Skip to main content

கண் முன்னே ஆடிய தெய்வங்கள்!- பரதநாட்டிய பரவசம்!!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 

சிவகாசியில் காலண்டர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் நண்பர் ஜெயபிரகாஷ். மதுரைக்கு ரயிலில் சென்ற போது அவரைச் சந்திக்க நேர்ந்தது. கவர் ஒன்று அனுப்ப வேண்டும் என்று முகவரியைக் கேட்டுப் பெற்றார். இரண்டு நாட்கள் கழித்து வந்த பெரிய கவரில் அவருடைய மகள் ஐஸ்வர்ய லட்சுமியின் பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ் இருந்தது.  நித்யாஞ்சலி வழங்கும் நிருத்த லக்‌ஷனா பரத நாட்டிய அரங்கேற்றம் என முகப்பில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த  அழைப்பிதழும் சரி, நிகழ்ச்சி நிரலும் சரி, முழுவதும் ஆங்கிலத்திலேயே இருந்தன.   

 

 Parathanatyam Excursion

 


 
தொழில் நகரமான சிவகாசியில், எந்நேரமும் வியாபார சிந்தனையோடு இருக்கும் அந்த நண்பர்,  தன் மகளைப் பரதநாட்டியம் பயில வைத்து, அரங்கேற்றமும் செய்கிறார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஐஸ்வர்ய  லட்சுமியை அர்ப்பணிப்புமிக்க சிஷ்யையாக 9 வருடங்கள் இருந்தவர் என்றும், அவரோடு இணைந்து ஆடும் நந்தினியை, தன்னிடம் 6 வருடங்கள் பயிற்சி பெற்றவர் என்றும் குருவான நிரஞ்சனா அய்யன் கோடீஸ்வரன், அவ்வழைப்பிதழில் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.   

 

 

 Parathanatyam Excursion

 


 

சிவகாசி ஜா போஸ் காஞ்சனா கல்யாண மண்டப அரங்கில், சரியாக மாலை 5.30 மணிக்குத் துவங்கியது அரங்கேற்றம். பரதநாட்டியத்தின் முக்கிய அம்சங்கள் என்று சொல்லப்படும் புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம், வர்ணம், டோலாயாம், ஆடிக் கொண்டார், தில்லானா போன்ற உருப்படிகளுக்கு அபிநயித்து ஆடினார்கள் இருவரும். முகத்தில் ஆர்வமும் சுறுசுறுப்பும் பிரதிபலித்தன.

 

பாத அடிகளை எடுத்து வைத்த பாங்கு, அங்க அசைவுகளின் நேர்த்தி, நடனத்திற்கும் இசைக்கும் காட்டிய முகபாவம், தோற்றத்தை மெருகூட்டிய ஒப்பனை, நிறத்தை மேம்படுத்திய உடைகள், தாளம் பிசகாது ஒலித்த நட்டுவாங்கம், இசைப்பிரவாகம் என அத்தனை அம்சங்களும் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக வெளிப்பட்டன. பரத நாட்டிய அரங்கேற்றத்தின் முழு வெற்றிக்கும் காரணமானவர் குரு என்று மேடையில் சிலாகிக்கப்பட்டார் நிரஞ்சனா.  

 

 Parathanatyam Excursion

 

 
பரதக்கலை என்னும் பெருங்கடலில் நீந்தி முத்தெடுத்ததாக நடனமாடிய இருவரையும் பாராட்டினார் சிறப்பு விருந்தினர்  ‘சோனி’ கணேசன்.  “சென்னையில் எத்தனையோ அரங்கேற்ற நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். சிவகாசியில் இப்படி ஒரு நிகழ்ச்சியா? இரண்டு மணி நேரம் நம்மை மறந்திருந்தோம்.” என்று வியந்தார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான அழகப்பன். “தவமாய் தவமிருந்தால் தான் அரங்கேற்றம் பண்ண முடியும்.” என்று உணர்ந்து மெச்சினார் சுபபிரியா பிரபாகரன்.

