Skip to main content

கோலிக்கு ரெஸ்ட்.. ரகானே கேப்டன்! - இரண்டாவது டெஸ்டில் என்னென்ன மாற்றங்கள்?

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
India

 

 

 

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பின்னர், இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தன்னை நிரூபித்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும், சொந்த மண்ணில் எப்போதும் புலியாகவே செயல்படும் இந்திய அணி இந்த வாய்ப்பு அத்தனை பெரிய விஷயம் கிடையாது என்பதுதான் உண்மை. மூன்று நாட்களுக்கு உள்ளாகவே மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சுருட்டி, பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து ஃபார்மேட்டுகளிலும் அசத்தி மீண்டும் டிராக்கைப் பிடித்திருக்கிறது இந்திய அணி.  
 

ஆனால், ரியல் ஃபைட் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில்தான் இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது இந்திய அணி. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே தன்னை சரிசெய்து கொள்ளவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது. வரும் அக் 12-ஆம் தேதி ஐதராபாத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதற்கான வேலைகளைத் தொடங்க வேண்டும். 
 

தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு சுற்றுப்பயணங்களிலுமே, இந்திய அணி சொதப்பியது பேட்டிங் லைன்-அப்பில்தான். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னர் அதிகம் விமர்சிக்கப்பட்ட விராட் கோலி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும்கூட வெற்றியின் எல்லைவரை சென்று யாரும் ஈடு கொடுக்காததால் தோல்வியைத் தழுவ வேண்டியிருந்தது. அதனால், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட நிபுணர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். 

 

 

அதன்படி, பிரித்வி ஷா, கே.எல்.ராகுலை ஓப்பனிங் இறக்கிவிட வேண்டும். இன் ஸ்விங் சமயங்களில் தடுமாறும் கே.எல்.ராகுல் அதைச் சரிசெய்து கொண்டால் சிறப்பு. இரண்டாவது பேட்ஸ்மேனாக சதீஸ்வர் புஜாராவுக்கு பதில் மாயன்க் அகர்வாலை இறக்கலாம். காரணம், டெஸ்ட் போட்டியில் அதீத அனுபவமிக்க புஜாராவை விட, அந்த இடத்தில் மாயன்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது எதிர்கால பலத்தை அதிகரிக்கும் என்பதுதான். மூன்றாவதாக விராட் கோலிக்கு ஓய்வளித்துவிட்டு அந்த இடத்தில் ரஹானேவை கேப்டன் பொறுப்புடன் களமிறக்கலாம். கேப்டனாக தான் களமிறங்கிய போட்டிகளில் ரஹானேவின் ஆட்டம் பொறுப்பானதாக அமைந்திருக்கிறது. அதேசமயம், அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பும் வாய்ப்பாகவும் அது இருக்கலாம். 
 

நான்காவது இடத்தில் பாண்டியாவுக்கு பதில் அனுமா விஹாரியை இறக்கவேண்டும். இங்கிலாந்து தொடரில் ஒரு ஆல்ரவுண்டராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட விஹாரிக்கு இந்த வாய்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பாண்டியாவைப் போல் அல்லாமல் பேட்டிங்கிலும் நிதானத்தைக் கடைபிடித்தவர் அவர். அவருக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் இறங்குவார். அவர் இயல்பாகவே அதிரடியாக ஆடுவதால், அவருக்கு அந்த இடம் நிரந்தரமானதாக இருக்கலாம். இந்த லிஸ்டில் ஆறு பேட்ஸ்மேன்கள் கட்டாயம் இருக்கவேண்டும். ஆஸ்திரேலிய தொடரில் ஒருவர் குறைந்தாலும் அது ஒட்டுமொத்த அணிக்கும் தடுமாற்றத்தையே தரும்.
 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.