Skip to main content

ஆர்ஆர் vs சிஎஸ்கே: யானை பலம் கொண்ட ராஜஸ்தானை சமாளிக்குமா சென்னை? - முழு அலசல்

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Can RR CSK deal with the mighty Rajasthan in Chennai? Full analysis

 

16 ஆவது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அனைத்து அணிகளும் எதிரணியை வீழ்த்த வியூகங்கள் வகுத்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்  17 ஆவது லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனி களமிறங்கும் 200 ஆவது போட்டியாகும்.

 

சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு ஏற்ற மைதானம் என்பதால் இன்று சுழல் பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்களை வீழ்த்த வாய்ப்பு உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சென்னையில் மொயின் அலி, ஜடேஜா, சாண்ட்னர் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விக்கெட் வேட்டை நிகழ்த்துபவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களாகவே உள்ளனர். சென்னை அணி விளையாடிய 3 போட்டிகளில் 11 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். அதில் மொயின் அலி, ஜடேஜா, சாண்ட்னர் ஆகியோரது பந்துவீச்சு எகானமி 6.50ல் இருந்து 6.75ற்கு உள்ளாகவே உள்ளது. எனவே இன்றைய போட்டியில் சென்னை சுழற்பந்து வீச்சாளர்கள் 10 முதல் 12 ஓவர்கள் வரை வீசக்கூடும். ராஜஸ்தான் அணியிலும் ஜாம்பவான் அஷ்வின், சாஹல் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அஷ்வின் சேப்பாக்கம் மைதானத்தில் அதிகமாக விளையாடிய அனுபவம் உள்ளவர் என்பதால் சென்னை அணி பேட்ஸ்மேனுக்கு தொல்லை கொடுப்பார் என்பதில் ஐயம் இல்லை. அதேபோல் சாஹலும் அதிக விக்கெட்களை கைப்பற்றும் திறன்மிக்கவர் என்பதால் இன்றைய போட்டியிலும் சாதிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

 

இது ஒருபக்கம் இருந்தாலும் வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை ராஜஸ்தான் அணியை ஒப்பிடுகையில் சென்னை அணி பலவீனமாகவே உள்ளது. தொடக்க ஓவர்களிலேயே விக்கெட் வேட்டை நிகழ்த்தும் போல்ட்,  ஜேசன் ஹோல்டர், சந்தீப் சர்மா ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு மிகுந்த பக்கபலமாக உள்ளனர். சுழல் மற்றும் வேகம்  இணைந்து சென்னை அணியின் முதல் 2 முதல் 3 விக்கெட்களை வீழ்த்தினால் சென்னை அணியால் பெரிதான ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடியாமல் சென்றுவிடும். ஏனெனில் ராஜஸ்தான் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் இமாலய இலக்குகளைக் கொண்டே விளையாடியுள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 203 குவித்து 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடியபோது அந்த அணி நிர்ணயித்த 198 ரன்களில் 5 ரன் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்திருந்தது. பின் டெல்லி அணிக்கு எதிராகவும் 199 ரன்களைக் குவித்திருந்தது.

 

மாறாக சென்னை அணி வேகப்பந்து வீச்சில் அதிக அனுபவம் இல்லாத இளம் வீரர்களை நம்பியே உள்ளது.  இந்நிலையில் சென்னை அணி மூச்சுவிடும் வண்ணம் இலங்கை வீரர்கள் மஹீஸ் தீக்‌ஷனாவும் பதிரானவும் சென்னை அணியோடு இணைந்துள்ளனர். சுழலுக்கு ஏற்ற ஆடுகளத்தில் இன்றைய போட்டியில் தீக்‌ஷனா விளையாடலாம் எனத் தெரிகிறது. சென்னை அணியின் பேட்டிங்கில் கெய்க்வாட் மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். அவருக்கு உறுதுணையாக களமிறங்கும் கான்வே நடப்பாண்டில் பெரிதாக ரன் வேட்டை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கான்வே சுழலுக்கு எதிராக நன்றாக ஆடக்கூடியவர். ஆனால் வேகப்பந்து வீச்சிலும் ஸ்விங் ஆகும் பந்தை அடித்து ஆடவும் சிரமப்படுகிறார். கடந்த போட்டியில் அசத்திய ரஹானே இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாடினால் சென்னை அணிக்கு பெரிய பலமாக இருக்கும். அணிக்கு 4 வெளிநாட்டு வீரர்களே இருக்க வேண்டும் என்பதால் ஸ்டோக்ஸ் இல்லாதது அணியை பாதிக்காத வண்ணமே உள்ளது. ஏனெனில் சுழலுக்கு ஏற்ற வகையில் ஆடும் கான்வே, சுழலில் அசத்தும் மொயின் அலி, சாண்ட்னர், தீக்‌ஷனா ஆகியோர் தயாராக இருக்கும் நிலையில் சென்னை அணிக்கு ஸ்டோக்ஸ் இல்லாதது பெரிதான இழப்பை ஏற்படுத்தாது. 

 

அதேபோல் ஸ்டோக்ஸ் அணியில் இருக்கும் பட்சத்தில் அவர் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு, கான்வே 3 அல்லது 4 ஆவது விக்கெட்டாக களமிறக்கப்பட்டால் சுழலுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை கான்வேயும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை ஸ்டோக்ஸும் வெளிப்படுத்தலாம். ராஜஸ்தான் அணியில் பட்லர், ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கத்தை தொடர்ந்து வருகின்றனர். பின்வரும் சாம்சன், ரியான் பராங், ஹெட்மயர், ஜூரல் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு பெரிதும் பலம் சேர்க்கின்றனர். சென்னை ராஜஸ்தான் அணிகளை ஒப்பிடுகையில் பேட்டிங்கில் இரு அணிகளும் சமமாக உள்ள நிலையில் பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி பலமடங்கு மேலாக உள்ளது. அதையும் மீறி சென்னை அணி இன்று வெற்றி பெற்றால் சேப்பாக்கம் அதிரும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

தோனி, கோலியைப் போல் இறுதிவரை நம்பிக்கையுடன் போராட வேண்டும் - ராஜஸ்தான் வீரர் புகழாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Dhoni, like Kohli, has to fight till the end with confidence - praises the Rajasthan player

தோனி, கோலியைப் போல் இறுதிவரை நின்று  நம்பிக்கையுடன் போராட வேண்டும் என்று ராஜஸ்தான் வீரர் பட்லர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் 2024இன் 31ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சால்ட் 10 ரன்களில் வெளியேறினார். பின்னர் நரைன், ரகுவன்ஷி இணை கொல்கத்தா ரசிகர்களை குதூகலிக்க வைத்தது. கடந்த சில ஆட்டங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நரைன் இந்த ஆட்டத்தில் அதிரடியின் உச்சம் தொட்டார்.

ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை தனது நேர்த்தியான பேட்டிங்கின் மூலம் நிமிர விடாமல் செய்தார். 56 பந்துகளில் 6 சிக்சர்கள் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்தார். ஐபிஎல்-இல் இது அவருடைய முதலாவது சதமாகும். ரகுவன்ஷி 30, ஷ்ரேயாஸ் 11, ரசல் 13, ரிங்கு 20 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது.

224 ரன்கள் என்பது இமாலய இலக்காக இருந்தாலும், பலமான பேட்டிங் உள்ளதால் கொல்கத்தாவில் இதை சேஸ் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக ஜெய்ஸ்வால் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சாம்சனும் 12 ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி தாடுமாறியது. இருப்பினும் பட்லருடன் இணைந்த பராக் ஓரளவு அதிரடி காட்டி 14 பந்துகளில் 34 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஜுரேல் 2, அஸ்வின் 8 என சீக்கிரமே நடையைக் கட்டினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மையரும் டக் அவுட் ஆக ராஜஸ்தான் திணறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் அரைசதம் கடந்து நங்கூரம் போட்டு நின்றார் பட்லர். ரோமன் பவலின் அதிரடியான 26 ரன்கள் உதவியுடன் 19 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து தனது சதத்தையும் கடந்தார் பட்லர். 5 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட, அடுத்த 3 பந்துகள் டாட் பாலானது. 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட 5ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஐபிஎல் 2024இன் முதல் சூப்பர் ஓவர் ஆகுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், கடைசி பந்தில் படலர் சிங்கிள் எடுக்க ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

சிறப்பாக ஆடிய பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது “ நீங்கள் நம்பிக்கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் திறவுகோல். நான் எனது பேட்டிங்கில் தடுமாறும்போது எனக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். ஆனால் அதை எதிர்த்து என் எண்ணங்களை மாற்ற முயற்சிப்பேன். பொறுமையுடன் தொடர்ந்து முயற்சி செய்யும் போது சரியாக நடக்கும். இது மாதிரி ஐபிஎல்லில் எனக்கு நிறைய முறை நடந்துள்ளது. தோனி மற்றும் கோலி, இது போல் பல முறை ஆடியதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போல் இறுதி வரை நம்பிக்கையுடன் தொடர்ந்து போராட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். சங்கக்கராவும் அதைத்தான் சொல்வார். பேட்டிங் செய்ய தடுமாறும்போது நாம் அழுத்தத்திற்கு உள்ளாகி தவறான ஷாட் மூலம் விக்கெட்டை பறிகொடுப்போம். கொஞ்சம் நிதானமாக் யோசித்து பொறுமையாக ஆடினால் நமக்கான ஒரு ஷாட் கிடைக்கும். அது நம்பிக்கையைக் கொடுக்கும் என்று. ஒரு பெரிய சேசிங்கில் கடைசி பந்தில் ரன் எடுத்து வெற்றி பெறுவது மனதுக்கு நிறைவானது” என்றார்.