 

தவம் என்பது சாதாரண வார்த்தையா? அப்படியென்றால், பரதநாட்டியம் வெகு சிறப்பு வாய்ந்தது அல்லவா? ஆம். மனதையும் உடலையும் செம்மைப்படுத்தக்கூடிய கலைகளில் நடனக்கலை தலையாயது. சோர்வுற்ற உள்ளங்களைத் தட்டியெழுப்பி மனநிறைவை ஏற்படுத்துகிறது பரதம் என்றால் மிகையல்ல. இது ஒரு தெய்வீகக் கலை என்று போற்றப்படுகிறது. அதனால் தான், சிவனுக்கு  நடராஜ வடிவம் தந்து ஆடும் தெய்வமாக வணங்கி வருகிறோம்.  

 

 Parathanatyam Excursion


 
பரதநாட்டிய அரங்கேற்றம் என்பது கலைப்பயணத்தின் முதல் படி. மாதவியின் நடன அரங்கேற்றம் குறித்து, இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பதினொரு வகை ஆடல், பாடல், அழகு ஆகிய மூன்றிலும் சிறந்தவள் மாதவி என்றும், தனது 12- வது வயதில் சோழ மன்னன் திருமாவளவன் முன்னிலையில் அரங்கேறி, ‘ஆடற் செல்வி’ என்று அங்கீகரிக்கப்பட்டதை அரங்கேற்று காதையில்  பாடியிருக்கிறார் இளங்கோவடிகள்.

 

புராணவியல் படி பரத முனிவரால் உருவாக்கப்பட்டதே பரதம் என்று சொல்லப்பட்டாலும், 2000 ஆண்டுகளுக்கு முன்பே இக்கலை வடிவம் தமிழகத்தில் உருவானது.

 

 Parathanatyam Excursion

 

கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் என இக்கலை வடிவத்துக்குப் பல பெயர்கள் உண்டு. கடந்த எழுபது ஆண்டுகளாகத்தான் பரத நாட்டியம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சதிராட்டம் என்ற தமிழர் நடனத்திற்கு பரதநாட்டியம் என்று பெயரிட்டு பலரும் பரவலாகப் பயில்வதற்கு முனைப்புடன் செயல்பட்டார் என, மதுரையில் பிறந்த புகழ்பெற்ற நடனக் கலைஞரும், சென்னையில் கலாஷேத்ரா என்ற நடனப் பள்ளியை நிறுவியருமான ருக்மிணி தேவி அருண்டேலை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

 

ஆடல் கலையே தேவன் தந்தது; தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது! என, பரதநாட்டியம் எனப்படும் தெய்வீகக்கலை போற்றுதலுக்குரியதாக உலகமெங்கும் வியாபித்துள்ளது.    

 

 படங்கள் : லைட்ஸ் ஆன், திருச்சி   

 

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார். 

Next Story

தமிழ் படிக்கத் தெரியாத நாம் தமிழர் கட்சி வேட்பாளர்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Naam Tamilar Party candidate in Virudhunagar constituency Kousi does not know Tamil

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளிலும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அந்த வகையில், விருதுநகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சி. கவுசிக் என்பவர் நேற்று விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஆட்சியர், வேட்பாளர் கவுசிக்கை உறுதிமொழி படிவத்தை வாசிக்க சொன்னார். ஆனால் தனக்கு தமிழ் தெரியாது என்று வேட்பாளர் கவுசிக் கூற, அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வாசிக்க அதனை கவுசிக் பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் மேலக்கலங்கலைச் சேர்ந்த மருத்துவரான கவுசிக். நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறையின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் இந்த தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார். கவுசிக்கின் பெற்றோர்கள் வட மாநிலத்தில் வசித்து வருகின்றனர். அதனால் கவுசிக்கும் அங்கேயே படித்ததால் அவருக்கு தமிழ் பேச மட்டுமே தெரியும்; வாசிக்க தெரியாது என்று கூறப்படுகிறது.