Skip to main content

மறுமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைய கவனிக்க வேண்டிய காரணிகள்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

things to evaluate before remarriage

 

திருமணம் என்பது 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்று நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். நம் முன்னோர்கள் திருமணத்தை மதத்தோடும், தங்கள் கலாச்சாரத்தோடும் தொடர்புப்படுத்திப் போற்றுவதுதான் இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. திருமணத்திற்கு புரிதல், மரியாதை, அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல் மற்றும் சமரசம் ஆகிய விஷயங்கள் முக்கியமானவை. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரின் உண்மையான அன்பிலும் உறவிலும் பல இடங்களில் விரிசல்தான் எட்டிப்பார்க்கிறதே தவிர, உயிர்த்துடிப்பு இல்லையென்றே சொல்லலாம். ஆகையால், இன்றைய நவீன உலகில் விவாகரத்திற்குப் பிறகு, இரண்டாவது திருமணம் செய்வது மேற்கத்திய கலாச்சாரத்தைப் போன்று அதிகரித்துக் காணப்படுகிறது.

 

இருப்பினும், உலகின் பல்வேறு நாடுகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது சர்வதேச அறிக்கையானது, இந்தியாவில் விவாகரத்திற்குப் பிறகு இரண்டாவது திருமணம் நடப்பது மிகக் குறைவு என்கிறது. விவகாரத்திற்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்வது, வாழ்வில் புத்துணர்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், நீண்ட நெடிய நமது வாழ்க்கையில் நமக்கென ஒரு துணை இருக்கிறதென்ற மனஉறுதியையும் தருகிறது. ஆனால், மறுமணம் செய்வதற்கான இணையைத் தேர்ந்தெடுப்பதிலும் பலருக்குக் குழப்பமான சூழல் நிலவுகிறது. எனவே, விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்துகொள்ள விரும்புவோர் கவனிக்க வேண்டியதாக உளவியல் நிபுணர்கள் கூறும் பொதுவான 6 காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

பரஸ்பர நம்பிக்கை வேண்டும்:

 

அன்பு, நம்பிக்கை, மரியாதை இந்த மூன்றும்தான் தம்பதியர் பரஸ்பரம் எதிர்பார்க்கும் விஷயங்கள். குறிப்பாக, பரஸ்பர நம்பிக்கை திருமண வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அது மணமுடிக்க எண்ணும் இருவரிடையே ஏற்படுகிறதா என்பதைக் கவனியுங்கள். விவாகரத்து செய்தவுடன், குறிப்பிட்ட ஒருவரிடம் அன்பைச் செலுத்துவதும், நம்புவதும் இயல்பான ஒன்றாகும். இப்படியா கடினமான சூழ்நிலையில், உங்களது இணை உங்களுக்கு முன்னுரிமை அளித்து, பரஸ்பர நம்பிக்கையுடன் உங்களைத் திருமணம் செய்பவராக இருக்க வேண்டும்.

 

எந்த நிர்ப்பந்தமும் இருக்க வேண்டாம்:

 

எவ்விதமான நிர்ப்பந்தம் காரணமாகவும், மீண்டும் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுக்க வேண்டாம். விவாகரத்துக்குப் பிறகான இரண்டாவது திருமணம் என்பது அன்பையும், ஆறுதலையும் உள்ளடக்கிய உங்களின் சுய முடிவாக மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதையும் அந்த நபருடன் வாழ நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்கள் என்பதில் உறுதியாக இருந்தால், இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுங்கள்.

 

ஒருவருக்கொருவர் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:

 

உங்கள் கடமைகளில் உறுதுணையாக இருக்கத் தயாராக இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். உங்களின் தேவைகளை உங்கள் துணையிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை கிடைத்தல் அவசியம். அதேபோன்றதொரு நம்பிக்கையை உங்கள் துணைக்கும் உங்களால் அளிக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களின் முடிவினை மீண்டும் ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.  

 

சரியான நிதி திட்டமிடல்:

 

பொருளாதார ரீதியாக அவர் உங்களுக்குப் பொருத்தமானவரா என்பதைக் கவனியுங்கள். உங்கள் முந்தைய கணவரிடமிருந்து உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், உங்கள் தற்போதைய கணவர் உங்கள் அனைவரையும் இணையாக நடத்துபவராக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அடிப்படை வீட்டுச் செலவுகளைத் தவிர, பணத் திட்டங்கள் மற்றும் இதர செலவுகள் குறித்து இருவரும் இணைந்து ஒரு சரியான திட்டமிடலை மேற்கொள்ளுங்கள். உங்கள் இணை, அதிகம் செலவு செய்கிறாரா அல்லது சிக்கனமாக உள்ளாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.

 

பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண்பவரா?

 

பிரச்சினைகள் வரும்போது கோபத்துடன் முடிவெடுக்கிறாரா அல்லது நிதானமாக உள்ளாரா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதேபோன்று, பிரச்சினைகளைக் கடந்து செல்ல முயல்பவரா அல்லது அதற்குத் தீர்வு காண்பவரா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

 

நீண்டகால திருமண வாழ்விற்கு தாம்பத்தியம் மட்டும் போதாது:

 

உங்கள் விவாகரத்துக்குப் பிறகு, நீங்கள் தேர்வு செய்யும் நபர் சிறந்த நண்பராக இருத்தல் வேண்டும். எந்த தகவல்களையும் உங்களுடன் பரிமாறிக்கொள்பவராக இருத்தல் நல்லது. இது, அவர் உங்கள் வாழ்க்கையில் பாதி என்ற நிலையை அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறது. இது உங்கள் இருவரையும் திருமண வாழ்வில் மகிழ்ச்சியுடன் வழிநடத்த உதவும். குறிப்பாக, உங்களுடன் வெளிப்படையாகப் பேசுகிறாரா என்பதைக் கவனியுங்கள். ஏனெனில், திருமண பந்தம் வலுப்பெற வெளிப்படைத்தன்மை அவசியம்.

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொதுவான காரணிகள் அனைத்தும், இருவரிடமும் இருக்கின்றனவா என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அவற்றில் ஏதேனும் குறையும்பட்சத்தில் அதைச் சரி செய்யவும் தயாராக இருங்கள். அப்படி இருக்கும்பட்சத்தில், உங்கள் மனம் போல் இந்தப் புதிய திருமண பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் அமைந்திடும்.

 

 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; மனைவியின் வினோத கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Disappointing results deny the wife's strange request on extramarital affair in UP

உத்தரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான ராம் கோவிந்தின் மனைவி கவிதா (34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான 7 ஆண்டுகள் ஆன இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில், கவிதாவுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், கவிதாவின் கணவர் ராம் கோவிந்துக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதில் மனமுடைந்த கவிதா, நேற்று முன் தினம் (03-04-24) தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், கவிதாவை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இதற்கு கவிதா மறுப்பு தெரிவித்து கம்பத்தில் ஏறியவாறு இருந்ததால், உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதனை, அங்கிருந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனையடுத்து, கீழே வந்த கவிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கவிதா தனது ஆண் நண்பரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்குமாறு தனது கணவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வினோத கோரிக்கைக்கு ராம் கோவிந்த் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன் காரணமாக அந்த பெண், டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.