Skip to main content

குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுத்தா என்ன ஆகும்? -  சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

What happens if children are given siddha medicine? - Dr Arun

 

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி தொல்லை, சுவாசப் பிரச்சனை ஆகியவற்றுக்கான தீர்வுகள் குறித்து நம்மிடம் சித்த மருத்துவர் அருண் விவரிக்கிறார்.

 

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தை நாடலாமா என்கிற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் என்பது கொஞ்சம் கொஞ்சமாக வளரும். அந்த நேரத்தில் சளி, காய்ச்சல் ஆகியவை ஏற்படுவது இயல்பான ஒன்று தான். குழந்தை பிறந்தவுடன் உரை மருந்து என்ற ஒன்றை அந்தக் காலத்தில் நாக்கில் தடவுவார்கள். இன்றும் சித்த மருத்துவத்தில் அது வழக்கத்தில் இருக்கிறது. தாய்ப்பாலில் இந்த உரை மருந்தை உரசி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மூன்று மாதக் குழந்தைக்கு வாரம் ஒருமுறை கூட இந்த மருந்தைக் கொடுக்கலாம். ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை உள்ள குழந்தைகளுக்கு இதன் அளவு மாறுபடும்.

 

இதன் மூலம் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தோல் பிரச்சனைகள், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஆகியவை நீங்கும். 12 வயது வரை குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுக்கலாம். இப்போது இவை மாத்திரைகளாகவும் வருகின்றன. சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி சளி ஏற்படுபவர்களுக்கு ஓமவல்லி இலையின் சாரை சூடான கரண்டியில் ஊற்றி நாம் கொடுக்கலாம். இதன் மூலம் முதல் கட்டத்திலேயே சளி நின்றுவிடும். சளி என்பது இருமலாக மாறிவிட்டால் அருகிலிருக்கும் சித்த மருத்துவரை அணுக வேண்டும்.

 

ஆடாதோடை மணப்பாகு என்பது ஆடாதோடை இலையின் மூலம் செய்யப்படும் ஒரு மருந்து. சளி, சுவாசப் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு இது சிறந்த ஒரு மருந்தாக இருக்கும். 3 முதல் 6 வயது குழந்தைகளுக்கு 5 மில்லி அளவுக்கு, சுடுநீரில், உணவுக்குப் பிறகு தினமும் மூன்று வேளை இந்த மருந்தைக் கொடுக்கலாம். 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு 10 மில்லி அளவில் கொடுக்கலாம். ஆடாதோடை மணப்பாகு அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். வீட்டில் நிச்சயம் இருக்க வேண்டிய மருந்துகளில் இதுவும் ஒன்று. இதைச் செடியாகவும் வீட்டில் வளர்க்கலாம். சளி வந்ததால் குழந்தைக்கு எடை குறைகிறது என்கிற எண்ணம் பலருக்கு இருக்கும். இந்த மருந்துகளின் மூலம் அதைத் தடுக்கலாம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை இந்த மருந்துகள் அதிகரிக்கும். மூளையின் செயல் திறனும் இதன் மூலம் அதிகரிக்கும்.

 


 

Next Story

குழந்தைகளுக்கு சித்த மருந்துகள் கொடுக்கலாமா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 22/12/2023 | Edited on 26/12/2023
 Dr Arun | Cold | Fever | Child | Siddha | Recap |

சித்த மருத்துவ மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்விக்கு பிரபல சித்த மருத்துவர் அருண் விளக்கமளிக்கிறார்.

இன்றைய இளம் தாய்மார்களுக்கு தங்களுடைய குழந்தைகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் கொடுக்கலாமா என்ற சந்தேகம் வருகிறது. முதலில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நோய் உருவாகிறது என்று பார்ப்போம். காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு இதற்கெல்லாம் உடனடியாக பெரிய எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை.

பூமிக்கு வந்த உயிர் இங்குள்ள நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும்போது சில எதிர்வினை நடக்கத்தான் செய்யும். அதுதான் மேலே சொன்ன சிறிய அளவிலான நோய்களாகும். அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்கத்தான் செய்யும், எங்கேயாவது சளியால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையை தூக்கி கொஞ்சினாலோ, பேருந்துகளில் பயணிக்கும்போது அருகே இருப்பவர்களுக்கு தொற்று இருந்தால் கூட சளி பிடிக்கத்தான் செய்யும். சக குழந்தைகளோடு விளையாடும்போது கூட யாராவது ஒருவருக்கு சளி இருந்தால் கூட மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

யாரோடும் பழகாமலும், பார்க்காமலும், தொடாமலும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் எந்த நோய் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கிற எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும். சிறுவயதிலேயே தாய்ப்பாலுடன் இணைத்து உரை மருந்து கொடுப்பார்கள், அதை ஆறு மாதம் வரை கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது குழந்தைக்கு உரை மருந்தின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும். 12 வயது வரை கொடுக்கலாம். 

இந்த உரை மருந்தில் சுக்கு, அதிமதுரம், அக்கரகாரம், வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், திப்பிலி, பெருங்காயம், பூண்டு அனைத்தும் கலந்து இருக்கும். முன்னெல்லாம் இதை வீட்டிலேயே தயாரிப்பார்கள், இப்பொழுது நகரங்களில் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கிறது. வாங்கி பயன்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானாலே காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்காமல் காக்கலாம். இந்த சித்த மருந்துகளை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் நோயின் தன்மை தீவிரமடைந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்ளலாம்.

Next Story

நன்றாக தூங்குவதற்கு இதை பின்பற்றுங்க - சித்த மருத்துவர் நித்யா விளக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Siddha doctor Nithya - Sleeping tips

 

நன்றாக தூங்குவதற்கு சித்த மருத்துவர் நித்யா சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறார்.

 

தூக்கமின்மையால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்று முந்தைய பகுதியில் பார்த்தோம். எனவே இதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறவர்கள் ஒரு வாரம் சித்த மருத்துவ குறிப்பின்படி சொல்கிற சில டிப்ஸ்களை பின்பற்றினாலே உடனடியாக சரி செய்ய முடியும்.

 

காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இரவு முழுவதும் வயிறு நீரற்று உஷ்ணமாக இருப்பதால் முதற்கட்டமாக நீர் அருந்த வேண்டும். இரவே வெந்தயம் ஊறப்போட்டு அதை பருகலாம். அல்லது சீரகம் ஊற போட்டு குடிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி, தேர்த்தாங்க் கொட்டை, வெட்டி வேர் போன்றவற்றை வாங்கி தேவையான அளவு எடுத்துக் கொண்டு இரவே ஊறவைத்து காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். 

 

இது குடிப்பதால் உடல் உஷ்ணம் நீங்கி ஆழ்ந்த தூக்கத்திற்கு உங்களை உடல் தயார்ப்படுத்திக் கொள்ளும். கசகசாவை பாலில் கலந்து குடிக்கலாம். சித்த மருத்துவத்தில் அதிமதுரம் சூரணம் வாங்கி இளம் சூடான பாலில் கலந்து குடிக்கலாம். அதிமதுரம் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் சரிசெய்து தூக்கம் அதிகரிக்கும். இரவு நேர உணவை சீக்கிரம் முடித்துவிட்டு தூங்க வேண்டும். போனை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது. ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் இரவு நேர உறக்கத்தினை பெறலாம்.