Skip to main content

"மது, சிகரெட், செல்போன்...!" - தடகள வீரர் சைனியின் அறிவுரை! 

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

"Alcohol, cigarettes, cell phone ...!" - Advice from Athlete Saini!

 

“கடின உழைப்பும் விடாமுயற்சியையும் மாணவர்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கையில் வெற்றியை தொடர முடியும்” என பிரபல தடகள வீரர் மற்றும் ஃபுட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மும்பை பொது மேலாளர் சைனி வில்சன் கூறினார். 

 

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின் 50வது விளையாட்டு விழா 18ந் தேதி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அவர் பேசும் போது, "நான் ஒன்றாவது பயிலும் போதும் நான்காவது பயிலும் போதும் பள்ளியில் நடைபெற்ற ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றேன். அதன் தொடர்ச்சியாகத்தான் ஒலிம்பிக்கில் நான் நான்கு முறை பங்கேற்றேன். உலக அளவில் 80க்கும் மேற்பட்ட பதக்கங்கள் பெற்றுள்ளேன். எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும் கூட எனது விடா முயற்சி உழைப்பால் தான் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். எனவே மாணவ மாணவிகள் விளையாட்டு, படிப்பு மற்றும் கலை போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். 

 

நாங்கள் பாட்டியாலா, டெல்லி, பெங்களூர் போன்ற இடங்களுக்குச் சென்று பயிற்சி பெற்றோம். அப்போது பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் போது தொலை தொடர்பு வசதி கூட இல்லாமல் சிரமப்பட்டோம். ஆனால் இப்பொழுது ஏராளமான வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தடகள பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது.

 
விளையாட்டு வீரர்களுக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. நமது முதலமைச்சர் கூட ஒலிம்பிக்கில் பரிசு பெறுபவர்களுக்கு ரூ. 3 கோடி வரை பரிசு தொகை உயர்த்தி அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் விளையாட்டு உள்கட்டமைப்பு இன்று பெருமளவில் வளர்ந்து உள்ளது. எனவே இதை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார். 


அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது கணவரும், அர்ஜூனா விருது பெற்ற நீச்சல் வீரரும், ஐ.சி.எப் விளையாட்டு அலுவலருமான வில்சன் செரியன் கூறும்போது, “நான் எனது சிறிய வயதில் கேரளாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கிற குட்டையில் தான் நீச்சல் பயிற்சி பெற்றேன். அப்பொழுது இரண்டு வாரம் பயிற்சி எடுத்தால் ஒரு வாரம் ஜுரம் மற்றும் சளி தொல்லை உருவாகும். டாக்டரிடம் சென்றால் நீங்கள் நீச்சல் பயிற்சியை நிறுத்தினால் தான் உயிரோடு இருக்க முடியும் என்று எச்சரித்தார். ஆனால் எனக்கு தன்னம்பிக்கை இந்தது. நான் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பயிற்சி பெற்றேன். 

 

14 வயதிலேயே தேசிய சாம்பியன் என்ற பட்டத்தை பெற்ற பிறகு தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு தேசிய அளவில் மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு விருதுகளை பெற்று உள்ளேன். அன்றெல்லாம் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு கோல்ட் மெடலுடன் ரூ. 500 தான் தருவார்கள். அப்போதெல்லாம் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். ஆனால், இப்போது அப்படியல்ல. வெற்றி பெற்ற வீரருக்கு கோல்ட் மெடலுடன் ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதிக அளவு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு பல துறைகளில் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. எனது நிறுவனத்தில் கூட பல்வேறு விளையாட்டு வீரர்கள் பணியில் சேரும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் வேலையில் சேர்ந்தவுடன் சிலர் தொடர்ந்து விளையாடுவததை நிறுத்தி விடுகின்றனர். இது வருத்தத்துக்குரியது.

 

என்னைப் பொறுத்தவரை தேசிய சாம்பியன் பெற்ற பிறகும், வேலை கிடைத்த பிறகும், எங்களுக்கு திருமணமான பிறகும்கூட தொடர்ந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வந்தேன். தற்போது இளைஞர்கள் மது, சிகரெட் மற்றும் செல்போன் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பழக்கங்களை முழுமையாக தவிர்த்து முறையாக பயிற்சியை தொடர வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும். 


எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. எனவே இன்றும் என்னால் பல்வேறு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடிகிறது. தற்போது விளையாட்டு பயிற்சிக்காக செல்லும் வீரர்கள் ஒரு ஐந்து நிமிடம் ஓய்வு கிடைத்தால் கூட உடனடியாக செல்போனை எடுத்து பார்க்க தொடங்கிவிடுகின்றனர். எனவே பயிற்சியின் போது செல்போனை நாங்கள் வாங்கி வைத்துக் கொள்கிறோம். 


மாணவ மாணவிகள் கடின உழைப்பு விடா முயற்சியுடன் விளையாட்டு அல்லது படிப்பில் முன்னேற வேண்டும். தொடர்ந்து செல்போன் பார்ப்பது, சிகரெட், மது போன்ற கெட்ட பழக்கங்களை தவிர்க்க வேண்டும்" என்றார். 


