Skip to main content

சத்தமில்லாமல் விஸ்வரூபம் எடுத்து வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி.

Published on 24/09/2018 | Edited on 24/09/2018

கிரிக்கெட் உலகில் சிறிய அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி தற்போது விஸ்வரூபம் எடுத்து ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேசப் போட்டியை விளையாடத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இது வரை 104 ஒரு நாள் போட்டிகளில் பங்குபெற்று, 55 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை போட்டிகளில் பெரிய அணியான இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்திலும், பங்களாதேஷ் அணியை 136 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி, இரு அணிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் இறுதி ஓவர் வரை போராடி நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்தது. 

 

af


ஆரம்ப கால கட்டங்களில் பாகிஸ்தானில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள். அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு உதவிகளை செய்து வந்தது. 2015-ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் தனது போட்டிகளை விளையாட தொடங்கியது ஆப்கானிஸ்தான். மேலும் இந்தக் கால கட்டங்களில் இருந்து, இன்று வரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு மிக பெரிய அளவில் உதவி வருகிறது. இந்த வருடம் ஜூன் மாதம் தனது ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை பெங்களுருவில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி, டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கியுள்ளது ஆப்கானிஸ்தான். பி.சி.சி.ஐ-யின்  இந்த ஆதரவு, ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு பெரிய தூண்டுகோலாக இருந்து வருகிறது. 

 

2015 – ஆம் ஆண்டிற்கு முன்பு வரை ஆப்கானிஸ்தான் அணி 41 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 வெற்றிகளை கண்டிருந்தது. 2015 – ஆம் ஆண்டிற்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணி 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 33 வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது. டி20 போட்டிகளைப் பொறுத்த வரை, இது வரை 68 போட்டிகளில் பங்கேற்று 46 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐ.சி.சி. தர வரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் 10-வது இடத்தையும், டி20 போட்டிகளில் 8-வது இடத்தையும் பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சுதான் முக்கிய காரணம். ரஷீத் கான், மொஹம்மத் நபி மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் சுழலில் எதிர் அணியினர் சமாளிக்க முடியாமல் திணறுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. பேட்டிங் மற்றும் வேகபந்து வீச்சு சராசரியாக இருந்தாலும், சுழல் பந்து வீச்சு மற்ற இரண்டு துறைகளையும் ஈடுகட்டி விடுகிறது. 

 

af

 

ரஷீத் கான் ஐ.சி.சி பந்து வீச்சாளர்  தரவரிசை பட்டியலில் ஒருநாள் போட்டியில் 2- வது இடத்திலும், டி20 போட்டிகளில் முதல் இடத்திலும் உள்ளார். மேலும், ஒருநாள் ஆல் ரவுண்டர் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொறு முக்கிய வீரரான ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொஹம்மத் நபி 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2333 ரன்களும், 112 விக்கெட்களும் எடுத்து உள்ளார். அவர் 65 டி20  போட்டிகளில் 1014 ரன்களும்,  67 விக்கெட்களும் எடுத்து உள்ளார். ஒருநாள் பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் 17-வது இடமும், டி20 போட்டிகளில் 11-வது இடமும், ஒருநாள் ஆல் ரவுண்டர் பட்டியலில் 4-வது இடமும், டி-20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் 2-வது இடமும் பெற்று அசத்தி வருகிறார். 

 


ரஷீத் கான் ஐபிஎல் போன்ற உள்ளூர் விளையாட்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு உள்ளார். அவர் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் போன்ற நாடுகளில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி உள்ளார். மொத்தமாக 120 டி20 போட்டிகளில் 190 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். மொஹம்மத் நபி 6 நாடுகளை சேர்ந்த உள்ளூர் போட்டிகளில் 180 போட்டிகளில் 2508 ரன்களை எடுத்துள்ளார். மேலும் அவர் 198 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

 

af


150 வருட கிரிக்கெட் வரலாற்றில், டெஸ்ட் விளையாட்டுகளில் இதுவரை 11 அணிகள் மட்டுமே தகுதி பெற்று இருந்தது. புதிதாக ஆப்கானிஸ்தான் அணியும் இந்த ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பை பெற்று 12 வது அணியாக கிரிக்கெட் அரங்கில் பெருமை அடைந்தது. மேலும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளிலும் புது சாதனைகளைப் படைக்கத் தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி வீரர்களைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பங்குபெற வைப்பதன் மூலம், வரும் காலங்களில் அவர்களிடமிருந்து நிறைய நல்ல வீரர்களையும், மிகப்பெரிய சக்தி வாய்ந்த சிறந்த அணியையும் எதிர்பார்க்கலாம்.
 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.