Skip to main content

ஆஸி. முன்னணி வீரர் காயம்! சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமா இந்தியா?

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

david warner

 

 

இடுப்புப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித்தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் விலகியுள்ளார்.

 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. முதல் போட்டியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து நேற்றைய போட்டியிலும் வென்ற ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அதிரடியாகக் கைப்பற்றியது.

 

கடந்த இரு போட்டிகளிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்  நேற்றைய போட்டியில் காயமடைந்தார். போட்டியின் நான்காம் ஓவரில் இந்திய வீரர் தவான் அடித்த பந்தை தடுக்க முற்படுகையில் அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனையடுத்து, மைதானத்தில் இருந்து வெளியேறிய வார்னர் மீண்டும் ஃபீல்டிங் செய்ய வரவில்லை.

 

காயத்தின் தன்மை மற்றும் எதிர்வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளைக் கருத்தில் கொண்டு ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித்தொடரில் இருந்து வார்னர் விலகியுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு முன் தன் உடற்தகுதியை நிரூபிக்கும்பட்சத்தில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த இரு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி முறையே 69, 83 ரன்கள் குவித்த வார்னரின் விலகல் என்பது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி எஞ்சியுள்ள ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுவதற்கும், இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றுவதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

Next Story

“ஆஸ்கரில் சந்திப்போம்” - வார்னரால் டென்ஷனான ராஜமௌலி  

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
ss rajamouli david warner ad viral

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தியாவிலும் ரசிகர்களை வைத்துள்ளார். முன்னதாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிரபலமடைந்த சமயத்தில் அல்லு அர்ஜுன் போல் வசனம் பேசி மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பரவலாக ரசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறைய இடங்களில் புஷ்பா படத்தில் இடம்பெறும் அல்லு அர்ஜுன் ஸ்டைலை செய்து மகிழ்ந்து வந்தார். மேலும், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு புஷ்பா பட ஸ்டைலில் தனது குழந்தையுடன் சமூக வலைத்தளப் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலியோடு இணைந்து ஒரு யுபிஐ விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில், வார்னரிடம் ஃபோன் பேசும் ராஜமௌலி, அவரின் மேட்ச் டிக்கெட்டுக்கு டிஸ்கவுன்ட் கிடைக்குமா என கேட்கிறார். அதற்கு பதிலளித்த வார்னர், உங்களிடம் சம்மந்தப்பட்ட யுபிஐ செயலி பெயரைச் சொல்லி, அது இருந்தால் கேஷ்பேக் கிடைக்கும் என்கிறார். உடனே, ராஜமௌலி, “என்னிடம் வழக்கமான யுபிஐ இருந்தால்...” என கேட்க, “அப்போது டிஸ்கவுன்ட் கிடைக்க நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என வார்னர் சொல்கிறார். 

உடனே வார்னரை வைத்து ராஜமௌலி படமெடுப்பதாக காட்டப்படுகிறது. அவரை நடிக்க வைக்க படாத பாடு படுகிறார் ராஜமௌலி. அதை ஜாலியாக வெவ்வேறு காட்சிகளைக் கொண்டு காட்டப்படுகிறது. ஒரு காட்சியில், “ஆஸ்கரில் சந்திப்போம்” என ராஜமௌலியிடம் வார்னர் சொல்கிறார். அதற்கு டென்ஷனாகி ராஜமௌலி வார்னரை பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Next Story

புத்தாண்டு தினம்; அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட டேவிட் வார்னர்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
David Warner gave the shock announcement New Year's Day

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆஸ்திரேலியா விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (03-01-24) ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் நடைபெறவுள்ளது. சொந்த மண்ணில் விளையாடும் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்திருந்தார், 

இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர், மற்றொரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டேவிட் வார்னர், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்களுடன் இதுவரை 6,932 ரன்களை குவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்காக அதிக ரன்களை குவித்திருந்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் 6வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில், இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில்,தொடக்க வீரரான டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி தனது பங்களிப்பை அணிக்கு வழங்கினார். 

மேலும், இந்தாண்டு டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளதால் டி20 போட்டிகளில் டேவிட் வார்னர் தொடர்ந்து விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2027 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்துள்ளது என்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.