Skip to main content

அன்று மொட்டை மாடி கொட்டகை, இன்றோ...? - இந்தியாவுக்கே இங்கிலிஷ் சொல்லித்தரும் தமிழர்! 5 நிமிட எனர்ஜி கதை

Published on 02/04/2018 | Edited on 02/04/2018

கஷ்டப்படும் குடும்பம், அப்பா இல்லை, மூத்த அண்ணனின் சம்பளத்தில் தான் அனைத்தும் ஓடுகிறது. தம்பி, கல்லூரி முடித்துவிட்டான். ஒரு நல்ல வேலைக்குச் சென்று குடும்பத்தை உயர்த்துவான் என்று காத்திருந்த அம்மாவுக்கு ஷாக் கொடுத்தான். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில், அப்போதைய கணக்குக்கு நல்ல சம்பளத்தில், கிடைத்த நல்ல வேலைக்குப் போகாமல், 'நான் சமூக சேவை செய்யப் போகிறேன், அல்லது ஆசிரியராகிப் பாடமெடுக்கப் போகிறேன்' என்றான். அதிர்ச்சியடைந்த அம்மா, ஒத்துக்கொள்ளவேயில்லை. 'நீ முட்டாள் தனமாகப் பேசுகிறாய். உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளப் போகிறாய்' என்றார். ஆனால், அந்தப் பையன் தெளிவாக இருந்தான், தான் இன்னொருவரது நிறுவனத்தில் வேலை செய்யப் பிறந்தவனில்லை என்று.

 

Ganesh ram

            

ஆரம்பத்தில் செல்வ வளமிக்க குடும்பம்தான். தாத்தா தஞ்சாவூரில் ரைஸ்மில் வைத்திருந்தவர். அந்த செல்வ வளத்தில் அப்பா வாழ்ந்துவிட்டார், வளர்க்கவில்லை. திடீரென தொழிலில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் தாத்தாவின் சொத்துகள் பெரும்பாலும் கரைந்தன. கணேஷுக்கு ஒரு வயதிருக்கும்போதே அப்பா இறந்துவிட, திடீரென ஒரு ஏழை குடும்பமானது கணேஷின் குடும்பம். சென்னைக்கு வந்தது குடும்பம். எத்தனை சிரமத்திலும் கல்வி தடைபடவில்லை. மாநகராட்சி பள்ளி, பின்னர் அரசு கலை கல்லூரி. நந்தனம் கல்லூரியில் படித்த பொழுது NSS மாணவராக, குடிசைப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு வகுப்பெடுத்தான் கணேஷ். குழந்தைகளுக்கு பிரியமான ஆசிரியர் ஆனான். கஷ்டமான கணக்குப் பாடத்தை எளிதில் புரிய வைத்தான். தான் ஒரு நல்ல ஆசிரியர் என்ற மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டது. அந்த நம்பிக்கைதான் கல்லூரி முடிந்து நல்ல வேலை கிடைத்த பொழுதும், அதற்குச் செல்லாமல் டியூஷன் சென்டர் ஆரம்பிக்க வைத்தது. முதலில் ஒத்துக்கொள்ளாத அம்மா, அவர்களது ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டார். 'இந்தப் பையனை நீங்க கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்புனாலும், ரெண்டு மூணு மாசத்துல வந்துருவான். அவன் போக்கிலேயே விட்டுவிடுங்க' என்றார் ஜோதிடர். ஜோதிடம் பற்றி பல கருத்துகள் இருந்தாலும், அந்தப் பையனுக்கு நன்மையே செய்தது.

 

