Skip to main content

‘ஆர்சிபி வெற்றி பெற்றால் அரசு விடுமுறை அளிக்க வேண்டும்’ - கர்நாடகா முதல்வருக்கு ரசிகர் கடிதம்!

Published on 30/05/2025 | Edited on 30/05/2025

 

Fan writes to Siddaramaiah for state holiday if RCB wins 2025 IPL

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முன்னணி வீரர்களான விராட் கோலி, கிறிஸ் கெய்ல், ஏபிடி வில்லியர்ஸ் உள்ளிட்ட புகழ் பெற்ற வீரர்கள் இருந்த போதிலும், ஐபில் தொடரில் ஒரு முறை கூட ஆர்சிபி அணி கோப்பையை வெல்லவில்லை. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 17 சீசன் முடிந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணி போன்ற அணிகள் தொடர்ச்சியாக கோப்பைகளை வென்ற போதிலும், 17 சீசன்களிலும் ஒரு முறை கூட ஆர்.சி.பி அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை. இதனால் மற்ற அணி ரசிகர்கள், ஆர்சிபி ரசிகர்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்து வருகின்றனர். இருந்த போதிலும் ஆர்.சி.பி அணி ரசிகர்கள், தங்களது அணிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான 18வது சீசன் ஐ.பி.எல் போட்டி கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆர்.சி.பி அணி, 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி 4 தோல்வி என புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. முக்கிய அணிகளாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இறங்கு முகத்தில் இருக்கின்றது. நேற்று (29-05-25) நடந்த தகுதி போட்டி 1இல் பஞ்சாப் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதற்கு முன்பு கோப்பையை வெல்லாமல் ரசிகர்களை ஏமாற்றி வரும் ஆர்.சி.பி அணி, இந்தாண்டு நடைபெற்று வரும் தொடரில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருகிறது. அதனால், இந்த ஆண்டு ஆர்.சி.பி அணி கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என அந்த அணியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்தாண்டில் ஆர்.சி.பி அணி கோப்பையை வென்றால் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆர்.சி.பி அணி ரசிகர் ஒருவர், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்த் மல்லன்னவர் என்ற ரசிகர் எழுதிய அந்த கடிதத்தில், ‘ஆர்.சி.பி அணி, ஐ.பி.எல் தொடரில் வெற்றி பெற்ற நாளை ‘ஆர்.சி.பி ரசிகர்களின் விழா’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆண்டுதோறும் இந்த முக்கியமான நிகழ்வைக் கொண்டாட அனுமதிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த தேதியை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். ஆர்.சி.பி கோப்பையை வென்றால், கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட்டங்களை எளிதாக்க சரியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’ என கர்நாடகா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.