Skip to main content

சென்னை சறுக்கியது எங்கே? ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும்... ஓர் அலசல்!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

dhoni

 

 

ஆண்டு தோறும் மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலோ இந்தியாவில் ஐ.பி.எல் திருவிழா தொடங்கிவிடும். இதுகுறித்தான எதிர்பார்ப்பு அவ்வருடத்தின் தொடக்கத்திலேயே, அனைவரிடமும் கரோனா வைரஸ் தொற்றை விட வேகமாக தொற்றிக்கொள்ளும். அணி நிர்வாகங்களும் தொடர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தங்களது அணி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பெரும் தீனியிடத் தவறுவதில்லை. இந்தாண்டும் வழக்கம் போல இவை அனைத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு, கரோனா காரணமாக ஐ.பி.எல் ஒத்திவைக்கப்பட்டது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதனையடுத்து கரோனா தொற்று குறைவாக உள்ள அமீரகத்தில் இப்போட்டியை நடத்த திட்டமிட்டு, பின் அதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பி.சி.சி.ஐ வெளியிட்டது.

 

அமீரகத்தில் முகாமிட்டு அனைத்து அணிகளும் உற்சாகமாக தங்களைத் தயார்படுத்த ஆரம்பித்த வேளையில், சென்னை அணிக்கு மட்டும் சிக்கல்கள் எழ ஆரம்பித்தன. முதலில் ஒரு பந்துவீச்சாளர் மற்றும் உதவியாளர் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், சென்னை அணி வீரர்கள் மட்டும் கரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் முடங்கியிருந்தனர். இதனால், சென்னை அணியின் முதற்கட்ட பயிற்சியானது தடைபட்டது. சூழலுக்குப் பொருந்த முடியாமல் சென்னை அணி வீரர்கள் தடுமாறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.

 

முன்னணி வீரர்களான ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதும் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. இவ்விரு வீரர்களின் விலகலால் அணிக்குப் பெரிய அளவில் பாதிப்பில்லை என்று அணி நிர்வாகத்தால் முன்னர் கூறப்பட்டு வந்தாலும், அது ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்பதை அணி நிர்வாகம் தற்போது அவதானித்திருக்கும்.

 

பல பின்னடைவுகள் இருந்தாலும், மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியை சென்னை அணி வெற்றியுடன் துவக்க, பரம எதிராளியான மும்பையை வீழ்த்தியது, துவக்கத்தில் எழுந்த தடைகளில் இருந்து  மீண்டு வந்தது என சென்னை அணி ரசிகர்கள் கூடுதல் உற்சாகமானார்கள். அவ்வெற்றி தந்த உற்சாகம் அடங்குவதற்குள் அடுத்தடுத்த தோல்விகள் கண்டு தற்போது அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. 13 வருட ஐ.பி.எல் வரலாற்றில், பங்கெடுத்த அனைத்து தொடர்களிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி முதல்முறையாக துவக்கச் சுற்றிலேயே வெளியேறுவது சென்னை அணி ரசிகர்களை வருத்தத்திற்கும், எதிரணி ரசிகர்களின் கிண்டல்களை எதிர்கொள்ள முடியாத நிலைக்கும் உள்ளாக்கியுள்ளது. 

 