Vivekananda study circle


அம்மாவிடம் கெஞ்சிப் பெற்ற 500 ரூபாயைக் கொண்டு, சென்னை நந்தனத்தில் ஒரு வீட்டின் மாடிக்கு அட்வான்ஸ் கொடுத்து  வாடகைக்கு எடுத்து டியூஷன் சென்டர் தொடங்கியாயிற்று. ஆசிரியரும், இடமும் இருந்தால் போதுமா? 1981இல் ப்ளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மூன்று மாணவர்களைக் கண்டுபிடித்து, மாதம் 30 ரூபாய் கொடுத்து டியூஷன் வந்தால் இந்த ஆண்டு உங்களை பாஸ் ஆக வைப்பேன் என்று சத்தியம் செய்து, சேர்த்தார். சில நாட்கள் சிறப்பாக சென்றது டியூஷன். மாணவர்களுக்கும் நம்பிக்கை வந்துவிட்டது. இப்பொழுது மாத வாடகை தர வேண்டுமே? வாடகை, 175 ரூபாய். மாணவர்களோ மூன்று பேர், அவர்கள் கொடுத்தது 90 ரூபாய். என்ன செய்வது? மாணவர்களிடமே கேட்டார், 'நான் பாடமெடுப்பது உங்களுக்குப் பிடித்திருந்தால், மூன்று பேரும் ஆளுக்கொருவரை டியூஷனுக்கு அழைத்து வாருங்கள்' என்று.  அவர்களுக்கு ரொம்பப் பிடித்தது, ஆளுக்கு இருவரை அழைத்து வந்தார்கள். 9 மாணவர்கள், 270 ரூபாய் கட்டணம். முதல் மாதமே லாபமானது.

கல்வி மீது, பாடமெடுப்பது மீது ஆவல் கொண்டுதான் இதை செய்ய வந்தார். ஆனால் , இப்பொழுது அவருக்கு இதுதான் தொழில், இதை நம்பித் தான் அவர். கணக்குப் பார்த்துதானே ஆகவேண்டும்? இப்பொழுதும் கணேஷ் ராம்  கூறுகிறார், "ஒரு விஷயத்தை நீங்கள் சேவை என்று  நினைத்து செய்வதைவிட, உங்கள் தொழில் அதுதான் என்று நினைத்து செய்தால் அதன் தரம் அதிகமாக இருக்கும். உங்கள் தொழில் பிறருக்கு சேவையாக அமைந்தால் அதுவே பெரிய மகிழ்ச்சி. என் தொழிலால் இன்று 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை மாறியிருக்கிறது என்பதே என் மகிழ்ச்சி".

 

ganesh with rajini


முதலில் கணக்குப் பாடம் மட்டும், பிறகு தனது சகோதரன் சகோதரியை கேட்டுக்கொண்டு, அவர்கள் ஆங்கிலம், வணிகவியல் பாடங்கள் எடுக்க மெல்ல வளர்ந்து சென்னையின் மிகப் பெரிய டியூஷன் சென்டர் ஆனது விவேகானந்தா கல்வி நிலையம். முதலில் 'விவேகானந்தா ஸ்டடி சர்க்கிள்' என்று தான் தொடங்கினார். ஸ்டடி சர்க்கிள் என்றால் நூலகமோ என்று பலரும் நினைத்துக் கொள்ள, பெயரை மாற்றினார். கல்லூரி முடிந்த கையோடு தொடங்கிய டியூஷன் சென்டர் மூலம் தன் 24 வயதில் மாதம் 4 லட்சம், அதில் 80 சதவிகிதம் லாபம் என்பது கணேஷ் ராமின் தைரியத்துக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்த பரிசு. இன்று கோடிகளில் இருக்கிறது வருமானம். 1981இல் ஆரம்பித்து, சில வருடங்களில் அவர் உணர்ந்த விஷயம், தமிழ் மாணவர்களுக்கான ஆங்கிலத் தேவை. இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்த தமிழகத்தின் பார்வை பெரியது. உலக மொழியாம் ஆங்கிலம் இருக்கையில், இந்தி எதற்கு என்று ஆங்கிலம் கற்றுக்கொள்ள தமிழர்கள் பெரிதும் விரும்பினர். அதோடு, மெல்ல வேலைவாய்ப்புகளும் ஆங்கில புலமை கோரத் தொடங்கின. அதனால் 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' பயிற்சியைத் தொடங்கினார் கணேஷ்.

 

ganesh with kamal



அவரது அண்ணன் ராஜகோபாலன் ஆங்கில மொழியிலும் அதைக் கற்றுக் கொடுப்பதிலும் சிறந்து விளங்கினார். 90ஸ் கிட்ஸ்சுக்கு ராஜகோபாலனை நன்கு தெரியும். 'வீட்டா' விளம்பரங்களில் ஆங்கிலம் சொல்லித் தருவாரே அவர்தான் ராஜகோபாலன். ஒரு கட்டத்தில்   'ஸ்போக்கன் இங்கிலிஷ்' வகுப்புதான் அதிக பேரை ஈர்க்கிறது என்று உணர்ந்த கணேஷ், பிற வகுப்புகளை நிறுத்த முடிவு செய்தார். 'தான் ஆசையாசையாக ஆரம்பித்த டியூஷன் வகுப்புகளை நிறுத்துவதா? அய்யகோ' என்றெல்லாம் அவர் எண்ணவில்லை. சூழலுக்கேற்ப மாற்றிக்கொண்டார், வளர்ச்சி பெற்றார். இதுதான் அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. பிடித்ததை செய்யும் தைரியம், தேவையான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுதல், இந்த இரண்டும் கணேஷ் ராம் நமக்குக் கற்றுக்கொடுப்பது.

