Skip to main content

தனி ஒருவனாக அணியை தன் தோளில் சுமந்தவர்...

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

2003-ஆம் ஆண்டு நடந்த ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடியபோது டீப் மிட் விக்கெட்டில் இருந்த ஃபீல்டரை மாற்றி டீப் பாயிண்டில் நிறுத்தினார் கில்கிறிஸ்ட். இப்போது மொத்தம் டீப் பாயிண்டில் இரு ஃபீல்டர்கள். தவறானது என்று முனுமுனுக்கிறார் பேட்ஸ்மேன். அடுத்த பந்தில் டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸ் பறக்கிறது.

 

lara

 

ஆஃப் சைடில் அடிக்கச் சொல்லி சவால் விடுகிறார் கில்கிறிஸ்ட். தற்போது டீப் பாயிண்டில் ஃபீல்டு செட் செய்யப்பட்ட இரு ஃபீல்டர்களுக்கும் இடையில் இரண்டு அடுத்தடுத்த பவுண்டரிகள் அடிக்கப்படுகிறது. அந்த பேட்ஸ்மேன்தான் லாரா எனும் ஜாம்பவான். நேர்த்தியாக ஃபீல்டர்களுக்கு இடையே பந்தை அடிப்பதில் லாரா ஒரு மேதை.      
 

வெஸ்ட் இண்டீஸ் அணி அடித்த மொத்த ரன்களில் 20% ரன்கள் லாரா அடித்ததுதான். டெஸ்ட் போட்டிகளில் அணி வீரர்கள் எடுத்த மொத்த ரன்களில் 40% ரன்களுக்கு மேல் 20 முறை எடுத்துள்ளார். தான் விளையாடிய காலங்களில் தனி ஒரு வீரராக அணியை தன் தோளில் சுமந்துள்ளார் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் விவரிக்கின்றன. இன்று லாராவின் பிறந்தநாள். 
 

லாரா குடும்பத்தில் 11 குழந்தைகள் இருந்தனர். லாரா 10-வது குழந்தை. ஆறு வயதாக இருந்தபோது, அவரது தந்தை உள்ளூரில் ஹார்வர்டு பயிற்சியளிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தார். சிறு வயதிலிருந்தே பயிற்சியில் ஈடுபட்டதன் மூலம் பேட்டிங் நுட்பத்தை நன்கு அறிந்திருந்தார்.
 

லாராவுக்கு 1989-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தந்தை இறந்ததன் காரணமாக அப்போது பங்கேற்க முடியவில்லை. 1990-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 
 

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 2004-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக கேப்டனாக இருந்து 43 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 400* ரன்கள் விளாசினார். அதற்கு முன்பு இங்கிலாந்து அணியுடன் 1994-ஆம் ஆண்டு 375 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். 

 

lara

 

131 டெஸ்ட் போட்டிகளில் 11953 ரன்கள், அதிகபட்சமாக 400* ரன்கள், சராசரி 52.89. 299 ஒருநாள் போட்டிகளில் 10405 ரன்கள், அதிகபட்சமாக 169 ரன்கள், 40.49 சராசரி.   
 

லாரா ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுடன் அதிகமாக விளையாடியுள்ளார். ஆனால் அவர் இந்திய அணியுடன் அதிகம் விளையாடாத காரணத்தால் அவரின் சாதனைகள், திறமைகள் இங்கு பெரும்பாலும் அறியப்படாமல் உள்ளது.  
 

சச்சின் விளையாடிய காலகட்டத்தில் சச்சினுக்கு நிகராக மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வலம்வந்த லாரா பல இக்கட்டான சூழ்நிலைகளில் அணிக்காக தனி ஒரு வீரராக லோவ் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் அதிகமாக விளையாடியுள்ளார். 
 

பொதுவாக நல்ல திறமை உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் போதுமான ஆதரவு, அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர். இதை கவனத்தில் கொண்டு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரா ஓய்வின் போது வலியுறுத்தியிருந்தார். 
 

லாரா பற்றிய தகவல்கள் 
 

லாராவின் தாயார் புற்றுநோயால் இறந்ததன் காரணமாக பெர்ல் மற்றும் பண்டி லாரா அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு புற்றுநோய் சிகிச்சை மையம் வைத்துள்ளார்.  
 

மிகச்சிறந்த இடதுகை பேட்ஸ்மேனான லாரா 1993-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சிட்னி மைதானத்தில் முதல் சதமாக 277 ரன்கள் அடித்து அசத்தினார். அதன் நினைவாக தனது குழந்தைக்கு சிட்னி என்ற பெயர் வைத்துள்ளார். 
 

2009-ஆம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா வெஸ்ட் இண்டீஸ் வந்தபோது, நட்சத்திர வீரரான லாராவை சந்தித்தார். லாராவின் திறமையை பாராட்டி "மைக்கேல் ஜோர்டன் ஆஃப் கிரிக்கெட்" என்று பெருமைப்படுத்தினார். 
 

சச்சின் டெண்டுல்கர் லாராவின் நெருங்கிய நண்பர். சச்சின் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த லாராவின் சாதனையை முறியடித்த போது,  சச்சினுக்கு பரிசு வழங்கினார். மேலும் சச்சினின் புகழ்பெற்ற மும்பை உணவகத்தை லாரா திறந்து வைத்தார். "உலகின் சிறந்த வீரர் சச்சின்" என்று லாரா கூறினார். 

 

lara

 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 9 இரட்டை சதம், 2 முச்சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 
 

டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுடனும் சதமடித்துள்ளார்.
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்து கலக்கியுள்ளார். ஒரே ஓவரில் 26 ரன்களும் எடுத்துள்ளார். 
 

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் கிரிக்கெட்டர் விருதை 1995-ஆம் ஆண்டு பெற்றார்.  
 

லாரா பற்றி பிரபலங்களின் கருத்துகள் 

 

ஸ்பின் மற்றும் மீடியம் ஃபாஸ்ட் பவுலிங்கில் லாரா விளையாடுவதை போல வேறு எந்த வீரரின் ஆட்டத்தையும் கண்டதில்லை. – மைக்கல் ஹோல்டிங். 
 

அணியை சோதனை காலங்களில் தனது தோளில் சுமந்து அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். – ரிக்கி பாண்டிங்.
 

மிகச்சிறந்த வீரர் என்றும், பவுலிங் செய்ய கடினமான வீரர் லாரா தான் என்றும் முரளிதரன் கூறியுள்ளார். 2001-ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் லாரா விளையாடிய 6 இன்னிங்ஸ்களில் 688 ரன்கள், சராசரி 114.66.  

 

 

 

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

அயோத்தி கோயில் திறப்புக்கு 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு! 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

7 thousand celebrities are invited for the opening of the Ayodhya temple!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிக பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசை கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மத தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர்.