Skip to main content

“கொரோனா கற்றுத்தந்த மூன்று விசயங்கள்” - தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிரும் சுவாரசியம்

Published on 13/12/2022 | Edited on 14/12/2022

 

 Success Secret shared by Anand Mahindra

 

இந்தியத் தொழில் அதிபர்களில் முக்கியமானவர் ஆனந்த் மஹிந்திரா. மோட்டார் உற்பத்தி துறையில் இவரது வளர்ச்சி அபாரமானது. எங்கேயாவது வித்தியாசமான கண்டுபிடிப்புகள் பயன்பாட்டில் இருப்பது அவருக்குத் தெரியவரும் பட்சத்தில் அதை ட்விட்டரில் பகிர்ந்து மனம் திறந்து பாராட்டுவார். 

 

எடுத்துக்காட்டாக தண்ணீர் குடங்களை எடுத்துச் செல்வதற்காக ஒரு டிராலி வண்டியை பைக் உடன் இணைத்து ஓட்டிய இளைஞரையும் அவரது செயலையும் பாராட்டினார். அதற்குப் பிறகு அதை பொதுப் பயன்பாட்டிற்காக பலர் மாற்றிக் கொண்டனர்.

 

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய இளம் விளையாட்டு வீரர்கள் ஆறு பேருக்கு தன் சொந்த செலவில் கார் பரிசளித்தார். அதில் நமது தமிழக வீரர் நடராஜனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விளையாட்டு, இசை, உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல்வேறு துறைகள் குறித்த மாற்று சிந்தனைகளோடு இவர் பகிர்ந்து கொள்கிற ட்வீட்கள் ட்விட்டரில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பவை. 

 

கொரோனா காலகட்டத்தில் என்னுடைய ரிசார்ட்டுகளை நான் இலவசமாகத் தருகிறேன் அதை சிகிச்சை மையமாக மாற்றிக்கொள்ளுங்கள் என்றவர். 

 

எப்போதுமே புதியவைகளை கண்டறிந்து வியப்பவர். தான் கற்றுக்கொண்டவற்றை பிறரோடு பகிர்ந்து கொள்பவர். அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தான் கற்றுக் கொண்ட மூன்று விசயங்கள் எனப் பகிர்ந்துள்ளார். அவற்றை பின்வருமாறு பார்ப்போம்.

 

ஆனந்த் மஹிந்திரா கற்றுக்கொண்ட மூன்று விசயங்கள்

 

நன்றியுணர்வு 

என் வாழ்வின் தொடக்க நாளில் எதற்கெல்லாம் நான் நன்றியோடு இருக்க வேண்டும் என்று எழுதுவேன். நேற்று எதெல்லாம் எனக்குக் கிடைத்ததோ அதற்காக மறுநாளில் அதற்கு நன்றி என்று எழுதி வைப்பேன்.

 

ஆரோக்கியமான உடல்நலம், படுத்துறங்க நல்ல படுக்கையறை, எனது மேஜையில் சுவையான உணவு, என் தலைக்கு மேல் ஒரு கூரை, என்னை நேசிக்கும் மக்கள் மத்தியில் இருப்பது போன்றவை எனக்குக் கிடைத்ததற்கு நான் நன்றியுணர்வு கொண்டவனாய் இருப்பேன் என எழுதுவேன். அந்த நன்றியுணர்வு எப்போதும் இருக்க வேண்டும் என்பது நான் முதலாவதாகக் கற்றுக் கொண்டது. கொரோனா காலகட்டத்தில் இந்தப் பட்டியல் பல மடங்கு பெருகியது.

 

மீண்டு வருதல் 

ஒரே நாளில் எல்லாம் மாறிப்போனது; ஆனாலும் நாம் எதிர்த்து நின்றோம். பள்ளிகள் மூடப்பட்டது; ஆனாலும் அதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டுமென யோசித்தோம். ஆன்லைன் வழியாக படித்தோம், தேர்வுகளை இணையதள உதவியுடன் எழுதினோம். கஷ்டமான தொழில்நுட்பத்தையும் உடனடியாகத் தெரிந்துகொண்டு நாம் அதனைப் பயன்படுத்தப் பழகினோம். வாழ்க்கை மேலும் கீழுமாக நம்மை நகர்த்திப் போட்ட போதும் நாம் மீண்டு வந்தோம். இப்படியாக எல்லா சூழலிலும் நாம் வீழ்ந்து விடாமல் மீண்டு வர வேண்டுமென இரண்டாவதாகக் கற்றுக் கொண்டேன்.

 

அடையாளம் காண்பது 

நமது நலன் மற்றவர்களுக்கு எந்த விதத்தில் பயன்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். பலரோ வீடுகளை சுத்தப்படுத்திக் கொண்டும், சமைத்துக் கொண்டும், குப்பைகளைச் சேகரித்துக் கொண்டும், கார் ஓட்டிக் கொண்டும், உடல்நலத்தைக் கவனித்துக் கொண்டும் இருந்தோம். ஆனால் பல மாநில மக்களோ நெடுஞ்சாலைகளில் செருப்பு கூட இல்லாமலும் உணவின்றி, நீரின்றி நடப்பதைப் பார்த்தோம். அவர்களையெல்லாம் காணும்போது நாம் எப்படியான வாழ்வினை வாழ்கிறோம் என அடையாளம் கண்டுகொண்டேன். அந்த அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமென நினைத்து அதற்காக உழைக்க ஆரம்பித்தேன். இது நாம் வாழ்கிற வாழ்விற்கான அர்த்தப்படுத்துதலைத் தருகிறது.

 

இவ்வாறு மூன்று விசயங்களை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துகொள்கிறார்.

 

 

Next Story

“அவர்களைப் பின்பற்றினால் இந்தியா வல்லரசாகும்...” - ஹிட் பட பிரபலங்களுடன் ஆனந்த் மஹிந்த்ரா

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
anand mahindra about 12th fail movie

விது வினோத் சோப்ரா இயக்கத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், ஆனந்த் வி ஜோஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 12த் ஃபெயில். தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடா மொழிகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இக்கதை மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ்ஸின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது. பின்பு கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ஓடிடியில் இப்படம் வெளியானது. அதன் பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இப்படத்தின் மூலம் பிரபலமான நிஜ தம்பதிகள் மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ் உள்ளிட்டோரை சந்தித்து ஆட்டோகிராஃப் பெற்றுள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் பெருமையுடன் வைத்திருக்கும் அவர்களின் ஆட்டோகிராஃப்களை, நான் அவர்களிடம் கேட்டபோது வெட்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். 

படத்தின் கதை அவர்களின் உண்மைக் கதையை தழுவியதாக அறிந்தேன். அவர்கள் நேர்மையான ஒருமைப்பாட்டு தத்துவத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். இந்தியா உலக வல்லரசாக மாற வேண்டுமானால், அதிகமான மக்கள் அவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் அது வேகமாக நடக்கும். எனவே அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான பிரபலங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்