Skip to main content

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 'சென்னை - மும்பை' அணிகளின் கடந்த கால வரலாறு ஒரு பார்வை!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

csk vs mi

 

ஆண்டு தோறும் மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலோ இந்தியாவில் ஐ.பி.எல் திருவிழா தொடங்கிவிடும். இதுகுறித்தான எதிர்பார்ப்பு அவ்வருடத்தின் தொடக்கத்திலேயே, அனைவரிடமும் கரோனா வைரஸ் தொற்றை விட வேகமாகத் தொற்றிக் கொள்ளும். அணி நிர்வாகங்களும் தொடர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தங்களது அணி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்குப் பெரும் தீனியிடத் தவறுவதில்லை.

 

இந்தாண்டும் வழக்கம் போல இவை அனைத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு, கரோனா காரணமாக ஐ.பி.எல் ஒத்திவைக்கப்பட்டது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதனையடுத்து கரோனா தொற்று குறைவாக உள்ள அமீரகத்தில் இப்போட்டியை நடத்தத் திட்டமிட்டு, பின் அதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பி.சி.சி.ஐ வெளியிட்டது. அதன்படி சென்னை மற்றும் மும்பை அணிகள் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், இவ்விரு அணிகளின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகமானார்கள்.

 

காரணம், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி என்பது இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி போன்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் எவ்வாறு எதிர்நோக்குகிறார்களோ, அதைப்போலவே சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியை இந்திய ரசிகர்கள் எதிர்நோக்குவார்கள்.

 

ஐ.பி.எல் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கெடுக்கின்றன. இதில், மற்ற அணிகளுக்கும், அணி ரசிகர்களுக்கும் இடையே இல்லாத போட்டி சென்னை- மும்பை அணிகளுக்கு இடையே மட்டும் ஏன்?? இவ்விரு அணிகளும் எதிரெதிர் துருவமாக உருவெடுத்தது எப்படி??? இரு அணிகளுக்கும் இடையேயான கடந்த கால வரலாறு என்ன?? சற்று பின்னோக்கிப் பார்ப்போம்...

 

ஆரம்பக் காலகட்டங்களில் சென்னை அணியை தோனி வழிநடத்த, மும்பை அணியை சச்சின் வழிநடத்தினார். இந்திய கிரிக்கெட்டின் இரண்டு ஜாம்பவான்களும் இந்திய அணிக்காக விளையாடியபோது, ஒன்றாக அமர்ந்து கைத்தட்டி ரசித்த ரசிகர்கள், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போது தங்கள் அபிமான வீரரை விட்டுக்கொடுக்க முடியாத நிலைக்கு ஆளானார்கள். அதன்பின், இரு அணிகளையும் ஒப்பிடும் பழக்கம் வாடிக்கையானது. அதில், தொடங்கிய மோதல், மும்பை அணிக்கு பல கேப்டன்கள் மாறியபின்னும் இன்று வரை நீடிக்கிறது.

 

Ad


இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகள் மொத்தம் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 11 முறையும், மும்பை அணி 17 முறையும் வென்றுள்ளது. இது, சென்னை அணிக்கு எதிராக ஒரு அணி கொண்டுள்ள அதிகபட்ச வெற்றி விகிதம் ஆகும். தனிநபர் அதிகபட்சமாக இரு அணிகளிலும் உள்ள நடப்பு வீரர்களின் சாதனையை ஒப்பிடும் போது, சென்னை வீரர் வாட்சன் மும்பை அணிக்கு எதிராக 80 ரன்கள் குவித்துள்ளார். மும்பை அணியின் நடப்புக் கேப்டனான ரோகித் ஷர்மா 2011 -ஆம் ஆண்டு 87 ரன்கள் குவித்துள்ளார். இரு அணிகளின் ஒட்டு மொத்த வரலாற்றை ஒப்பிடும் போது, சென்னை அணி வீரர் மைக் ஹஸி 2013 -ஆம் ஆண்டு, 86 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாகும். அதே வேளையில் மும்பை அணி வீரர் ஜெயசூர்யா 117 ரன்கள் குவித்துள்ளது சென்னை அணிக்கு எதிரான மும்பை அணியின், தனிநபர் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.

 

சென்னை அணிக்கு எதிரான அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மும்பை அணி வீரராக லசித் மலிங்கா 31 விக்கெட்டுகளுடன் முன்னணியில் உள்ளார். 12 விக்கெட்டுகள் வீழ்த்தி பொல்லார்ட் இரண்டாம் இடத்தில் உள்ளார். மும்பை அணிக்கு எதிராக சென்னை அணியின் அதிக விக்கெட் வீழ்த்தியவராக, பிராவோ 25 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

 

மும்பை அணிக்கு எதிரான, சென்னை அணி வீரரின் தனிநபர் சிறந்த பந்துவீச்சாக, மோகித் ஷர்மா பந்து வீச்சு உள்ளது. அவர், மும்பை அணிக்கு எதிராக 2014 -ஆம் ஆண்டு நான்கு ஓவர்கள் பந்து வீசி, 14 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியதே இன்று வரை சிறந்த சாதனையாக உள்ளது. மும்பை அணி தரப்பில் சென்னை அணிக்கு எதிராக ஹர்பஜன் சிங் 2011 -ஆம் ஆண்டு நான்கு ஓவர் பந்து வீசி 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாகப் பதிவாகியுள்ளது.

