இத்தாலியில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று டியூரினில் உள்ள அல்லியன்ஸ் மைதானத்தில் ரியல் மேட்ரிட் மற்றும் ஜூவெண்டஸ் அணிக்கும் இடையே இந்தத் தொடரில் காலிறுதிப்போட்டி நடைபெற்றது. ஜூவெண்டஸ் அணியின் சொந்த மண்ணில் இந்தப் போட்டி நடந்ததால், இயல்பாகவே ரியல் மேட்ரிட்ஸ் அணிக்கு எதிர்ப்பு இருந்தது. ஆனாலும், தொடக்கம் முதலே ரியல் மேட்ரிஸ் ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே, ரியல் மேட்ரிட்ஸ் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார். இதனால், வெறுப்படைந்த ஜூவெண்டஸ் ரசிகர்கள் ரொனால்டோவிடம் பந்து வரும்போதெல்லாம் ‘ஓ’வென்று அலறிக்கொண்டேயிருந்தனர். ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் டேனி கர்வஜல் அளித்த பாஸை பை-சைக்கிள் கிக் மூலம் கோலாக்கினார் ரொனால்டோ.
உலகத் தரம்வாய்ந்த கால்பந்தாட்ட வீரர்கள் பலரும் ஆசைகொள்ளும் இந்தவகை கிக்கை, முயற்சிசெய்து பார்த்தவர்கள் வெகுசிலரே. இதனால், அதுவரை ரொனால்டோவை வம்புக்கிழுத்த ஜுவெண்டஸ் ரசிகர்கள் எழுந்துநின்று கைத்தட்டத் தொடங்கினர். ‘அது என்ன பறவையா? அல்லது விமானமா? இல்லை இல்லை.. அது ரொனால்டோ’ போன்ற ட்வீட்டுகளால் ட்விட்டர்வாசிகளும் புகழ்ந்து தள்ளுகின்றனர். இந்தப் போட்டியில் மார்சிலோ அடித்த கோலையும் சேர்த்து 3 - 0 என்ற கணக்கில் ரியல் மேட்ரிட்ஸ் அணி வெற்றிபெற்றது.
ஒருவேளை ரொனால்டோ தனி கிளப்பாக இருந்தால், சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த கிளப் அணிகளில் அவர் 10ஆவது இடத்தில் இருப்பார் என இ.எஸ்.பி.என். தகவல் தெரிவித்துள்ளது.