புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழா பிரசித்தி பெற்றது. 2 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அய்யனாரின் வாகனமான குதிரை சிலை இங்கு கோயில் முன்பு 33 அடி உயரத்தில் வெள்ளைக் குதிரை அமைக்கப்பட்டுள்ளது. 

Advertisment

தங்க கொலுசு போட்ட இந்த குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகித மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக அணிவிப்பது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மாலைகள் வருவதால் மாலை அணிவிக்க தாமதம் ஏற்படுவதால் மாலையுடன் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதனால் ஒரு நாள் முன்னதாக முதல் மலர் மாலையாக ஊர் மாலை அணிவித்தவுடன் பக்தர்களின் மாலைகள் அணிவிக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் 3 நாட்களும் விழாக் கோலம் தான்.

Advertisment

அதன் படி நேற்று முன்தினம் (01.03.2026) காலை முதல் மாலைகள் அணிவிக்க தொடங்கி நேற்றும் மாலைகள் ஏற்றி வந்த வாகனங்கள் 4 பக்கமும் நீண்ட வரிசையில் பல மணி நேரமாக காத்திருந்தன. ஒவ்வொரு ஆண்டும் மாலைகளின் எண்ணிக்க அதிகரிப்பதே இதற்கு காரணம் என்கின்றனர். மேலும், குதிரை சிலை கழுத்தில் அணிவிக்கபடும் மாலைகள் மலை போல குவிந்துவிட்டதால் அடுத்தடுத்த மாலைகளை அணிவிக்க முதலில் போடப்பட்ட மாலைகளை உடனுக்குடன் அள்ளி கோயில் மண்டபத்தில் குவித்து வருகின்றனர். 2வது நாளாக தொடர்ந்து மாலைகள் வருவது போல பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. மேலும் இன்று (03.03.2026 - செவ்வாய்கிழமை) இரவு தெப்பத்திருவிழா நடக்க உள்ளதால் இதற்கும் பல ஆயிரம் பக்தர்கள் குவிய உள்ளனர்.