Skip to main content

ட்வீட்டால் சர்ச்சை; மொயின் அலிக்கு சகவீரர்கள் ஆதரவு - தந்தை அதிர்ச்சி!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

MOEEN ALI

 

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். அவர் தனது ஜெர்சியிலிருந்து, மதுபான நிறுவனத்தின் லோகோவை நீக்குமாறு சென்னை அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்ததாகவும், அதனை சென்னை அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை சென்னை அணி நிர்வாகம் மறுத்தது. மொயின் அலி, மதுபான நிறுவனத்தின் லோகோவை நீக்குமாறு தங்களிடம் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை என தெரிவித்தது.

 

இதற்கிடையே வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், “மொயின் அலி கிரிக்கெட்டில் சிக்காமலிருந்திருந்தால், அவர் ஐஸ்.ஐஸ் இயக்கத்தில் சேர்வதற்காக சிரியாவிற்கு சென்றிருப்பார்” என ட்வீட் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. இங்கிலாந்து வீரர்கள் சாம் பில்லிங்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் மொயின் அலி குறித்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

 

இதற்குப் பதிலளித்த தஸ்லிமா நஸ்ரின், “மொயின் அலி குறித்த தனது பதிவு மறைமுகமான கிண்டல் (SARCASAM) எனவும், இஸ்லாமிய சமூகத்தை மதச்சார்பற்றவர்களாக்க தான் முயல்வதாலும், இஸ்லாமிய வெறியை எதிர்ப்பதாலும் இதனை அவர்கள் ஒரு பிரச்சினையாக மாற்றி, என்னை அவமானப்படுத்த முயல்கிறார்கள்” என்றும் தெரிவித்தார். 

 

இந்தநிலையில் தஸ்லிமா நஸ்ரின் கருத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார் மொயின் அலியின் தந்தை. இதுகுறித்து அவர், "எனது மகன் மொயினுக்கு எதிரான தஸ்லிமா நஸ்ரினின் மோசமான கருத்தைப் படித்ததில் எனக்கு வேதனையும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அவரது விளக்கமளிக்கும் ட்வீட்டில், தனது கருத்தைக் கிண்டல் என்று விவரித்துள்ள அவர், அடிப்படைவாதத்திற்கு எதிராக நிற்கிறேன் என்றும் கூறுகிறார்.

 

அவர் ஒரு கண்ணாடியைப் பார்த்தால், அவர் ட்வீட் என்ன ட்வீட் செய்வாரோ அது அடிப்படைவாதம், ஒரு முஸ்லிம் நபருக்கு எதிரான மோசமான எண்ணம், ஒரு தெளிவான இஸ்லாமிய வெறுப்பு பேச்சு என அறிந்துகொள்வார். சுயமரியாதை அற்ற, மற்றவர்களுக்கு மரியாதை தராத ஒருவர், இவ்வளவு கீழே வளைந்துதான் போவார். உண்மையைச் சொன்னால், நான் மிகவும் கோபமாக இருக்கிறேன், ஆனால் என் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், அவரைப் போன்றவர்கள் எதிர்பார்க்கும் செயலில் ஈடுபடுவேன் என்று எனக்குத் தெரியும். அவரை நான் ஒருநாள் சந்திக்க நேர்ந்தால், உண்மையில் என்ன நினைக்கிறேன் என்று கூறுவேன். தற்போது ஒரு அகராதியை எடுத்து சர்க்காசம் (SARCASM) என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று பார்க்கச் சொல்வேன்" என தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

Next Story

ஸ்லோ பவுன்சர்களால் திணறிய சென்னை; சன் ரைசர்ஸ் எளிதில் வெற்றி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Chennai choked by slow bouncers; Sunrisers win easily!

ஐபிஎல் 2024இன் 18ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் 12 ரன்னிலே வெளியேறினார். பின்னர் கேப்டன் ருதுராஜுடன் இணைந்த ரஹானே பொறுமையாக ஆடினார். ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக ஆடினார். பொறுமையாக ஆடிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜாவுடன் சிவம் துபேவும் இணைந்து அவ்வப்போது அதிரடி காட்டினர். ஆனாலும், ஹைதராபாத் அணி வீரர்களின் ஸ்லோ பவுன்சர்களால் சென்னை அணி வீரர்கள் நினைத்தபடி அதிரடியாக ஆட முடியவில்லை. ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்த மைதானம் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு மைதானத்தின் தன்மை மாறியிருந்தது. சிவம் துபே 45, ஜடேஜா 31, மிட்செல் 11 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக், ஹெட் துணை அதிரடி துவக்கம் தந்தது. முக்கியமாக அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் சென்னை பவுலர்களை திகைக்க வைத்தார். 12 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க்ரம் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அஹமது 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கிளாசென் 10, நித்திஷ் 14 ரன்கள் உதவியுடன் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆடி ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.