Skip to main content

அமீரகத்தில் நடைபெற இருக்கும் 13 ஆவது ஐ.பி.எல். பெரும் வரவேற்பைப் பெறுமா???...சந்தேகங்களும் கேள்விகளும்...

Published on 25/07/2020 | Edited on 25/07/2020

 

IPL

 

உலகை மிரட்டிவரும் கரோனா என்ற கொடிய நோயின் தாக்குதலால் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் முடங்கி உள்ளனர். தொடக்கத்தில் மிகக் குறைந்த அளவில் இருந்த பாதிப்பு இந்தியாவிலும் தற்போது அசுர வேகத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் இதன் பாதிப்பு 12 லட்சத்தையும், உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் கடந்தன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான தேர்வு, வழிபாட்டுத் திருவிழாக்கள், விளையாட்டுகள் என அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் இந்தாண்டு நடைபெற இருந்த 13ஆவது ஐ.பி.எல். போட்டியும் நடைபெறமால் இருந்தது. இந்தாண்டு ஐ.பி.எல். நடக்குமா??? இல்லை முழுவதுமாக ரத்து செய்யப்படுமா என்று பல்வேறு கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என அதன் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்து உள்ளார்.

 

இது குறித்து வெளியான அறிவிப்பில் மொத்தம் 51 நாட்கள் போட்டிகள் நடைபெறும் என்றும் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் ரசிகர்கள் இன்றி போட்டி நடத்தப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. வீரர்களுக்கான கட்டுப்பாடுகள், போட்டி அட்டவணைகள் மற்றும் சிறப்பு விதிகள் குறித்து அடுத்த வாரம் நடக்க இருக்கிற ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழுவில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது. ரசிகர்கள் இன்றி நடத்தப்படும் பட்சத்தில் வரவேற்பு எப்படி இருக்கும்??? ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருந்த வீரர்களின் உடற்தகுதி எப்படி இருக்கும் என்பது உட்பட பல சந்தேகங்களை இந்த திடீர் அறிவிப்பு நமக்கு ஏற்படுத்துகிறது.

 

IPL

 

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒரு நாள் போட்டிகள், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுக்கு இடையான டெஸ்ட்போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டன. இப்போட்டிகள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு முறையும் பந்து எல்லைக்கோட்டைத் தாண்டி அடிக்கும்போது வீரர்களே போய் எடுத்து வருவது டீவியில் பார்க்கும் பார்வையாளருக்கு பெரும் அயர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கே இந்த நிலைமை என்றால் 'ஐ.பி.எல். என்றாலே அதிரடி, விறுவிறுப்பு' என மொத்தப் போட்டியையும் மூன்று முதல் நான்கு மணிநேரத்திற்குள் பார்த்துப் பழகிய ரசிகர்களிடம் இது எந்த மாதிரியான வரவேற்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

http://onelink.to/nknapp

 

வீரர்களின் உடற்தகுதி குறித்துப் பார்க்கும் போது அவர்கள் முழு உடற்தகுதியோடு தான் உள்ளனாரா என்ற சந்தேகமும் எழுகிறது. முழுமையற்ற உடற்தகுதியோடு விளையாடும்போது அது ஏதேனும் காயத்தை ஏற்படுத்தி அடுத்தடுத்து வர இருக்கின்ற இந்திய அணிக்கான போட்டிகளில் அவர்கள் பங்களிப்பில் பாதிப்பை ஏற்படுத்திவிடாதா என்ற கேள்வியையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

 

நீண்ட நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கி மனதளவில் சோர்வுற்ற ரசிகர்களுக்கு ஐ.பி.எல். புத்துணர்வு தரும் மருந்தாக அமைந்தால் சந்தோசம் தான்... 

 

 

 

Next Story

கேப்டனுக்கு மீண்டும் எதிர்ப்பு; எல்லை மீறிய ரசிகர்கள்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 Rohit fans who crossed the line for Opposition to hardik pandya for Captain

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகிய இரண்டு அணிகள் தான் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில், இரண்டு அணிகளுமே தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சமநிலையில் உள்ளன. ஐ.பி.எல். 2024 போட்டியில் 6ஆவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த சீசனுக்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணியை பலப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு நடவடிக்கையை அணி நிர்வாகம் மேற்கொண்டது. 

அந்த வகையில், குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் ஷர்மாவை, கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களில் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதன் விளைவாக மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் குறைந்தனர்.

இதனை அடுத்து ஹர்திக் பாண்டியாவின் சொந்த மண்னான அகமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியிலே, ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இது ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மண்ணான மும்பை வான்கடே மைதானத்தில் என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் 2024 இன் 14 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில், போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் போட ஹர்திக் பாண்டியா வந்த போதே, ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள்.  அப்போது வர்ணனையாளர் சஞ்சய் மாஞ்ரேகர், ரசிகர்களை மரியாதையாக நடக்க அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.

இதில், போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் ‘ரோஹித்... ரோஹித்.... ’ என ரசிகர்கள் முழக்கமிட்டனர். இது மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மைதானமான வான்கடேவில் மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கே.கே.ஆர் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்ட போது, கே.கே.ஆர் அணி நிர்வாகத்திற்கு எதிராக கொல்கத்தா அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

5 முறை சாம்பியன் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பரிதாப நிலை!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
5-time champions Mumbai Indians team's pathetic condition for hatrick loss

ஐபிஎல் கிரிக்கெட் 2024 இல் 14 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.

இதில், இஷான் கிஷன் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடித்து 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய ரோஹித் ஷர்மா, நமன் திர், டிவால்ட் ப்ரிவிஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில், அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்து 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, திலக் வர்மா 29 பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்து 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பந்து வீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களான டிரெண்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திய சஹால் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து, நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. அதன்படி தொடக்க வீரரான யஷ்ல்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் குவெனா பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வின் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவரை விளையாடிய ரியான் பராக் அதிகபட்சமாக 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்து 54 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம், விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளோடு ராஜஸ்தான் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஐ.பி.எல் சீசன் தொடங்கி 14 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் எல்லா அணிகளும் குறைந்தபட்சம் 1 வெற்றி முதல் 2 வெற்றி வரை பெற்று புள்ளிப்பட்டியலில் போட்டி போடத் தொடங்கியுள்ளன. ஆனால் 5 முறை சாம்பியன் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் பரிதாபகரமான நிலையில் உள்ளது.