Skip to main content

இந்தியாவிற்கு வா.. அதுதான் உன்னோட கடைசி சீரிஸ் - சீண்டிய ஆஸி. கேப்டனுக்குப் பதிலளித்த அஸ்வின்!

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

ashwin paine

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி, சமனில் முடிந்தது. கடைசி நாளான இன்று, விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களையும், அஸ்வின் 128 பந்துகளில் 39 ரன்களையும் எடுத்து, போட்டி சமனில் முடிய காரணமாய் இருந்தனர்.

 

ஹனுமா விஹாரி - அஸ்வின் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய ஆஸ்திரேலிய அணி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெயினுக்கும், அஸ்வினுக்கும் நடந்த உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.

 

அந்த உரையாடலில், அஸ்வினின் கவனத்தைத் திசை திருப்பச் செய்யும் விதமாக, டிம் பெயின், ‘நீ காபாவிற்கு (நான்காவது டெஸ்ட் நடக்குமிடம்) வருவதற்கு காத்திருக்க முடியவில்லை’ என கூறினார். அதற்கு அஸ்வின், ‘நீ இந்தியா வருவதற்கு என்னாலும் காத்திருக்க முடியவில்லை. அது உனது கடைசி தொடராக இருக்கும்’ என அதிரடியாக பதிலளித்தார்.

 

மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்த நிலையில், அஸ்வின் - பெயின் இடையேயான இந்த உரையாடல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.