இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியான இதில் தோனி சிறப்பு வர்ணனையாளராக கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்களும் இந்திய அணியின் அனைத்து முன்னாள் கேப்டன்களும், இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் இருந்து தங்களுக்குப் பிடித்த தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் சிறப்பு வர்ணனையாளகளாக கலந்துகொள்வார்கள் எனவும், அதற்காக தோனியிடமும் பேசப்பட்டபோது, அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை தோனி இதில் கலந்துகொண்டால், இதுவே அவரது சர்வதேச போட்டிக்கான முதல் வர்ணனையாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.