Skip to main content

தலைவர்னா... இந்த நாலும் இருக்கணும்! - தலைவா #1

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

தலைவராகும் ஆசை, யாருக்குத்தான் இல்லை? வெறும் ஆசை மட்டும் போதாது. தலைமைத்துவம் என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். தலைவராக இருப்பதற்கான முக்கிய தேவைகளை அறிந்திருக்க வேண்டும். கற்றல் இல்லை என்றால், வளர்ச்சியைக் காண முடியாது!

 

leader

 

தலைமைப் பண்புகள் யாரோ சிலருக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. எவர் வேண்டுமானாலும் இந்த தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ள முடியும், அதைப் பயன்படுத்தி தலைவராகவும் முடியும். ஒரு குறிக்கோளை நிர்ணயித்து அந்தக் குறிக்கோளை அடைய ஒரு குழுவினரை, அல்லது திரளான மக்களை வழிநடத்த தலைமைப்பண்புகள் பயன்படுகின்றன. எனவே ஒருவர் எந்த ஒரு நேரத்திலும் தலைவராக முடியும்! அதற்கான பண்புகளைக் கற்றுக் கொள்ளவும்  முடியும்! அப்படி பார்க்கையில் தலைமை பண்புகளை வளர்த்துக்கொள்ள பின்வரும் அடிப்படை விஷயங்கள் தேவை!! 
 

1. உறுதியான குறிக்கோள் அல்லது லட்சியக் கருத்து தலைவருக்கு  வேண்டும்

2. தலைவராக இருக்கும் ஒருவருக்கு அவரைப் பின்பற்றக்கூடிய ஒருவராவது இருக்க வேண்டும்

3. தலைமைத்துவப் பண்புகளை அவர் பயன்படுத்த வேண்டும்.

மேலும் பின்பற்றக் கூடியவர்கள் அல்லது தொண்டர்கள் இல்லாமல் தலைவர் இல்லை. எனவே குழு என்றால் என்ன? குழுவாக செயல்படுவது எப்படி? என்றெல்லாம் தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.

ஒரு குறிக்கோளுக்காகச் சேர்ந்து செயல்படும் தனிநபர்கள் பலரைக் கொண்டதுதான் குழு என்பது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்தால் அது குழுதான். ஒரு தலைவரும் ஒரு உறுப்பினரும் இருந்தாலும்கூட குழுதான். எனினும் எல்லா குழுக்களிலும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதை நாம் காணமுடியும். இந்தக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் தலைவரின் "வழி நடப்பவர்'’ அல்லது தொண்டர் என அழைக்கப்படுவர்.


 

leader

 


தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்

ஒரு லட்சியத்தை நிறைவேற்ற ஒருவரால் உருவாக்கப்பட்ட குழு அவரை எவ்வித எதிர்ப்புமின்றித் தலைவராக ஏற்றுக் கொள்ளலாம், அல்லது அதிகாரப்பூர்வமாக விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில் உறுப்பினர்கள் தங்கள் தலைவரின் செல்வாக்கிற்கு உட்படுகின்றனர். அவரை ஏற்றுக் கொள்கின்றனர். இதனால் அவரைத் தங்களுக்குத் தலைமை தாங்க தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஓர் ஊரில் உள்ள இளைஞர் மன்றம் தனது உறுப்பினர் கூட்டத்தைக் கூட்டி, மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவர் அல்லது ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் அங்கே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

நியமனத் தலைவர்

இதற்கு அடுத்து நியமன தலைவர்கள். பெரும் நிறுவனங்களில் தலைமைப்பதவிக்கு தலைமை நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அங்கே பணிபுரிபவர்களால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.  இத்தகைய நியமனத் தலைவர்களை அவருக்குக் கீழ் இருப்பவர்கள் முழுமனதோடு ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு நிர்வாகம் தனக்கு வேண்டிய ஒருவரை தலைவராகத் திணித்துள்ளது. பல அரசியல் கட்சிகள்கூட தங்கள் கட்சியின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக நியமனம் செய்வதையும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதையும் நீங்கள் நேரில் கண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக ஓர் அனைத்திந்திய கட்சி தனது மாநிலத் தலைமை நிர்வாகிகளை நியமனம் செய்யும்போது, அது அம்மாநிலத்தில் உள்ள கட்சித் தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக அமைந்துவிடுவது உண்டு. தலைவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவரை நம்பிக்கைக்கு உரியவராக, தகுதியானவராக, மரியாதைக்குரியவராக உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

