Skip to main content

தொடங்குகிறது பா-க டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் யார் உள்ளே? யார் வெளியே?

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

Border gavaskar Test Series Begins; Who is in the Indian team? Who's out?

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் நாக்பூரில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்து ஆஸ்திரேலியா மோதும் ஆஸிஸ் தொடர் போன்று, சமீப காலங்களில் அதிக கவனம் பெற்று வரும் டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் கோப்பை. 2023 ஆண்டுக்கான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இன்று நாக்பூரில் துவங்குகிறது. 

 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் பாதிக்கு மேல் கோலி மற்றும் புஜாராவை நம்பியுள்ளது.  காயத்திலிருந்து மீண்ட ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு நம்பிக்கை மற்றும் பலத்தைக் கொடுக்கும். அணிக்கான 11 வீரர்களை தேர்வு செய்வது குறித்த கேள்விகள் உள்ளன. ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்ததால் அவர் களமிறங்கும் 5 ஆவது இடத்தில் சுப்மன் கில் அல்லது சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படலாம். ஏனெனில் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்டின் ஆக்ரோஷமான ஆட்டம் இதற்கு முன்பு இந்திய அணிக்கு பலமுறை கை கொடுத்துள்ளது. எனவே சூர்யகுமார் அல்லது சுப்மன் கில் அந்த இடத்திற்கு தேர்வு செய்யப்படலாம். 6 ஆவது இடத்திற்கு அக்ஸர் படேலை கொண்டு இந்திய அணி களமிறங்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்திய அணி மூன்று சுழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் மனநிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டுமெனில் அணியின் சுழல் பிரிவு மிகச் சிறப்பாக செயல்படுவது அவசியம். நாக்பூர் ஆடுகளமும் சுழலுக்கு கை கொடுக்கும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு கூடுதல் பலம். தற்போது இந்தியாவில் அஷ்வின், ஜடேஜா, குல்தீப், அக்ஸர் என நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதே போல் ஆஸ்திரேலிய அணியிலும் நாதன் லயன், ஸ்வெப்சன், ஆஸ்டன் என சுழல் ஜாம்பவான்கள் இந்திய அணியின் விக்கெட்களை வீழ்த்தக் காத்திருக்கின்றனர். இரு அணிகளுக்கு இடையே அதிக விக்கெட்கள் பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர்களே முதல் நான்கு இடங்களில் உள்ளனர். கும்ப்ளே 111 விக்கெட்களுடன் முதல் இடத்திலும் ஹர்பஜன் சிங் 95 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும் லயன் 94 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்திலும் அஷ்வின் 89 விக்கெட்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். 

 

போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் பீல்டிங் மிக முக்கியம். இந்த தொடரில் ஸ்லிப் கேட்ச்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கும். அதனால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கமாக நின்று கேட்ச் செய்வது, ஸ்லிப் பகுதிகளில் கேட்ச் செய்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்துகிறோம். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல், “அணியில் இடம் பிடித்துள்ள 15 வீரர்களும் உயர்தர வீரர்கள். அவர்களில் யார் வேண்டுமானாலும் போட்டி நாளில் வெற்றி தேடிக் கொடுப்பவராக மாறலாம். குறிப்பிட்ட டெஸ்ட் போட்டிக்கு எது சிறந்தது என்பதை கருத்தில் கொண்டே அந்த போட்டிக்கான வீரர்கள் தேர்வு இருக்கும்.” என்றார்.

 

மறுபுறம் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து காயம் காரணமாக வீரர்கள் விலகிய வண்ணம் உள்ளனர். அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜார்ஜ் ஹேசில்வுடிற்கு தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இன்னும் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வராத காரணத்தால் இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியின் போது பந்து தாக்கி அவரது வலது ஆட்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் டெஸ்டில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் போட்டிகளில் விளையாடாத நிலையில் ஹேசில்வுட் விலகி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

 

இந்தியா உத்தேச அணி: கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்/சுப்மான் கில், ரவீந்திர ஜடேஜா, கே.எஸ்.பாரத், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்

 

ஆஸ்திரேலியா உத்தேச அணி: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்/மேட் ரென்ஷா, அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், நாதன் லியான்

 

போட்டி இன்று காலை 9.30 மணியளவில் துவங்கும். நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடக்கும்

 

 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.