Skip to main content

நான் இன்னும் “யுனிவர்ஸ் பாஸ்” தான் – மாஸ் காட்டும் கெயில்

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

உலகம் முழுவதும் நடைபெறும் டி-20 போட்டிகள் என்றால் இவர் இல்லாமல் நடைபெறுவதற்கு வாய்ப்பு குறைவுதான். இவர் மைதானத்திற்குள் வந்தால்போதும் பந்து வீச்சாளர்கள் சற்று யோசிப்பார்கள். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் தனது அதிரடி ஆட்டத்தால் மிரட்டி வைத்துள்ளார். ஆனால், தற்போது சர்வதேச  ஒருநாள் போட்டிகளில் இருந்து உலகக்கோப்பை தொடருக்கு பிறகு விடைபெறுவதாக கூறி அனைவரையும் சோகப்பட வைத்துள்ளார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் “யுனிவர்ஸ் பாஸ்” என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் தான்.

 

chirs gayle

 

ஜமைக்காவில் உள்ள லூகாஸ் கிரிக்கெட் கிளப்பில் தனது ஆரம்ப கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் கெயில். லூகாஸ் கிரிக்கெட் கிளப் இல்லாவிட்டால் எங்கு இருந்திருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை, ஒருவேளை வீதியில் இருந்திருப்பேன் என்று கெயில் அந்த கிளப் பற்றி கூறியுள்ளார். மேலும் அந்த கிளப் நர்சரியில் கெயில் பெயரை வைத்து அவரை பெருமைப்படுத்தியுள்ளனர். 
 

1999-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் கெயில். 2001-ஆம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதற்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக 2002-ஆம் ஆண்டு சதம் அடித்தார். 2000-ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
 

2006-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக டி-20 போட்டியில் அறிமுகமானார். முதல் உலகக்கோப்பை டி-20 தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தனி ஒருவனாக நின்று யாரும் காணாத வகையில் முதல் உலகக்கோப்பை போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்து டி-20 வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். 

 

chirs gayle

 

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கெயில், உள்ளூர் டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த வீரர் கெயில் மட்டுமே. 
 

ஐ.பி.எல். போட்டிகளில் புனே அணிக்கு எதிராக 2013-ஆம் ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் யாரும் காணாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 17 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டினார். புனே அணியின் பந்து வீச்சாளர்களை தனது பேட்டிங் மூலம் மிரட்டினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்து ஐ.பி.எல். வரலாற்றில் சரித்திரம் படைத்தார்.  
 

டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை முச்சதம் அடித்த நான்காவது வீரர் அவர். டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று பார்மெட்டிலும் 20 சதம் அடித்த முதல் வீரர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் டெஸ்ட் போட்டிகளில் முச்சதமும், ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமும், டி-20 போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர் கெயில். ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணியில் விளையாடியபோது 30 பந்துகளில் சதம் அடித்து டி-20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.  
 

ஜமைக்கா மற்றும் யு.கே. ஆகிய இடங்களில்  பின்தங்கிய குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் சமுதாயத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள “கிறிஸ் கெயில் அகாடமி” என்ற  அமைப்பை 2015-ஆம் ஆண்டு கெயில் நிறுவினார். தற்போது அந்த அகாடமி விரிவுபடுத்தப்பட்டு இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவி வருகிறது. தரமான வீரர்களுக்கு வெளிநாடுகளில் விளையாடும் வாய்ப்புகளை அளித்து வருகிறது.

 

chirs gayle

 

உலகம் முழுவதும் நடைபெறும் டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர். மைதானங்களில் இவர் டான்ஸ் ஆடும் போது அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைப்பார். ஐ.பி.எல் போட்டிகளில் கோலி மற்றும் கெயில் செய்யும் சிறு சிறு குறும்புத்தனம் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். 
 

103 டெஸ்ட் போட்டிகளில் அதிக பட்சமாக 333 ரன்கள் உட்பட 7215 ரன்கள் எடுத்துள்ளார். 284 ஒருநாள் போட்டிகளில் அதிக பட்சமாக 215 ரன்கள் உட்பட 9727 ரன்கள் எடுத்துள்ளார். உலகம் முழுவதும் 369 டி-20 போட்டிகளில் 12298 ரன்கள், அதிகபட்சமாக 175 ரன்கள், 21 சதங்கள், 76 அரைசதங்கள், 905 சிக்ஸர்கள் என  டி-20 போட்டிகளில் யாரும் தொட முடியாத இடத்தில் தனி ஜாம்பவானாக இருந்து வருகிறார்.   
 

