ADVERTISEMENT

அன்று 8-ஆம் வகுப்பு, 8 கிராண்ட்ஸ்லாம்... இன்று எட்டாத சமூக சேவை...

03:00 PM Mar 05, 2019 | tarivazhagan

பெரும்பாலான பிரபல விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு பிஸ்னஸ் அல்லது வருமானத்தை பிரதானமாக்கி விடுவார்கள். சிலர் மட்டுமே சமுதாயத்திற்கும், தான் சார்ந்த விளையாட்டிற்கும் சேவை செய்யும் மனப்போக்கு கொண்டவர்கள். தன் வாழ்க்கையில் கல்வியை அதிகம் கற்காத முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசி, தற்போது கல்வியையும், விளையாட்டையும் சிறுவர்களுக்கு ஊக்குவிக்கும் பொருட்டு உலகம் முழுவதும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தற்போது இந்தியாவில் குழந்தைகளுக்கு கல்வியை எளிமைப்படுத்தும் விதமாக புது ப்ராடக்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

1994-ஆம் ஆண்டு ஆண்ட்ரே அகாசி என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவினார். அதன் மூலம் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு உதவி வருகிறார். இவரின் இந்த முயற்சிகளுக்கு 1995-ஆம் ஆண்டு ஏ.பி.டி. ஆர்தர் ஆஷே சிறந்த மனிதாபிமான விருது வழங்கப்பட்டது. இந்த நூற்றாண்டின் சிறந்த சமூக சேவை செய்யும் விளையாட்டு வீரராக அகாசி உள்ளார் என்று பலரும் கூறுவது உண்டு.

அகாசியின் பாய்ஸ் & கேர்ள்ஸ் கிளப் மூலம் ஆண்டுக்கு 2,000 குழந்தைகளுக்கு டென்னிஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண்ட்ரே அகாசி கல்வி நிறுவனமானது V20 புட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை வழங்கி வருகிறது.

2000-களில் மிகவும் பிரபலமான டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசி. எட்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற அகாசி, அவரது பார்ட்னருடன் இணைந்து அமெரிக்காவில் 90 சார்ட்டர் பள்ளிகளை அமைக்க 2013-ஆம் ஆண்டு முதல் $1 பில்லியன் தொகையை வழங்கியுள்ளார். பொதுநிதியை கொண்டு நடத்தப்படும் பெரும்பாலான சார்ட்டர் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதில்லை.

டிஸ்லெக்ஸியா குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் அகாசி. அவர்களுக்கு ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த எழுத்தறிவு தயாரிப்புகளை உருவாக்கும் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட ஸ்டார்ட் அப் மூலம் உதவி வருகிறார். இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஸ்கொயர் பாண்டா என்ற ப்ராடக்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ப்ராடக்ட் டிஸ்லெக்ஸியா குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்றலை எளிமைப்படுத்தும். சிறு வயதிலேயே குழந்தைகள் மத்தியில் டிஸ்லெக்ஸியாவின் சிக்கலை உணர செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ப்ராடக்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஸ்லெக்ஸியா குறைபாடு என்பது கற்கும் திறன்கள் மற்றும் மொழியைப் புரிந்துகொண்டு பேசுதல் ஆகியவற்றில் ஏற்படும் ஒரு குறைபாடு தான். டிஸ்லெக்ஸியா பிரச்சனை கொண்ட குழந்தைகளுக்கு வாசித்தல், எழுதுதல், ஸ்பெல்லிங் சொல்லுதல் அல்லது பேசுதல் ஆகியவற்றில் சிரமங்கள் இருக்கும். ஸ்கொயர் பாண்டா என்பது 2-8 வயது குழந்தைகள் அறிந்துகொள்ளும் வகையிலான கற்றல் அமைப்பு. இது ஃபோன் மற்றும் டேப்லேட் மூலம் குழந்தைகள் கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கல்வியின் மீது மிகுந்த ஆர்வத்திற்கு முக்கியக் காரணம் அதிகம் கல்வி கற்காமல் எட்டாவது வரை மட்டுமே படித்தது தான் என்று ஸ்கொயர் பாண்டாவை இந்தியாவில் அறிமுகப்படுத்த மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அகாசி கூறினார். எப்போதுமே எந்தவிதமான தேர்வுமின்றி, கல்வியுமின்றி உலகத்தில் சிறந்தவனாக இருந்தபோதிலும் கல்வி மீதான ஆர்வம் அவரிடம் அதிகம் இருந்தது.

அகாசியின் அப்பா டென்னிஸ் விளையாட வேண்டும் என்று கட்டாயம் செய்ததால், படிப்பை நிறுத்திவிட்டு டென்னிஸ் விளையாட்டிற்கு வந்தவர் அமெரிக்காவை சேர்ந்த அகாசி. ஒரு காலத்தில் டென்னிஸ் விளையாட்டை விரும்பாமல் இருந்தார் அகாசி. பின்பு டென்னிஸ் விளையாட்டில் நம்பர் 1 இடத்தையும் அடைந்தார் அகாசி.

அகாசியின் சுயசரிதையான “ஓபன்: ஆன் ஆட்டோபியோகிராஃபி” ஜே.ஆர்.மியூஹெண்டரின் உதவியுடன் எழுதப்பட்டு நவம்பர் 2009-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2017-ஆம் ஆண்டு அகாசியின் ஆவணப்படமான “லவ் மீன்ஸ் ஜீரோ” உருவானது. இது அகாசி மற்றும் அவரது பயிற்சியாளர் நிக் பொல்லட்டெரிக்கு இடையேயான உறவை வெளிப்படுத்தியது.

ஒரு காலத்தில் டென்னிஸ் விளையாட்டை வெறுத்துவிட்டு, பின்னர் அதே விளையாட்டில் நம்பர் 1 வீரர், தனக்கு கிடைக்காத கல்வியை மற்றவர்களுக்கு கிடைக்கும்பொருட்டு உதவிவரும் சேவை என பல விஷயங்களில் அகாசி எதிர்கால தலைமுறைக்கு ஒரு ரோல் மாடல் வீரராகவும், சமூக சேவகராகவும் உள்ளார். இவரை போன்ற வீரர்களை காண்பது அரிது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT