Skip to main content

கலக்கும் விஜய் சங்கர், கேதர் ஜாதவ்... சொதப்பும் அம்பதி ராயுடு...

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

“பேட்டிங்கில் நம்பர் 4 இடம்தான் இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. பல வீரர்களை அந்த இடத்தில் முயற்சித்தோம். ஆனால் அணியின் தேவையை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை. அம்பதி ராயுடுவின் அனுபவம், உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் அணிகளை பல முறை வெற்றி பெற செய்துள்ள பேட்டிங் கவனிக்கத்தக்கவை. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடிய ராயுடு நல்ல புள்ளிவிவரங்களை கொண்டுள்ளார். அவர் நம்பர் 4 பேட்ஸ்மேனாக இருப்பார்” இது சென்ற வருடம் அக்டோபர் மாதம் ஒரு பேட்டியின்போது விராt கோலி இந்தியாவின் நம்பர் 4 பேட்டிங் குறித்து தெரிவித்த கருத்து. 

 

vijay

 

இந்திய கேப்டனின் இந்த கருத்துக்கு பிறகு 15 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ராயுடு 464 ரன்களை எடுத்துள்ளார். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மேட்ச் வின்னிங் சதம், நியூசிலாந்துக்கு எதிராக மேட்ச் வின்னிங் 90 ரன்கள் அடங்கும். இந்த இரண்டு போட்டிகளை தவிர்த்து ராயுடுவின் பேட்டிங் ஏமாற்றம் அளித்தது. மேலும் அவர் அவுட் ஆகும் விதம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஸ்விங் பந்துகளில் அதிகமாக திணறும் ராயுடு, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மைதானங்களில் அணியின் தேவைக்கு ஏற்ப பங்களிப்பாரா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
 

நடந்துவரும் ஆஸ்திரேலியா தொடரில் 3 போட்டிகளில் 59 பந்துகளை சந்தித்து 33 ரன்கள் எடுத்துள்ளார் ராயுடு. பார்ட் டைம் பவுலராக இருப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவரின் பவுலிங்கிற்கு தடை விதித்துள்ளது ஐ.சி.சி. இதனால் நாளுக்கு நாள் அவருக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.
 

ambati

 

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்திய ஏ அணி விளையாடிய போது 3 போட்டிகளில் 188 ரன்கள் எடுத்திருந்தார் விஜய் சங்கர். பலம் வாய்ந்த நியூசிலாந்து ஏ அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை தனது நிதானம் கலந்த அதிரடி மூலம் திணறடித்தார். அந்த தொடரில் அதிக ரன் எடுத்த இந்திய வீரரும் இவரே. பவுலிங்கிலும் ஆறாவது பவுலராக தனது பங்களிப்பை தந்தார் சங்கர்.

 

இதுவரை இந்திய அணிக்கு 8 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விஜய் சங்கர் 4 முறை பேட்டிங் செய்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக 18-4 என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி இருந்தபோது தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார் சங்கர். 64 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றிக்கு வழிவகுத்தார். 

 

vijay

 

நடந்துவரும் ஆஸ்திரேலியா தொடரிலும் வாய்ப்பு கிடைத்த  3 இன்னிங்ஸ்களில் 123 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 104 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார் சங்கர். விளையாடிய 4 இன்னிங்ஸ்களில் 2 முறை ரன் அவுட். ஆறாவது பவுலராகவும் அணியின் தேவையை பூர்த்தி செய்கிறார். 
 

கேதர் ஜாதவ் பேட்டிங் ஆல்ரவுண்டராக 6-வது இடத்தில் களமிறங்கும் வீரராக உலகக்கோப்பையில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். கடைசியாக விளையாடிய 9 இன்னிங்ஸ்களில் 262 ரன்கள், பேட்டிங் சராசரி 52. இதில் 4 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன். கடந்த 4 தொடர்களில் 82 ஓவர்கள் பந்துவீசியுள்ளார். 11 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவரின் எகனாமி ரேட் 6-க்கும் குறைவு. இதில் 8 விக்கெட்கள் எதிரணியின் சிறந்த பேட்ஸ்மேன்கள். பார்ட்னர்ஷிப் பிரேக்கர் என்ற பெயரை எடுத்துள்ளார் ஜாதவ்.  

 

kedar jadave

 

பேட்டிங், பார்ட் டைம் பவுலிங் என விஜய் சங்கரும், கேதர் ஜாதவும் கலக்கி வரும்நிலையில் ராயுடு, பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். மேலும் ராயுடுவின் பவுலிங், தடை செய்யப்பட்டிருப்பது அவரை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. உலகக்கோப்பை போட்டிகளில் 11 பேர் கொண்ட அணியில் விளையாட அம்பதி ராயுடு இன்னும் தன்னை அதிகம் தயார்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 

 

 

 

 

 

Next Story

8 நாளில் முடிவுக்கு வந்த அரசியல்; ஆந்திராவை அதிரச் செய்த அம்பத்தி ராயுடு

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
Ambati Rayudu has announced his resignation from YSR Congress Party

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதோடு, ஐ.பி.எல் போட்டிகளில் கேப்டன் தோனியின் தலைமையில் சென்னை அணிக்காக அம்பத்தி ராயுடு விளையாடி வந்தார். கடந்த ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், அந்த சீசனுடன் ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதற்கு முன்னதாக தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு கடந்த 28 ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து தன்னை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியிலிருந்து விலகவும், அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இது” என்று குறிப்பிட்டுள்ளார். கட்சியில் சேர்ந்த 9 நாள் முழுதாக முடியாத நிலையில் அம்பத்தி ராயுடு கட்சியிலிருந்து விலகி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஆந்திர அரசியலில் கால் பதித்த அம்பத்தி ராயுடு!

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Ambati Rayudu who set foot in Andhra politics

நடந்து முடிந்த 16 ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து ஐபிஎல் டிராபி சென்னை கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து டிராபிக்கு பூஜை போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என். சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தனர். அதன் பின்னர் சென்னை அணியின் வீரர் அம்பத்தி ராயுடு மற்றும் ரூபா குருநாத் ஆகியோர் ஐபிஎல் டிராபியுடன் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.

இதற்கு முன்னதாக தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார். அதே சமயம் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அம்பத்தி ராயுடு, ஆந்திர அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும், அவர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை அம்பத்தி ராயுடு சந்தித்து வாழ்த்து பெற்றார்.