கெயில் 39 வயதில் ஒய்வை அறிவித்த பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்து தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். 6 மாதங்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பி ஒரு சிறந்த கம்பேக் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

 

 

 

Next Story

"டிசம்பர் எப்போது வருமென ஆவலாக உள்ளேன்" - திரைப் பிரபலங்களுடன் போட்டி போடும் கிறிஸ் கெயில்

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

indian popular celebrities and international retired cricketers joins together for super 10

 

பிரபல இந்திய திரை நட்சத்திரங்கள்,  சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து விளையாடும்,  சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பு, கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயில் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த போட்டியில் இந்திய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து 10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்பார்கள். இப்போட்டிகள் டிசம்பர் 2022 இல் பெங்களூருவில் 2 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த லீக் போட்டிகளில் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு துறையைச் சார்ந்த நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடவுள்ளனர்.
இப்போட்டி குறித்து மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் கூறுகையில்.., “உலகம் முழுவதும் உள்ள எனக்கு பிடித்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய திரைத்துறை பிரபலங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இந்த போட்டி ‘டி10’ வடிவில் அமைக்கப்பட்டிருப்பதால் மிகப்பெரிய பொழுதுபோக்கை அளிக்குமென்பது உறுதி, டிசம்பர் எப்போது வருமென ஆவலாக உள்ளேன்" என பேசினார்.  

 

மேலும் இந்த போட்டிகள் குறித்து கிச்சா சுதீப் கூறுகையில், “சூப்பர் டி10 லீக்  கிரிக்கெட் என்பது, திரைத்துறை மற்றும் கார்ப்பரேட் துறையில் உள்ள நண்பர்களுடனும், கிரிக்கெட் வீரர்களுடனும் இணைந்து விளையாடுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த விளையாட்டுகள் எங்களுள் உள்ள மற்றுமொரு பக்கத்தை எங்கள் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தும், இது மிகப்பெரிய பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கும்.

 

இப்போட்டிகள் குறித்து, சூப்பர் 10 கிரிக்கெட்டின் நிறுவனர் மற்றும் இயக்குநரான தினேஷ் குமார் கூறுகையில், “நாங்கள் இந்த ‘கிரிக்கெட்டைன்மென்ட்’ பொழுதுபோக்கு கான்செப்ட்டில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். இது முதல் பதிப்பாகும், மேலும் பார்வையாளர்களுக்கு இந்த போட்டிகள் மூலம் மிகச்சிறந்த பொழுதுபோக்கை  வழங்க உறுதியளித்துள்ளோம். கிரிக்கெட் மீது உலகளாவிய  அளவில் ஆர்வத்தை வலுப்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். பொழுதுபோக்கு மற்றும் கிரிக்கெட் துறையில் மிகப்பெரிய ஆளுமைகளை இந்த போட்டிகளில்  கொண்டுவரவுள்ளோம். உலகளவில் அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் ஒரு அற்புதமான தொடர் விளையாட்டு போட்டிகளை  வழங்க ஆவலாக உள்ளோம்" எனக் கூறியுள்ளார்.  

 

Next Story

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த கிறிஸ் கெயில், ரஸ்ஸல்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

gayle -russell

 

இந்தியாவில் ‘கோவாக்சின்’, ‘கோவிஷீல்ட்’ என்ற இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் வங்கதேசம், ஜிம்பாப்வே உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இந்தியா கரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

 

அந்த வகையில் மேற்கிந்திய தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவிற்கு, இந்தியா தடுப்பூசிகளை வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஜமைக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரும் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து கிறிஸ் கெயில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "ஜமைக்காவிற்கு தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் மோடி, இந்திய அரசு, இந்திய மக்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதற்காக நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்" என கூறியுள்ளார்.

 

அதேபோல் ஆண்ட்ரே ரஸ்ஸல் வெளியிட்டுள்ள வீடியோவில், "பிரதமர் மோடி மற்றும் இந்திய தூதரகத்திற்குப் பெரிய நன்றி சொல்ல விரும்புகிறேன். தடுப்பூசிகள் இங்கே உள்ளன. நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். உலகம் இயல்பு நிலைக்குச் செல்வதை நான் காண விரும்புகிறேன். ஜமைக்கா மக்கள் அதை மிகவும் பாராட்டுகிறார்கள். இந்தியாவும் ஜமைக்காவும் இப்போது சகோதரர்கள்" என தெரிவித்துள்ளார்.