Skip to main content

"என் மகள் பெற்ற வெற்றியால் என் டீக்கடை புகழ்பெற்றது!" - இன்ஸ்பயரிங் இளம் பெண்

Published on 25/06/2018 | Edited on 25/06/2018
anchal

 

இந்திய விமானப் படையின் போர் விமானியாக மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் இந்திய விமானப் படையின் போர் விமானிக்கான தேர்வு  நடைபெற்றது. இத்தேர்விற்காக இந்தியா முழுவதிலும் இருந்து ஆறு லட்சம் பேர் எழுதினார்கள். கடந்த ஏழாம் தேதி இத்தேர்விற்கான முடிவுகள் வெளியானது. இதில் 22 பேர் விமானிக்காக தேர்வு செய்யப்பட்டனர். அதில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த டீ கடைக்காரரின் மகளான ஆஞ்ச்சல் கங்க்வாலும் ஒருவர். அவருக்கு வயது இருபத்தி நான்கு.           

 

 


இவரின் தந்தை பெயர் சுரேஷ் கங்க்வால், மத்திய பிரதேசத்தின் நிமச் பேருந்து நிலையம் அருகில் டீக்கடை நடத்தி வருகிறார். இது குறித்து  அவர் பேசியபோது, “எனது மகளின் படிப்பு, போட்டித் தேர்வுகளுக்காகக் கடன் வாங்கிப் படிக்க வைத்தேன். எனது முயற்சியும் கடினமாக உழைத்துப் படித்த அவளது முயற்சியும் வீண் போகவில்லை. எனது மகள் போர் விமானி பணிக்கு தேர்வானதால் எனது டீக்கடை பிரபலமாகிவிட்டது” என்றார். ஹைதராபாத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் வரும் 30-ம் தேதி ஆஞ்ச்சல் பணியில் சேருகிறார். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உள்பட பல அரசியல் தலைவர்கள் ஆஞ்ச்சலை பாராட்டி வருகின்றனர். 

 

aanchal

 

தேசமெங்கும் தேர்வெழுதிய ஆறு லட்சம் பேரில் இருபத்தி இரண்டு பேர் மட்டுமே பெற்றுள்ள இந்த வெற்றியைப் பெற ஆஞ்ச்சல் கடுமையாக மட்டுமல்ல தொடர்ந்து தன்னம்பிக்கையோடு உழைத்துள்ளார். ஆறாவது முறைதான் அவர் தேர்வு பெற்றுள்ளார். இந்திய விமானப்படைக்கு முயற்சி செய்யும் முன் அரசு தேர்வுகள் எழுதிய அவருக்கு காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணி கிடைத்துள்ளது. ஆனாலும், அவரது முக்கிய இலக்கு விமானப் படை என்பதால், அந்த தேர்வுகளுக்கு படிப்பதற்கு நேரம் அளிக்கக் கூடிய வேலைக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அந்த வாய்ப்பை ஏற்காமல் பின்னர் தொழிலாளர் நல துறையில் பணியாற்றுள்ளார். அதுவே நல்ல பணி என்று அதோடு திருப்தியடைந்துவிடாமல் தொடர்ந்து படித்து அவரது இலக்கை அடைந்துள்ளார்.   

 

aanchal teas shop

சுரேஷ் கங்க்வால் தேநீர் கடை


"எனக்கு முன்பே தெரியும், என்னால் இதை செய்ய முடியுமென்று. நான் கல்லூரியில் முதல் மாணவியாக இருந்துகொண்டே விளையாட்டிலும் கவனம் செலுத்தினேன். இரண்டு விஷயங்களிலும் என்னால் கவனம் செலுத்த முடியும், இரண்டும் எனக்குப் பிடித்ததால். அது போலத்தான் நான் பணியில் இருந்துகொண்டே இந்தத் தேர்வுக்குப் படித்ததும். எனக்கு முன்பே வேறு வேலை கிடைத்தபோதும், என் பொருளாதாரத் தேவை இருந்த போதிலும் கிடைத்த வேலையோடு நான் நின்று விடவில்லை. என் இலக்கை நோக்கிப் பயணித்தேன், வென்றேன்" என்கிறார் நம்பிக்கை மிளிரும் கண்களுடன் அந்த இருபத்தி நாலு வயது இன்ஸ்பயரிங் இளம் பெண் ஆஞ்ச்சல் கங்க்வால். தெளிவான இலக்கு, அர்ப்பணிப்பு, கடுமையான மட்டுமல்ல தொடர்ந்த உழைப்பு, இவையிருந்தால் வெற்றி பெற வறுமை மட்டுமல்ல வேறெதுவும் தடையில்லை என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார் இவர்.

 

 

 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.