 

leader



தலைவராக ஒருவர் நியமிக்கப்படும்போது அத்தகைய மதிப்பு, மரியாதை விருப்பத் தேர்வு என்பது இல்லாமல் போவதால், அத்தகைய நியமனத் தலைவருக்கு ஆதரவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. நியமிக்கப்பட்ட ஒருவர், உறுப்பினர்களின், தொண்டர்களின் விருப்பத்துக்குரிய ஒருவராக இருந்துவிட்டால் பிரச்சினைக்கு வழி இல்லை. ஒரு குழுவை உருவாக்கி, அல்லது உருவான குழுவில் குழு உறுப்பினர்களுக்காகப் பாடுபட்டு அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர் அவர்கள் மத்தியில் தலைவராக உருவாகலாம். ஆனால்  உயர்மட்டத் தலைமை, வேறு ஒருவரை தலைவராக நியமித்துவிடும்போது, ஒரே குழுவுக்கு இருவேறு தலைமை ஏற்பட்டுவிடும். அதாவது குழு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத தலைமை (நியமனத்தலைவர்), ஆதரவு பெற்ற தலைமை (குழு உறுப்பினர்களின் செல்வாக்கு மிக்க ஒருவர் உருவாகிவிடும். நியமனத் தலைவர் போதுமான தகுதி இல்லாதவராக இருக்கலாம். அவரது அணுகுமுறை உறுப்பினர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம் எனவே உறுப்பினர்கள் அந்தத் தலைமையை நிராகரித்து தங்களுக்குள் ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுண்டு. ஒரு குழுவுக்கு இரண்டு தலைமை கூடாது. யாரைப் பின்பற்றுவது என்ற குழப்பம் ஏற்படும். நிறுவனத்தில் உற்பத்தியும் பாதிக்கப்படலாம். அரசியல் கட்சி, மன்றங்களில் குழுமோதல்கள் ஏற்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் தேக்கமடையக்கூடும். தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் தலைவர்கள்தான்.
 

1 விழிப்புணர்வு

2 உறுதிபடச் சொல்லல்

3 பதில்கூறும் கடமை

4 ஆதரவாக இருத்தல்

 

இவை நான்கும் செயலூக்கமுள்ள தலைவருக்குத் தேவையான பண்புகள் ஆகும். இவற்றைத் தனித்தனியே ஆராயலாம் என்றாலும் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை மறக்கக்கூடாது. உறுதிபட ஒன்றைச் சொல்லவும் செய்யவும் வேண்டுமானால் தலைவருக்கும் தொண்டருக்கும் விழிப்புணர்வு தேவை. உறுதியாகச் செயல்படுவதும் ஒருவரது செயல்களுக்குப் பொறுப்பேற்பதும் ஆதரவளிப்பதைச் சார்ந்துள்ளது. விழிப்புணர்வு என்பதில் அடங்கியுள்ள பல்வேறு கூறுகளைப் பார்க்கவேண்டும். எந்தெந்த கூறுகளைப் பற்றியெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பது தலைவருக்கு முக்கியம் இப்படி தலைவன் என்பவன் எந்த நேரத்திலும் தற்சார்பற்ற எண்ணமிகுந்த ஒருவன்தான் தொண்டனின் ஆதவரவை பெறவே முடியும்.



