Skip to main content

சோஹைலுக்கு வெங்கடேஷ் பிரசாத்தின் ரிவன்ச்... காம்ப்ளியின் அழுகை...

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

1996-ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. தொடர் தொடங்குவதற்கு முன்பு இலங்கையில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதால் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பாதுகாப்பு காரணமாக இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. அந்தப் போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சுலபமாக அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை.

லீக் போட்டிகளில் கென்யா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய அணிகளை வென்று காலிறுதிச்சுற்றுக்கு சென்றது இந்திய அணி. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. 

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் வாசிம் அக்ரம் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அமீர் சோஹைல் கேப்டனாக விளையாடினார். 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 287 ரன்கள் எடுத்தது. சித்து 93 ரன்களும், அதிரடியாக விளையாடிய ஜடேஜா 25 பந்துகளில் 45 ரன்களும் குவித்தனர். பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான சோஹைல் மற்றும் சயீத் அன்வர் அதிரடியாக விளையாடி முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தனர். 

 

1996 cricket worldcup summary

 

 

வெங்கடேஷ் பிரசாத் வீசிய 15-வது ஓவரில் 5-வது பந்தை பவுண்டரி அடித்த சோஹைல் பிரசாத்தை நோக்கி பவுண்டரியை பார்த்தாயா என்பதை போல பேட்டை நீட்டி கூறினார். ஆஃப் ஸ்டம்புக்கு நேர் வந்த அடுத்த பந்தையும் அதேபோல அடிக்க முயன்றார் அமீர் சோஹைல். ஆனால் பேட்டில் படாமல் ஸ்டம்பைச் சாய்த்தது பந்து. ரன்கள் கொடுத்த கோபத்தில் இருந்த பிரசாத் கடும் ஆக்ரோஷத்தில் சோஹைலை வெளியேறுமாறு சைகையில் கூறினார். 

ஒரு விக்கெட் ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை மாற்றும் என்பதை போல அடுத்தடுத்து பாகிஸ்தான் அணி விக்கெட்களை இழந்தது. இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை சித்து பெற்றார்.  

கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற அரைஇறுதிப்போட்டியில் இலங்கை அணியுடன் இந்திய அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தொடக்கத்திலேயே 35 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அரவிந்த டி செல்வா மற்றும் ரோஷன் மஹானமா ஆகியோர் அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஹசன் திலகரத்னே, அர்ஜுனா ரணதுங்கா ஆகியோர் ஓரளவு நல்ல ஸ்கோர் அடிக்க இலங்கை அணி 251 ரன்கள் எடுத்தது. 

பின்னர் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வந்தது. விரைவில் சித்துவின் விக்கெட்டை இழந்தாலும் சச்சினும் மஞ்ச்ரேக்கரும் நிதானமாக விளையாடினார்கள். இந்திய அணி 98 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. ஒப்பனிங் இறங்கிய சச்சின் சீரான வேகத்தில் ரன்கள் குவித்து வந்தார். 65 ரன்கள் எடுத்திருந்த போது ஜெயசூர்யா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் கலுவித்தரனாவிடம் ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழந்தார் சச்சின். அணியின் ஸ்கோர் 98 ரன்களுக்கு 2 விக்கெட்கள். 

 

1996 cricket worldcup summary

 

 

பின்னர் வந்த வீரர்கள் ரன்களை அடிக்க தவறி விக்கெட்களை பறிகொடுத்தனர். 98 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இருந்த நிலையிலிருந்து 120 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணி. வினோத் காம்ப்ளி 10 ரன்களும், அனில் கும்ப்ளே ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தோல்வியடையும் நிலையில் இருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து மைதானத்திற்குள் கலவரத்தில் ஈடுபட்டனர். 

இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. வீரர்கள் அவசர அவசரமாக பெவிலியன் திரும்பினார்கள். களத்தில் அவுட் ஆகாமல் இருந்த வினோத் காம்ப்ளி இந்த நிகழ்வை கண்டு மனமுடைந்து அழுது கொண்டே பெவிலியன் திரும்பினார். அரை இறுதிப்போட்டியில் முடிவு தெரியவேண்டும் என்பதால் கலவரம் காரணமாக நிறுத்தப்பட்ட போட்டியில் இலங்கை அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஒரு விக்கெட் ஆட்டத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதற்கு இந்திய அணி விளையாடிய காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் உதாரணமாக அமைந்தது. 

 

1996 cricket worldcup summary

 

இந்த உலகக்கோப்பை தொடரில் காம்ப்ளி ஒரு சதம், சராசரி 44.00 உட்பட 176 ரன்கள் எடுத்திருந்தார். கும்ப்ளே 15 விக்கெட்கள், எகானமி ரேட் 4.03 என தொடர் முழுவதும் சிறப்பாக பவுலிங் செய்திருந்தார். வெங்கடபதி ராஜு, ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் தலா 8 விக்கெட்கள் எடுத்து தங்களது பங்கை அணிக்கு அளித்தனர். 

இந்த தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதல் 3 ஓவர்களை மெய்டனாக வீசிய மெக்ராத்தின் அடுத்த 5 ஓவர்களில் 48 ரன்களை விளாசினார்கள் சச்சின் & கோ. மெக்ராத்தின் ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என அமர்க்களப்படுத்தினார் சச்சின். தொடரில் அதிக பட்சமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் 523 ரன்கள், சராசரி 81.17, 3 அரைசதங்கள், 2 சதங்கள் அடித்திருந்தார்.

இந்திய அணி சொந்த மண்ணில் அரைஇறுதியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காலங்கள் கடந்தும் வெங்கடேஷ் பிரசாத்தின் ஆக்ரோஷமான செயலும், காம்ப்ளியின் அழுகையும் இந்த உலகக்கோப்பை தொடரில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. 

 

 

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தொடங்கியது '2024 தேர்தல் திருவிழா'- தேதிகள் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'2024 Election Festival' begins- dates announced

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சந்து ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதே நேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதி பற்றி முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (16/03/2024) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாற்றுகையில், ''மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது. 2024-ல் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த உலகிற்கே இது தேர்தல் ஆண்டு. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேர்தலில் மொத்தமாக 986.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட 6 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.50 கோடி பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நூறு வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆள்பலம், பணபலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக உள்ளது. நான்கு பலத்தை கட்டுப்படுத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்பலத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதை தடுக்க தேவையான அளவு பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். 50% வாக்கு சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். எல்லைகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.பொய்ச் செய்திகளை உருவாக்கி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.