 

Nakkheeran

 

இரு அணிகளும் இறுதிப்போட்டியில் 3 முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளனர். அதில் மும்பை அணி இரண்டு முறையும், சென்னை அணி ஒரு முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

 

Next Story

MI vs CSK: எதிர்பார்ப்பைக் கிளப்பிய "எல் கிளாசிக்கோ"

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
MI vs CSK: An "El Clasico" that sparks anticipation

ஐபிஎல்2024 ஆட்டங்கள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 27 லீக் ஆட்டங்கள் முடிந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களைப் பிடிக்க அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. பெங்களூரு அணி மட்டும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் என்கிற நிலை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் செல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் குஜராத்துடன் தோற்றிருப்பதால், ஐபிஎல் 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று மோதவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் பொதுவாக இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டியானது “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்படும். 

இரு அணிகளும் இதுவரை 36 முறை எதிர்த்து விளையாடியுள்ளனர். அதில் 20 முறை மும்பை அணியும், 16 முறை சென்னை அணியும் வென்றுள்ளனன. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை மும்பை அணியும், 4 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவரை இரு அணிகளும் 4 முறை சந்தித்துள்ளன. அதில் மூன்று முறை மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 2013, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இறுதி ஆட்டங்களில் மும்பை அணியும், 2010 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன.

உலக கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டங்கள் எந்த அளவு விறுவிறுப்பைத் தருமோ அந்த அளவு சென்னை - மும்பை அணிகள் மோதும் ஆட்டங்களிலும் விறுவிறுப்பு இருக்கும்.

ஐபிஎல் 2024 இன் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சிறப்பாக ஆடி வருகிறது. மூன்று ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்து வருகிறது. கேப்டன்சி பிரச்சினை, அணிக்குள் பிளவு என காரணங்கள் கூறப்பட்டு வந்த மும்பை அணி, முதல் மூன்று ஆட்டங்களில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. ஆனால், கடந்த இரண்டு ஆட்டங்களாக சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சம பலத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்று முதல் 4 இடங்களில் தொடர்ந்து நீடிக்க சென்னை அணியும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்குள் முன்னேற மும்பை அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சுவாரசியத்திற்குக் குறை இருக்காது. போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது.

Next Story

ஐபிஎல் 2023; இன்ஸ்டாவை நம்பி ஏமாந்த இளைஞர்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

chennai mumbai match ipl cricket chepauk stadium related issue 

 

சென்னை திருவல்லிக்கேணி டி.பி.கோயில் பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 32). ராயப்பேட்டையில் பட்டயக்கணக்கர் படிப்புகளுக்கான பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது நிறுவனத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் ஐபிஎல் போட்டியை பார்க்க விரும்பி உள்ளனர். இதனால் கடந்த 6 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கான போட்டிக்கான டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக பெற முயன்றுள்ளார். அப்போது ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காததால் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் வழங்கும் கவுண்டர் மூலம் பெற நேரடியாகச் சென்றுள்ளார். ஆனால் அங்கும் கூட்டம் அலைமோதியதால் அவரால் அங்கும் டிக்கெட் பெற முடியவில்லை.

 

அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஐபிஎல் பெயரில் இருந்த வலைதள பக்கத்தில்  ஐபிஎல் டிக்கெட் விற்பனைக்கு இருப்பதை பார்த்த அருண் அந்த பக்கத்தை தொடர்பு கொண்ட போது வினோத் யாதவ் என்பவர் அருணிடம் தன்னிடம் ஐபிஎல் டிக்கெட் இருக்கிறது என்று கூறியுள்ளார். டிக்கெட்டுக்கான பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினால் இணைய வழியிலான டிக்கெட் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய அருண் குமார் 20 டிக்கெட்களுக்கான கட்டணமாக 90 ஆயிரம் ரூபாயை இணையதளம் மூலம் செலுத்தி உள்ளார். ஆனால், அவர் கூறியபடி ஐபிஎல் டிக்கெட் கொடுக்காமல் வினோத் யாதவ் ஏமாற்றி உள்ளார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த அருண் குமார் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு வினோத் யாதவ் பணத்தை தர முடியாது என்று  கூறியுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் அருண் குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.