Skip to main content

"மாரத்தான்ல ஓடலாம்... வேணும்னா கிரிக்கெட்ல கூட ஆடலாம்!"  - கங்குலி உடல்நிலை குறித்து மருத்துவர்!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

dada

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கங்குலியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு ஒரு அடைப்பு சரிசெய்யப்பட்டது.

 

கங்குலி இதயத்தில் இருக்கும் மேலும் இரண்டு அடைப்புகளை சரி செய்ய ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அவசியம் என்றாலும் அவர் தற்போது சீராகவும், இதயத்தில் வலி இல்லாமல் இருப்பதாலும், சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்குப் பிறகோ ஆஞ்சியோபிளாஸ்டி செய்யலாம் என மருத்துவக் குழு முடிவுசெய்துள்ளதாக, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் தலைமை அதிகாரி தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், புகழ்பெற்ற இதய மருத்துவ நிபுணர் தேவி ஷெட்டி,  கங்குலியை பரிசோதித்தார். அதன்பிறகு அவர், 'இந்த மாரடைப்பால் கங்குலிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர் இதயத்திற்கு எந்தச் சேதமும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், "இந்த நிகழ்வு அவரது வாழ்க்கை முறையையோ அல்லது ஆயுட்காலத்தையோ பாதிக்காது. அவர் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கையை நடத்தப்போகிறார். கங்குலியின் இதயத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால், இந்த நிகழ்வால் எந்தவொரு பின்னடைவும் இல்லாமல், கங்குலி ஒரு மராத்தானில் பங்கேற்கலாம், ஒரு விமானத்தை இயக்கலாம் அல்லது அவர் விரும்பினால் கிரிக்கெட்டுக்கும் திரும்பலாம். அவர் வீட்டிற்குச் சென்றவுடன் வேலை செய்ய ஆரம்பிக்கலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர், கங்குலியின் இதயத்தில் உள்ள மற்ற அடைப்புகளுக்கு மருந்து மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி என இரண்டு வாய்ப்புகள் அவரிடம் இருக்கின்றன. ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு செல்வது நல்ல யோசனையாக இருக்கும். நாங்கள் இதனை அவரது முடிவிற்கே விட்டுவிட்டோம். இரண்டு வாரம் காத்திருந்து கூட அவர் முடிவெடுக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

கங்குலியின் பயோ-பிக்கை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Aishwarya Rajinikanth to direct Ganguly's bio-pic

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலியின் பயோ-பிக்கை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கவுள்ளதாகக் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. கங்குலி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன், சித்தார்த் மல்ஹோத்ரா அல்லது ரன்பீர் கபூர் யாரேனும் ஒருவர் நடிப்பார்கள் எனச் சொல்லப்பட்டது.  

 

பின்பு ரன்பீர் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு கொல்கத்தாவில் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து விளக்கமளித்த ரன்பீர் கபூர், "கங்குலி ஒரு லெஜண்ட். அவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாவது மிகவும் சிறப்பான ஒன்று. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை" எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் இப்படத்தில் கங்குலி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாகவும் டிசம்பரில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் கதாபாத்திரத்திற்கான பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து  'ஓ சாத்தி சல்' என்ற தலைப்பில் இந்தியில் ஒரு படம் பண்ணவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் அதன் பிறகு அந்த படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது என்பதும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.