Skip to main content

பந்தைச் சேதப்படுத்தியதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மீது பரபரப்பு புகார்! 

Published on 16/06/2025 | Edited on 16/06/2025

 

Cricketer Ashwin faces a sensational complaint for ball tampering

தமிழ்நாடு பிரீமியர் லீக் (T.N.P.L.) போட்டி நேற்று முன்தினம் (14.06.2025) நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 45 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 151 ரன்களை குவித்து  9 விக்கெட்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் மதுரை பேந்தர்ஸ் அணி நிர்வாகம் தரப்பிலிருந்து புகார் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “இந்த போட்டியின் போது அஸ்வின் திட்டமிட்டு பந்தைச் சேதப்படுத்தியுள்ளார்.

போட்டியின் போது அஸ்வின் மற்றும் அஸ்வின் தரப்பிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் பந்தைத் துண்டில் ரசாயனத்தைப் பயன்படுத்தி பந்தைச் சேதப்படுத்தியுள்ளனர். ரசாயனத்தைப் பயன்படுத்திய பின்னர் பந்து பேட்டில் படும் போது ஒருவிதமான மெட்டலிக் சவுண்ட் வந்தது. எனவே இது குறித்து விசாரிக்க வேண்டும். மேலும் இந்த போட்டியின் வெற்றிக்கான புள்ளிகளைத் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியிடம் இருந்து பெற்று மதுரை பேந்தர்ஸ் அணிக்கு வழங்க வேண்டும்” எனத் தமிழ்நாடு பிரீமியர் லீக் நிர்வாகத்திற்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கிரிக்கெட் போட்டி தொடர்பான புகாரை அளிக்க வேண்டும் என்றால் போட்டி முடிந்த 24 மணி நேரத்திற்குள்ளாகப் புகார் அளிக்க வேண்டும். ஆனால் மதுரை அணி சார்பில் 24 மணி நேரத்திற்குப் பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து உரிய ஆவணங்களை மதுரை பேந்தர்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அது தொடர்பான ஆதாரத்தை விசாரித்த பின்னர் இந்த புகார் விசாரணைக்கு உகந்ததா? என முடிவு செய்யப்படும். அதன் பின்னர் விசாரணைக்கு உகந்ததாக இருக்கும் பட்சத்தில், இந்த புகார் தொடர்பாக விசாரிக்கக் குழு ஒன்றை அமைத்து விசாரிக்கத் தயாராக இருப்பதாகத் தமிழ்நாடு பிரீமியர் லீக் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.