சென்னை அணியின் தோல்விக்கு ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு காரணங்களை முன்வைத்து வருகிறது. இவ்வருட ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதுமே, பலரது கவனமும் சென்னை அணி மீதே திரும்பியது. 'மிதமான தட்பவெட்ப நிலை கொண்ட இடங்களில், வயது மூத்தவர்களைக் கொண்டு விளையாடிப் பழகிய சென்னை அணி அமீரகச் சூழலை இந்த வீரர்களைக் கொண்டு எப்படி எதிர்கொள்ளும்' என்ற கேள்வி எழுந்தது. இருந்தபோதிலும், அணி கேப்டன் தோனி மீது இருந்த அதீத நம்பிக்கை இக்கேள்விகளை எல்லாம் தவிடு பொடியாக்கியது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட தோனி, இனி எந்த நெருக்கடியும் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அவர் மீது ரசிகர்கள் கொண்ட அளவுக்கதிகமான எதிர்பார்ப்பே, களத்தில் தோனியை தடுமாற வைத்துவிட்டது. நடப்பு தொடரில் சென்னை அணி வெளிப்படுத்திய ஆட்டத்தை அடிப்படையாக வைத்து தோல்விக்கான காரணத்தை ஒரு வரியில் கூறவேண்டுமென்றால், ஒரு அணியாக இணைந்து ஆட்டத்தை வெளிப்படுத்தாததே எனக் கூறலாம். வழக்கமாக துவக்கப்போட்டி முதலே யார் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்று தெளிவாக தீர்மானித்து விளையாடக்கூடிய சென்னை அணி, இவ்வருடம் மட்டும் யாரை எந்த இடத்தில் இறக்குவது என்பதில் உறுதியான முடிவெடுக்க முடியாமல் தடுமாறியது. அணியின் கேப்டனான தோனி களமிறங்க வேண்டிய இடம் எது என்பதே உறுதியாக தீர்மானிக்கப்படாதது அபத்தத்தின் உச்சம்.

 

அணியில் வயதானவர்கள் நிரம்பி விட்டனர் என்ற குற்றச்சாட்டு கடந்த மூன்று வருடமாகவே எழுந்து வந்தாலும், அது எவ்வளவு உண்மை என்பதை அமீரகச் சூழல் வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டது. கடினமான தட்பவெட்பநிலை கொண்ட சூழலில் விளையாடும்போது வீரர்கள் தடுமாறுவது இயல்பானதுதான். உலகின் சிறந்த உடற்தகுதி கொண்ட வீரர்களுள் ஒருவரான விராட் கோலியே இந்த சூழலில் தடுமாறினார் எனும்போது, சற்று வயது மூத்தவர்கள் தடுமாறுவதில் ஆச்சரியமில்லை. அதேவேளையில், இதை காரணமாகக் கூறிக்கொண்டே இருக்க முடியுமா என்பதை அணி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் என சரியான கலவையில் அணி அமைவதே எதிர்காலத்தில் சென்னை அணியை முன்னணி அணியாக ஐ.பி.எல் வரலாற்றில் தக்க வைக்க உதவும்.

 

எத்தனை போட்டிகளில் தோற்றாலும் பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம் என்று எதிரணி ரசிகர்களின் கேலி, கிண்டல்களுக்கு எல்லாம் அசராமல், தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களே சென்னை அணியின் மிகப்பெரிய பலமாகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என அதிரடி மாற்றங்களை அணித் தேர்வில் செய்து, எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய ஒரு அணியாக சென்னை அணி மீண்டு(ம்) வர வேண்டும் என்பதே விசில் போடத் தயாராக இருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

சி.எஸ்.கே. Vs டி.சி! - துபாயில் நடந்த சுவாரஸ்யம்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Rishap Pant and MS Dhoni playing tennis

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் தனது தாயைச் சந்திக்க சென்றபோது, உத்தரகாண்ட் மாநிலத்தில் அவர் சென்ற கார் பயங்கர விபத்தில் சிக்கியது. இதில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது மீண்டு வந்துள்ளார். 

இந்த பயங்கர விபத்தின் காரணமாக 2023ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் ரிஷப் பண்ட் விளையாட முடியாமல் போனது. அவர் காயங்களில் இருந்து விரைவில் மீண்டு, தனது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். 

இந்நிலையில், வரும் 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல்.க்கான மினி ஏலம் நேற்று (19ம் தேதி) துபாயில் நடைபெற்றது. இதில் அணிகள் தங்களுக்கு தேவையான விளையாட்டு வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். இந்த ஏலத்தின் போது, டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பங்கேற்றிருந்தார். அந்தப் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியானதும் நிச்சயம் இந்த ஐ.பி.எல். போட்டிகளில் ரிஷப் பண்ட் விளையாடவிருக்கிறார் என அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். 

அதேபோல், சென்னை அணியின் கேப்டனான தோனியும் நேற்று துபாயில் இருந்தார். ஆனால், அவர் ஐ.பி.எல். ஏலம் நடக்கும் இடத்திற்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று மாலை ரிஷப் பண்ட்-டும், தோனியும் துபாயில் டென்னிஸ் விளையாடியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.