முதல் குழந்தையை பெற்றெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா மற்றும் சஞ்சனா தம்பதியினருக்கு, பாகிஸ்தான் வீரர் ஒருவர் தனது வாழ்த்துகளை தெரிவித்து, அன்புப் பரிசையும் வழங்கியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டத்தில் நேற்று (10-09-2023) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் பேட்டிங்கின் பாதியிலேயே, மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரிசர்வ் நாளான இன்று ஆட்டம் தொடரவிருக்கிறது.
ஆசியக் கோப்பை 2023ன் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டம் நேற்று (10-09-2023) கொழும்பு, பிரேம தாசா மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 100 ரன்களை எளிதாகக் கடந்தது. பின்னர், அரை சதம் அடித்த ரோகித் 56 ரன்களில் வெளியேற இந்தியாவின் முதல் விக்கெட் 121 ரன்னில் விழுந்தது. இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 24.1 ஓவரில் இந்திய அணி 147 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. இன்றைக்கு (11-09-2023) இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து 50 ஓவர் வரை விளையாடும். பின்னர், பாகிஸ்தான் இலக்கைத் துரத்தும். ஆனால், இன்றும் கொழும்புவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இன்றைய ஆட்டமும் பாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த வாரம் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் தம்பதியினர் தங்களது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தனர். தங்கள் மகனுக்கு அங்கத் ஜஸ்பிரித் பும்ரா என்றும் பெயர் சூட்டியுள்ளனர். பல்வேறு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அஃப்ரிடி, பும்ராவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து, அன்புப் பரிசையும் வழங்கியுள்ளார். இந்தப் பரிசை வாங்கிய பும்ரா தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வமான எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல், அந்த பதிவில் “மகிழ்ச்சியை பரப்புங்கள்” என்ற வாசகத்தையும் எழுதி பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டது ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.