Skip to main content

ஒரு தலைமுறையைத் தாங்கிய இருவர்... கிரிக்கெட்டில் இருந்தும் கவனிக்கப்படவில்லை?  

Published on 20/02/2018 | Edited on 20/02/2018

கிரிக்கெட் விளையாட்டு, இந்தியாவில் மற்ற விளையாட்டுகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தை விட, மரியாதையை விட பணத்தை விட, இப்படி பல விட விட விட சொல்லலாம், அத்தனையும் அதிகமாகக் கிடைக்கும் விளையாட்டு.  அப்படிப்பட்ட கிரிக்கெட் விளையாட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய நபருக்கும், அதிக ரன்கள் குவித்த நபருக்கும் பெரிய வெளிச்சமோ பாராட்டோ இல்லாமல் இருக்கிறதென்றால் நம்புவீர்களா?  நம்பித்தான் ஆகணும். ஏனென்றால் அது பெண்கள் கிரிக்கெட்.

1982ஆம் வருடம் ஒரு வார இடைவெளியில் பிறந்த இருவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 35 வயதான மிதாலி ராஜ் மற்றும் ஜுலான் கோஸ்வாமி எனும் இரு ஜாம்பவான்கள் சாதித்து வருவது பின்வரும் தலைமுறைக்கு ஒரு மிகப் பெரும் திறவாக இருக்கும். அந்த அளவுக்கு ஆண்கள் ஆதிக்கம் நிறைந்தது கிரிக்கெட் விளையாட்டு.
 

Mithali shot


சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்தவர் மித்தாலி ராஜ் ,189 போட்டிகளில் 6259 ரன்கள் 50.88 சராசரியில் குவித்து முதல் இடத்தில் உள்ளார். 17 வயதில் தன் பயணத்தைத் தொடங்கி அயர்லாந்து அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியில் 114 ரன்கள், 19 வயதில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 214 ரன்கள் என்று அடித்து தன் வருகையை உலகிற்கு உரத்து பதிவு செய்தவர். இந்தியாவிற்காக பல வெற்றிகள், ஆசிய கோப்பை, உலகக் கோப்பை இறுதிவரை இரண்டு முறை என மித்தாலி ராஜின் சாதனைகள் அவரது ரன்களைப் போலவே அதிகம்.   

சர்வதேச பெண்கள்  ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் கோஸ்வாமி.166 போட்டிகளில் 200 விக்கெட்டுகள். சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது 200வது விக்கெட்டை வீழ்த்தினார். இச்சிறப்பைப் பெறும் முதல் பெண் பந்துவீச்சாளர்  இவர்தான். இவரும் தன் 19 வயதிலேயே இங்கிலாந்து தொடரில் சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கப் போவதற்கான அடையாளமாக சிறப்பான ஆட்டத்தை பேட்டிங், பௌலிங் இரண்டிலும் காட்டினார். அன்று தொடங்கிய புயல் இன்னும் சுழற்றி அடிக்கிறது.  
 

Jhulan bowling


இத்தனை சாதனைகள் இருந்தாலும், சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் சஹால், குல்தீப் ஆகியோருக்குக் கிடைத்த கவனமும் பாராட்டும் பல ஆண்டுகளாக சாதிக்கும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே எதார்த்த உண்மை. ஆனாலும், தங்களைத் தாங்களே தட்டிக் கொடுத்துக் கொண்டு சிறப்பாக ஆடி வருகிறது இந்திய பெண்கள் அணி.  

மித்தாலி, ஜூலான் இருவரும் ஒரு புதிய பாதையை இந்திய பெண்கள் அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அதன் பலன் இப்போது நம் கண்முன்னே மந்தனா, கவுர், வேதா போன்ற பேட்டிங் வரவுகள் மற்றும் தீப்தி, பாண்டே, பிஸ்ட் போன்ற பௌலிங் வரவுகள் என்று தெரிகிறது. இவர்களின் இத்தனை ஆண்டு கால ஆட்டத்திற்கு கிடைத்த பெருமை இதுதான். இவர்கள் சாதித்ததை  தனிப்பட்ட சாதனையாக மட்டும் பார்க்க முடியாது. ஒரு தலைமுறையின் பெண்கள் கிரிக்கெட்டை தாங்கிப் பிடித்ததற்கான பாராட்டு அவர்களைச் சேர வேண்டும். ஆனால், ட்விட்டரில் மித்தாலியின் உடையையும் அதில் தெரிந்த வேர்வையையும் கிண்டல் அடித்துக் கொண்டிருக்கின்றனர் சிலர்.   
 

Indian womens cricket


அனைத்தையும் தாண்டி இவர்கள் இருவரின் முன் வயது இப்பொழுது கேள்விக்குறியாக இருக்கிறது. வரும் டிசம்பரில் 36 வயதைத் தொடுகிறார்கள் இருவரும். சாதனைகள் தொடரும்போது வயது தடுக்குமா என்ன? அதுவும், தோனி, ரோஜர் ஃபெடெரர், விஸ்வநாதன் ஆனந்த் என வயது பிரச்சனையாக பேசப்பட்டவர்கள் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள காலமிது. விருதுகள் பல வாங்கிவிட்டார்கள், வெற்றிகள் பல குவித்துவிட்டார்கள், உலகக்கோப்பையையும் வாங்கிவிட்டால் விடைபெறும் பொழுது முழு நிறைவாக இருக்கும். வாழ்த்துவோம்...         

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.