 

veta rajagopalan

 

முதலில் விவேகானந்தா ஸ்டடி சென்டர், விவேகானந்தா கல்வி நிலையம் ஆனது. ஆந்திரா, கர்நாடகாவில் ஆரம்பித்த பொழுது, விவேகானந்தா இன்ஸ்டிடியூட், நாடு முழுக்க பரவிய பொழுது வீட்டா (VETA) என நிறுவன பெயரிலிருந்து பல வகைகளிலும் காலத்திற்கேற்ப மாறிவந்திருக்கின்றார் கணேஷ். ஒரு கட்டத்தில் நாளொன்றுக்கு 2000 மாணவர்கள் வரை சேர்ந்து வந்த நிலை மாறி  2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டது. தங்களை மறுபார்வை பார்த்து, ஃபிரான்ச்சைஸ் முறைக்கு மாறினார். இன்று, தனி மாணவர்கள் மட்டுமன்றி நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட்  பயிற்சியளிக்கின்றது வீட்டா. இந்தியா மட்டுமன்றி சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து என பல நாடுகளிலும் இருக்கின்றன இதன் வகுப்பறைகள். 
 

வறுமையினால் தனக்குப் பிடித்ததை விட்டு, அந்த நேரத்துக்கு வசதியான, கிடைத்த வேலையை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், அவருக்குத் தெரிந்திருந்தது, அவர் அதற்கானவரல்ல என்று. வாழ்க்கை என்றுமே நம் தேர்வுதான். ஆனால், நாம் தேர்ந்தெடுப்பதில் முழுமையாக, தைரியமாக, மாற்றங்களை ஏற்றுக்கொண்டு செயல்பட்டால், உயரங்களை அடையலாம்.                                                             

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

‘தமிழர்கள் பயன்படுத்திய எழுத்தாணிகளும்; அதன் வகைமைகளும்’ - முனைவர் சு. தாமரைப்பாண்டியன் 

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

தமிழர்கள் தங்களின் தொன்மையான அறிவு மரபுகளைப் பல்வேறு எழுதப்படு பொருள்களில் எழுதி வைத்துப் பாதுகாத்து வந்துள்ளனர். தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் தங்கள் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். இதில் ஓலையில் எழுதி வைக்கும் வழக்கம் மிகுதியாக இருந்துள்ளது. ஓலையில் எழுத எழுதுபொருளாக எழுத்தாணியை தமிழர்கள் மிக நீண்ட காலம் பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றால் ஆன எழுத்தாணிகளைப் பயன்படுத்தியுள்ளனர். 

 

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க முதன்மையான ஓலைச்சுவடி அறிஞராகத் திகழ்ந்து வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுக்கும் பணியில் ஈடுபட்டபொழுது சில அரிய எழுத்தாணிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

அது குறித்து அவர் கூறியதாவது: தமிழர்களின் அறிவுசார் கண்டடைவுகள் பெரும்பாலும் ஓலையிலேயே எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந்துள்ளது. தூது சென்ற பார்ப்பான் ஒருவன் கையில் எழுதுவதற்கு பயன்படுத்தும் வெள்ளோலையினை வைத்திருந்ததாக அகநானூறு (பா. 337:7 - 8 ) குறிப்பிடுகிறது. இதன் மூலம் ஓலை மிக நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப்படு பொருளாக இருந்து வந்துள்ளது புலனாகிறது.

