Skip to main content

ராயுடுவின் திடீர் ஓய்வுக்கு காரணமாக அமைந்த இரண்டு ட்வீட்கள்..!

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார்.

 

ambati rayudu announces his retirement from all formats of cricket

 

 

கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி நான்காவது இடத்திற்கான வீரர் இன்றி அவதிப்பட்ட போது, இந்திய அணியில் 4-வது இடத்துக்கு சரியான வீரர் அம்பதி ராயுடுதான் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். அப்படிப்பட்ட ராயுடு பின்னர் உலகக்கோப்பை தொடருக்கு அணியில் சேர்க்கப்படாமல் போனார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.

இதனால் அதிருப்தி அடைந்த அவர், பிசிசிஐ அமைப்பை கலாய்க்கும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் காயமடைந்த போதிலும் அம்பதி ராயுடு அணியில் சேர்க்கப்படவில்லை. அவரை விட அனுபவம் குறைந்த ரிஷப் பந்த், மாயங்க் அகர்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இவை அனைத்திற்கும் மூல காரணமாக இன்று வரை ரசிகர்களால் பார்க்கப்படுவது அவரது அந்த ஒற்றை ட்வீட் தான்.

இந்த நிலையில் நேற்று ஐஸ்லாந்து நாட்டின் கிரிக்கெட் வாரியம் ஒரு ட்வீட் செய்தது. அதில் "இனி உங்களுக்கு 3 டி கிளாஸ் தேவை இல்லை. எங்கள் நாட்டின் குடியுரிமை விண்ணப்பத்தை படிக்க சாதாரண கண்ணாடி இருந்தால் போதும். எங்களுக்கு உங்களை பிடிக்கும். எங்களோடு வந்து இணைந்துவிடுங்கள் " என அந்த ட்வீட் பதிவிடப்பட்டது. இந்நிலையில் இந்த ட்வீட் வந்து 24 மணிநேரத்திற்குள் தற்போது ராயுடு தனது ஓய்வை அறிவித்துள்ளார். எனவே அவர் ஐஸ்லாந்து அணிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

 

 

Next Story

8 நாளில் முடிவுக்கு வந்த அரசியல்; ஆந்திராவை அதிரச் செய்த அம்பத்தி ராயுடு

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
Ambati Rayudu has announced his resignation from YSR Congress Party

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதோடு, ஐ.பி.எல் போட்டிகளில் கேப்டன் தோனியின் தலைமையில் சென்னை அணிக்காக அம்பத்தி ராயுடு விளையாடி வந்தார். கடந்த ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், அந்த சீசனுடன் ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதற்கு முன்னதாக தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு கடந்த 28 ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து தன்னை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியிலிருந்து விலகவும், அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இது” என்று குறிப்பிட்டுள்ளார். கட்சியில் சேர்ந்த 9 நாள் முழுதாக முடியாத நிலையில் அம்பத்தி ராயுடு கட்சியிலிருந்து விலகி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.