உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள்; பஞ்சத்தால் களிமண் ரொட்டியைத் தின்னும் ஹெய்தி மக்களைப் பாருங்கள் என இந்திய மக்களுக்கு சேவாக் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
வடஅமெரிக்காவின் கரீபியன் பகுதியில் இருக்கும், உலகின் மிக ஏழ்மையான நாடு ஹெய்தி. இந்த நாட்டில் வறுமை, பஞ்சம், பசி, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் இன்மை என அன்றாட வாழ்க்கைக்கே மக்கள் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, தொடர் வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போனதில் இருந்து இங்குள்ள மக்களுக்கு மூன்று வேளை உணவு உண்பதே கனவுலகத்தைப் போன்றது. இதனால், அந்த மக்கள் ஒருவகை களிமண்ணில் உப்பு, எண்ணெய் கலந்து அதை ரொட்டி போல் தட்டி சுட்டு தங்கள் பசியைப் போக்கிக் கொள்கின்றனர். அதுவும் அரிதிலும் அரிதாக.
உலகம் முழுவதிலும் உள்ள பலநாடுகளில் உணவுப்பொருட்களை வீணாக்குவது எளிய காரியமாகி விட்ட நிலையில், உணவு இல்லையென்றால் களிமண் ரொட்டி தின்னும் நிலை வரும் என்பதை உணர்த்த ஹெய்தி மக்கள் களிமண் ரொட்டி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ‘வறுமை! களிமண்ணில் செய்த ரொட்டியை ஹெய்தி மக்கள் பசியைப் போக்கிக்கொள்ள தின்கிறார்கள். மக்களே தயவுசெய்து உணவை வீணாக்காதீர்கள். நீங்கள் மதிக்காத ஒன்று மற்றவர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷத்தைப் போன்றதாக இருக்கும். உங்களிடம் அளவுக்கு அதிகமாக இருக்கும் உணவை, தேவைப்படும் இடங்களுக்கு, அதற்காக இருக்கும் உணவு சேமிப்பு மையங்களுக்கு அனுப்பி வையுங்கள்’ என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.