கல்லூரி அறக்கட்டளை தாளாளர் கே.கே பாலுசாமி, தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் விஜயகுமார், துணைத் தலைவர்கள் முருகேசன், மாணிக்கம், அருண்குமார், பாலுசாமி, ஜி. ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், முதல்வர் சங்கர சுப்ரமணியம், இயக்குனர் வெங்கடாசலம், உடற்கல்வி இயக்குனர் தனலட்சுமி, செயலாண்மைத் துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு தடகள சங்கச் செயலாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும்” - ஆளுநர் ரவி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
RN Ravi says it is wrong for parents not to allow their children to play sports

திருச்சி தேசிய கல்லுாரியில் விளையாட்டு வீரர்களின் 5 நாள் ஐ.சி.ஆர்.எஸ் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது.  கல்லுாரி செயலாளர் ரகுநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது, “விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் இந்த நாட்டின் சொத்துகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா மட்டும் ஒரு தங்கப்பதக்கம் வென்ற போது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பதக்கம் மட்டும் வென்றது சற்று மன வருத்தத்தைத் தந்தது. 

2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. டில்லி விளையாட்டு கிராமத்தில் நடந்த விருந்தில் விஐபிக்கள் வரவில்லை என்பதற்காக வீரர்கள் சாப்பிடுவதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. இதுபோல வீரர்களை நடத்தக் கூடாது. பதக்கம் வென்றவர்களுக்கு அரசுகள் கோடிக்கணக்கில் பரிசு கொடுப்பதை போல விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த  பிட் இந்தியா திட்டத்தின் படி பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  தங்கள் குழந்தைகள் விளையாடினால் அதிக மதிப்பெண் பெற முடியாது என நினைத்து பெற்றோர்கள் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காதது தவறாகும். பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவதால் உடல், மன வலிமை, தலைமை பண்பு, கூட்டு முயற்சி போன்ற திறமைகள் உருவாகும். இந்த விளையாட்டு கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டது சிறப்பாகும். வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு மருத்துவர்கள், பயோ மெக்கானிக் அனைவர்களும் இணைந்து செயல்பட்டால்தான் விளையாட்டில் சிறப்பு நிலைமை அடைய முடியும். ஓட்டப்பந்தயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மைக்ரோ வினாடியில் போட்டியில் முடிவைக் கணிக்க முடிகிறது. நுாற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்ட தேசியக் கல்லுாரிகளில் இது போன்ற விளையாட்டு கருத்தரங்கை அதிக அளவில் நடத்த வேண்டும்” என்றார். 

இந்தக் கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் ஆயுர்வேதம், போட்டிகளில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, யோகா,மருத்துவம், விளையாட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், குறும்பட போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், எக்ஸல் நிறுவன சேர்மன் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கம் குறித்த அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசித்தார். முன்னதாக கல்லுாரி முதல்வர் குமார் வரவேற்றார்.

Next Story

“விளையாட்டுத்துறையில் தலைசிறந்த  மாநிலமாக தமிழகம் உள்ளது”-  அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
 Tamil Nadu is the best state in the field of sports says Minister I.Periyasamy

திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் பள்ளியில்  கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு  மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியம், கட்டுரை, திருக்குறள், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில்  வெற்றி பெற்ற 30 மாணவ-மாணவிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

இந்த விழாவில் உணவு மற்றும் வழங்கல்துறை  அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, “முதலமைச்சர் ஸ்டாலின்  சென்னையில் 180 உலக நாடுகள் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திக் காட்டினார். அதே போல இளைஞர்  நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தேசிய,  மாநில ஆசிய விளயாட்டு போட்டி மற்றும் பல்கலைக்கழக  விளையாட்டு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி  பெற்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கி  சிறப்பித்து வருகிறார். இன்று சென்னையில் தொடங்கும் கேலோ  இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்  கொள்கிறேன்” என்றார்.

 Tamil Nadu is the best state in the field of sports says Minister I.Periyasamy

இறுதியாக பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி பேசும்போது, “சென்னை, மதுரை, திருச்சி, கோவை  ஆகிய நகரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெற  உள்ளது. தமிழகத்தில் கல்விக்கு மட்டுமின்றி விளையாட்டுத்துறைக்கும்,  முதலமைச்சர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். விளையாட்டுத்துறையில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கால்பந்து, கபடி போட்டிகளில் மிக சிறந்த மாணவர்கள் உள்ளனர். விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள  மாணவர்கள் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று நமது  மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்” என கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை  வகித்தார். மாவட்ட எஸ்பி. பிரதீப், பழனி சட்டமன்ற உறுப்பினரும்,  கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகர மேயர்  இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநில வர்த்தகர் அணி இணைச்  செயலாளர் ஜெயன், திண்டுக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர்   நெடுஞ்செழியன், திண்டுக்கல் மாநகர பகுதி செயலாளர்களான  ராஜேந்திரகுமார், ஜானகிராமன்,  சந்திரசேகர் உள்பட கட்சிப்பொறுப்பாளர்களும், அதிகாரிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.