Dhoni made surprise to tearful young fans

ஞாயிற்றுக்கிழமை (10.10.2021) அன்று நடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான பிளே ஆஃப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கடந்த சீசனில் மோசமாக விளையாடிய சிஎஸ்கே, முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்திலிருந்த தோனி அடுத்தடுத்து பந்துகளைப் பவுண்டரிக்கு அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இதன் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.

Advertisment

மேலும், ஐபிஎல் தொடரில் ஒன்பதாவது முறையாக இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்க உள்ளது. இதற்கிடையே, போட்டியை மைதானத்தில் நேரில் பார்த்துக்கொண்டிருந்த இளம் ரசிகர்கள் இருவர் சிஎஸ்கே வெற்றியைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினர். தோனியின் பேட்டிங்கை மிகவும் ஆர்வமாக நகத்தைக் கடித்தபடி இரண்டு இளம் ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அங்குள்ள பெரிய திரையில் அவ்வப்போது இவர்களின் முகம் காட்டப்பட்டதை தோனியும் கவனித்தார். போட்டி முடிந்ததும் இதுகுறித்து அறிந்த தோனி, அந்த இளம் ரசிகர்கள் இருந்த கேலரி அருகே சென்றார்.

Advertisment

அந்தப் போட்டியில் பயன்படுத்திய பந்தில் கையெழுத்திட்ட தோனி, அதனை கண்ணீர் சிந்திய இருவருக்கும் பரிசாக அளித்தார். இந்த தொடரில் தோனி ஃபார்மில் இல்லை என தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த முக்கியமான போட்டியில் ஆறு பந்துகளில் பதினெட்டு ரன்கள் அடித்து ஃபினிஷராக ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன் மூலம் ரசிகர்கள் பலரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு விண்டேஜ் தோனியை பார்த்ததாக மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை நினைத்து மைதானத்தில் கண்ணீர் வடித்த இளம் ரசிகர்கள் இருவருக்கும் தோனி பந்தைப் பரிசளித்த காட்சி இணையத்தில் வைரலாகிவரும் அதேவேளை, தோனியின் பண்பு குறித்தும் அவரது ரசிகர்கள் சிலாகித்துவருகின்றனர்.