 

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

குடும்பம் கைவிட்டதும் கலையை கையில் எடுத்தேன் - டிரெண்டிங் நடன பிரபலம் ஷர்மிளா உற்சாகம்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 LETS DANCE SHARMILA interview

 

சினிமா பாடல்களை அப்படியே ரீ-கிரியேசன் செய்து இணையத்தில் உலாவவிட்டு பிரபலமடைந்து வருகிறார்கள் இன்றைய இளைய தலைமுறையினர்; பலர் இதனை கொண்டாட்டமாகவே செய்தாலும் சிலருக்கோ அது தனது வலியினை மறைப்பதற்கான ஒன்றாக உள்ளதாகவும் இருக்கிறது என்கின்றனர் சிலர். அந்த வகையில் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றையும் நம்முடைய நேர்காணலின் மூலம் டான்ஸர் ஷர்மிளா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலிருந்தே எனக்கு இருந்தது. சென்னை வந்த பிறகு ஆக்டிங், டான்ஸ் என்று பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறேன். பள்ளிக்காலங்களில் பல்வேறு போட்டிகளில் நான் கலந்துகொள்வேன். இதுதான் செய்வேன் என்று எப்போதும் என்னை நான் சுருக்கிக்கொண்டது கிடையாது. அனைத்து விதமான கலைகளிலும் என்னால் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். சமூக வலைதளங்களால் இன்று வாய்ப்புகள் கிடைப்பது எளிமையாகி இருக்கிறது. 

 

அம்மா, அப்பாவுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்ததால் சிறுவயது முதல் நான் ஹாஸ்டலில் இருந்தேன். தலைமையாசிரியரின் உதவியால் தான் என்னுடைய பள்ளிப்படிப்பை நான் முடித்தேன். அடுத்தகட்ட படிப்புக்கு கோர்ட் உத்தரவு மூலம் என்னுடைய தந்தை மாதாமாதம் கொடுத்த ஜீவனாம்ச பணம் உதவியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடியோக்கள் செய்ய ஆரம்பித்து சென்னை வந்தேன். எனக்கு கிடைத்த ஆயுதம் போன் தான். இரவெல்லாம் கண்விழித்து வீடியோக்கள் செய்வேன். 

 

 

நம்பிக்கையும் உழைப்பும் தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்கள். கொரோனா காலத்தில் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்குக் கிடைத்த வாய்ப்பு தான் லெட்ஸ் டான்ஸ் 360. ஒவ்வொருவருக்கும் என்னுடைய ஒவ்வொரு பர்ஃபாமன்ஸ் பிடிக்கும். சிலருக்கு என்னுடைய நடிப்பும் சிலருக்கு என்னுடைய நடனமும் பிடிக்கும் என்று சொல்வார்கள். என்னுடைய டீமிடமிருந்து எனக்கு எப்போதும் நல்ல சப்போர்ட் கிடைக்கும். என்னை அவர்கள் நன்றாக ஊக்குவிப்பார்கள். 

 

பறை இசை வாசிக்கும்போது எமோஷனலாக இருக்கும். நெகட்டிவ் கமெண்டுகள் வரும்போது அதைப் புறந்தள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது கடினம். பள்ளியில் இருக்கும்போது மற்ற மாணவர்கள் அவர்களுடைய பெற்றோருடன் பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக இருக்கும். ஆனால், எனக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தால் தான் என்னால் நிறைய சாதிக்க முடிகிறது என்று நினைக்கிறேன். எனக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எனக்கு எப்போதும் ஆதரவு. என்னுடைய வீடியோக்கள் பற்றி என் பெற்றோரிடம் சிலர் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு யூடியூப் குறித்து தெரியாது. 

 

என்னுடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டு என்னுடைய ஆசிரியர்கள் பாராட்டுவது பெருமையாக இருக்கும். என்னுடைய வீடியோக்களுக்காக அதிகமான முன்தயாரிப்புகளில் நான் எப்போதும் ஈடுபடுவேன். யூடியூபில் சில்வர் பட்டன் கிடைத்த நாள் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. என்னைப் போன்று இந்தத் துறைக்குள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் பாலா சாரின் 'இவன்தான் பாலா' என்கிற புத்தகத்தைப் படிக்க வேண்டும்.