 

மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, தமிழ் விடு தூது முதலிய பல நூல்களில் ஓலையில் தமிழர்கள் எழுதி வந்தது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு ஓலைச்சுவடி என்று அழைக்கப்பட்டது. ஓலைகள் அதன் எழுதப்படு பொருண்மை அடிப்படையிலும், எழுதப்படு பொருள் அடிப்படையிலும் மந்திர ஓலை, சபையோலை, அறையோலை, இறையோலை, தூது ஓலை, பட்டோலை, ஆவண ஓலை, வெள்ளோலை, பொன்னோலை, படியோலை என்று பலவாறு அழைக்கப்பட்டன. ஓலைகள் பாதுகாக்கும் இடம் ஆவணக் களரி என்று அழைக்கப்பட்டன.

 

தமிழர்கள் தங்கள் அறிவு மரபுகளை ஓலையில் எழுத எழுத்தாணிகளைப் பயன்படுத்தினர். எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதுதல் என்பது சிரமமான காரியம் ஆகும். இதனை, ‘ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா / வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா’ எனும் பாடல் வரிகள் தெளிவாகச் சுட்டுகின்றன.

 

எழுத்தாணி மிக நீண்ட காலமாக தமிழர்களிடம் வழக்கில் இருந்து வந்துள்ளது. பொன்னால் செய்த எழுத்தாணி இருந்தமையினை சீவக சிந்தாமணி நூல் வழி அறிய முடிகிறது. எழுத்தாணிகளை தமிழறிஞர்கள் தேடி அலைந்தமையினை ‘ஓலை தேடி எழுத்தாணி தேடி’ என்ற தனிப்பாடல் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எழுத்தாணியானது அதன் பயன்பாட்டு அடிப்படையில் மூன்று வித அமைப்பாக  உள்ளமையினை அறிய முடிகின்றது.

 

குண்டெழுத்தாணி


 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

அதிக நீளம் இல்லாமல் எழுத்தாணியின் கொண்டைப் பகுதி கனமாகவும் குண்டாகவும் அமைந்து காணப்படும் எழுத்தாணி குண்டெழுத்தாணி எனப்படும். குண்டெழுத்தாணியின் முனைப் பகுதியின் கூர்மை குறைவாகக் காணப்படும். குழந்தைகள் எண்ணும் எழுத்தும் எழுதிப் பழக குண்டெழுத்தாணியைப் பயன்படுத்துவார்கள். எழுத்துகள் பெரிதாக இருக்கும்.

 

கூரெழுத்தாணி


எழுத்தாணியின் முனைப்பகுதி கூர்மையாக இருக்கும். இவ்வெழுத்தாணியினை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரிகள் வரை எழுதுவதற்குரியதாக அமைந்திருக்கும்.

 

வாரெழுத்தாணி

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

இவ்வெழுத்தாணி சற்று நீளமாக இருக்கும். எழுத்தாணியின் மேற்பகுதியியில் கொண்டைக்குப் பதிலாகச் சிறிய கத்தி அமைந்திருக்கும். கீழ்ப் பகுதியில் கூர்மையானதாக எழுதும் பகுதி அமைந்து காணப்படும். எழுத்தாணியின் ஒரு பகுதியில் உள்ள கத்தி ஓலையை வாருவதற்குப் பயன்படும். அதனால் இவ்வெழுத்தாணி வாரெழுத்தாணி என்று அழைப்படுகிறது.

 

மடக்கெழுத்தாணி


ஒரு முனையில் கத்தியும் மறுமுனையில் எழுதவும் பயன்படும் வாரெழுத்தாணியின் இரு முனைகளையும் மடக்கி ஒரு மரத்தாலான கைப்பிடிக்குள் அடக்கி வைத்துக் கொள்ளும் தன்மையிலான எழுத்தாணி மடக்கெழுத்தாணி எனப்படுகிறது. எழுத்தாணி மடக்கி வைக்கப்படுவதால் எழுத்தாணியின் கூர்மையான பகுதி மற்றும் கத்தியினால் ஏற்படும் எதிர்பாராத இன்னலைத் தடுக்க உதவுகிறது.

 

தமிழர்கள் வெட்டெழுத்தாணிகளையே அதிகம் பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. தமிழர்களின் இத்தகைய அறிவு தொழில்நுட்பக் கருவியான எழுத்தாணிகளைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நெல்லை மற்றும் குமரி மாவட்டப் பகுதிகளில் கள ஆய்வு செய்தபொழுது இராமலிங்கம், கணேசன் ஆகியோரிடம் இருந்த பழமையான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை வெண்கலம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டவை ஆகும் என்றார்.