Skip to main content

"மது, சிகரெட், செல்போன்...!" - தடகள வீரர் சைனியின் அறிவுரை! 

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

"Alcohol, cigarettes, cell phone ...!" - Advice from Athlete Saini!

 

“கடின உழைப்பும் விடாமுயற்சியையும் மாணவர்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கையில் வெற்றியை தொடர முடியும்” என பிரபல தடகள வீரர் மற்றும் ஃபுட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மும்பை பொது மேலாளர் சைனி வில்சன் கூறினார். 

 

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின் 50வது விளையாட்டு விழா 18ந் தேதி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அவர் பேசும் போது, "நான் ஒன்றாவது பயிலும் போதும் நான்காவது பயிலும் போதும் பள்ளியில் நடைபெற்ற ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றேன். அதன் தொடர்ச்சியாகத்தான் ஒலிம்பிக்கில் நான் நான்கு முறை பங்கேற்றேன். உலக அளவில் 80க்கும் மேற்பட்ட பதக்கங்கள் பெற்றுள்ளேன். எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும் கூட எனது விடா முயற்சி உழைப்பால் தான் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். எனவே மாணவ மாணவிகள் விளையாட்டு, படிப்பு மற்றும் கலை போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். 

 

நாங்கள் பாட்டியாலா, டெல்லி, பெங்களூர் போன்ற இடங்களுக்குச் சென்று பயிற்சி பெற்றோம். அப்போது பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் போது தொலை தொடர்பு வசதி கூட இல்லாமல் சிரமப்பட்டோம். ஆனால் இப்பொழுது ஏராளமான வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தடகள பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது.

 
விளையாட்டு வீரர்களுக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. நமது முதலமைச்சர் கூட ஒலிம்பிக்கில் பரிசு பெறுபவர்களுக்கு ரூ. 3 கோடி வரை பரிசு தொகை உயர்த்தி அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் விளையாட்டு உள்கட்டமைப்பு இன்று பெருமளவில் வளர்ந்து உள்ளது. எனவே இதை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார். 


அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது கணவரும், அர்ஜூனா விருது பெற்ற நீச்சல் வீரரும், ஐ.சி.எப் விளையாட்டு அலுவலருமான வில்சன் செரியன் கூறும்போது, “நான் எனது சிறிய வயதில் கேரளாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கிற குட்டையில் தான் நீச்சல் பயிற்சி பெற்றேன். அப்பொழுது இரண்டு வாரம் பயிற்சி எடுத்தால் ஒரு வாரம் ஜுரம் மற்றும் சளி தொல்லை உருவாகும். டாக்டரிடம் சென்றால் நீங்கள் நீச்சல் பயிற்சியை நிறுத்தினால் தான் உயிரோடு இருக்க முடியும் என்று எச்சரித்தார். ஆனால் எனக்கு தன்னம்பிக்கை இந்தது. நான் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பயிற்சி பெற்றேன். 

 

14 வயதிலேயே தேசிய சாம்பியன் என்ற பட்டத்தை பெற்ற பிறகு தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு தேசிய அளவில் மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு விருதுகளை பெற்று உள்ளேன். அன்றெல்லாம் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு கோல்ட் மெடலுடன் ரூ. 500 தான் தருவார்கள். அப்போதெல்லாம் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். ஆனால், இப்போது அப்படியல்ல. வெற்றி பெற்ற வீரருக்கு கோல்ட் மெடலுடன் ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதிக அளவு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு பல துறைகளில் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. எனது நிறுவனத்தில் கூட பல்வேறு விளையாட்டு வீரர்கள் பணியில் சேரும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் வேலையில் சேர்ந்தவுடன் சிலர் தொடர்ந்து விளையாடுவததை நிறுத்தி விடுகின்றனர். இது வருத்தத்துக்குரியது.

 

என்னைப் பொறுத்தவரை தேசிய சாம்பியன் பெற்ற பிறகும், வேலை கிடைத்த பிறகும், எங்களுக்கு திருமணமான பிறகும்கூட தொடர்ந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வந்தேன். தற்போது இளைஞர்கள் மது, சிகரெட் மற்றும் செல்போன் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பழக்கங்களை முழுமையாக தவிர்த்து முறையாக பயிற்சியை தொடர வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும். 


எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. எனவே இன்றும் என்னால் பல்வேறு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடிகிறது. தற்போது விளையாட்டு பயிற்சிக்காக செல்லும் வீரர்கள் ஒரு ஐந்து நிமிடம் ஓய்வு கிடைத்தால் கூட உடனடியாக செல்போனை எடுத்து பார்க்க தொடங்கிவிடுகின்றனர். எனவே பயிற்சியின் போது செல்போனை நாங்கள் வாங்கி வைத்துக் கொள்கிறோம். 


மாணவ மாணவிகள் கடின உழைப்பு விடா முயற்சியுடன் விளையாட்டு அல்லது படிப்பில் முன்னேற வேண்டும். தொடர்ந்து செல்போன் பார்ப்பது, சிகரெட், மது போன்ற கெட்ட பழக்கங்களை தவிர்க்க வேண்டும்" என்றார். 


கல்லூரி அறக்கட்டளை தாளாளர் கே.கே பாலுசாமி, தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் விஜயகுமார், துணைத் தலைவர்கள் முருகேசன், மாணிக்கம், அருண்குமார், பாலுசாமி, ஜி. ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், முதல்வர் சங்கர சுப்ரமணியம், இயக்குனர் வெங்கடாசலம், உடற்கல்வி இயக்குனர் தனலட்சுமி, செயலாண்மைத் துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு தடகள சங்கச் செயலாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது” - இ.பி.எஸ்.!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
“Should not charge for summer training camp” - EPS

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் நடத்தும் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டம் தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும். இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடைபந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பிற்கு, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.

தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்துவோம், தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கு பெறுவதை ஊக்குவிப்போம் என்றும், அதற்காக மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதம மந்திரியை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் கூறும் திமுக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டியில் ஆர்வமுள்ள, துடிப்புமிக்க மாணவர்களை முடக்கிப் போடும் இந்த அரசின் அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். விளையாட்டை ஊக்கப்படுத்துவோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், வழக்கம்போல் கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.