Skip to main content

தோனி தொடர்ந்து விளையாடுவாரா?? சிஎஸ்கே அணியின் சிஇஒ தகவல்...

Published on 12/08/2020 | Edited on 12/08/2020

 

Dhoni

 

 

13 வது ஐபிஎல் போட்டி வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. மார்ச் மாதமே நடைபெற வேண்டிய போட்டி நீண்ட நாளுக்கு பின் நடைபெற இருப்பதால் அனைத்து அணிகளும் ஆர்வத்தோடு தயாராகி வருகின்றன. இந்நிலையில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் தோனி 2022ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என கூறியுள்ளார்.

 

அவர் பேசும்போது, "தோனி ஜார்கண்ட்டில் பயிற்சி எடுத்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் பார்த்தேன். 2020 மற்றும் 2021 போட்டிகளில் கண்டிப்பாக விளையாடுவார். 2022ம் ஆண்டு கூட அவரால் உறுதியாக விளையாட முடியும் என்று நினைக்கிறேன். அவரை பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஒரு அணியை திறம்பட வழி நடத்த அவருக்கு தெரியும். அவருடைய பொறுப்பு என்ன என்பதும் அவருக்கு நன்றாக தெரியும்" என்றார்.

 

தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதுவரை கேப்டனாக சென்னை அணியை தோனி வழிநடத்திய 10 தொடரில், சென்னை அணி 8 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

அவமதிப்பு வழக்கு; எம்.எஸ்.தோனிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Supreme Court orders MS Dhoni for Contempt case

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்திய நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்த தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரி, அங்கும் தோனி மீது அதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதில் தன்னுடைய பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாகக் கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டனர். அப்போது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சம்பத்குமார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீடு செய்ய வசதியாகத் தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், சம்பத்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனு தொடர்பாக கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைத் தண்டனைக்கும் தடை விதித்துள்ளது. 

Next Story

தோனி பக்கம் திரும்பிய ராம பக்தர்கள்; இன்ஸ்டாவில் பனிப்போர்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
devotees are criticizing dhoni for not attending the opening ceremony of the Ram temple

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ரூ.2000 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில், கடந்த ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட்டது. இந்தத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு கோயிலை திறந்து வைத்தார். இந்நிகழ்விற்காக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பொது விடுமுறையும் சத்தீஸ்கர், சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு முழுநாள் விடுமுறையும், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், ஹரியானா, ஒடிஷா, ராஜஸ்தான், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அரைநாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. மேலும், நாடு முழுவதும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு அளிக்கப்பட்டது.

ad

இப்படி மாநிலங்களில் பொது விடுமுறை, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு வழங்கி திறக்கப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு இந்தியாவிலுள்ள பிரபல சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்கள் உட்பட அனைத்து துறைகளிலும் உள்ள பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று சிலர் பங்கேற்றனர், சிலர் பங்கேற்கவில்லை. 

அந்தவகையில், கோலிவுட்டிலிருந்து  நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், டோலிவுட்டிலிருந்து நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண் ஆகியோரும், பாலிவுட்டிலிருந்து ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். கிரிக்கெட் நட்சத்திரங்களான ஜடேஜா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உட்பட பலர் கலந்துகொண்டனர். ராமர் கோயில் திறப்பு விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலந்து கொள்ளவில்லை. இதனால், ராம பக்தர்கள் தோனியை விமர்சித்து வருகின்றனர். 

devotees are criticizing dhoni for not attending the opening ceremony of the Ram temple

தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறுதியாக தனது பிறந்தநாளான ஜூலை 7 அன்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவின் கமெண்டில், ராம பக்தர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், தோனியின் ரசிகர்கள் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அப்படி ஒரு ரசிகர், ‘கோயிலுக்குச் செல்வது தோனியின் தனிப்பட்ட சொந்த முடிவு’ என பதிவிட்டுள்ளார்.