த மார்ஷ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிக்கி புய் டக் அவுட் ஆனார்.பின்னர் இணைந்த கேப்டன் பண்ட் நிதானம் காட்ட வார்னர் ஓரளவு அதிரடி காட்டினார். அரை சதம் அடிப்பார் வார்னர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில பந்துகளில் கேப்டன் பண்ட்டும் 28 ரன்களில் வீழ்ந்தார். பின்னட் வந்த ஸ்டப்ஸ் ஆரம்பம் முதலே அடித்து ஆடினார். அபிஷேக் பொரேல் 9 ரன்னில் வெளியேற, அக்சர் படேல் வந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட , பந்து வீச வந்த சந்தீப் சர்மா முதல் இரண்டு பந்துகளில் 6, 4 என ஸ்டப்ஸ் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால், தனது அனுபவம் மூலம் அடுத்தடுத்த பந்துகளை சிறப்பாக வீசி அடுத்த 4 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட பந்து வீச வந்த ஆவேஷ் கான் சிறப்பாக வீசி ஸ்டப்ஸ், அக்சரை ரன் எடுக்க விடாமல் தடுத்தார். கடைசி ஓவரில் டெல்லி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டாவது வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஆட்ட நாயகனாக ரியான் பராக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.