Skip to main content

வாதம், பித்தம், கபம் இப்படியும் சரி செய்யலாம் - விளக்குகிறார் சித்த மருத்துவர் அருண் 

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Siddha doctor Arun Health tips

 

பல்வேறு நோய்களை வீட்டிலிருந்தே சரிசெய்யும் முறை பற்றி சித்த மருத்துவர் அருண் விளக்குகிறார்

 

உணவே மருந்து, மருந்தே உணவு என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உணவே மருந்து என்பது கூட நமக்குப் புரியும். மருந்தே உணவு என்றால் என்ன என்கிற கேள்வி அனைவருக்கும் வரும். ஒருகாலத்தில் அனைவரின் வீட்டிலும் அஞ்சறைப்பெட்டி இருந்தது. அதில் மஞ்சள், மிளகு, வெந்தயம், சீரகம், பூண்டு, பெருங்காயம், சுக்கு, ஏலக்காய் ஆகியவை இருக்கும். இவை அனைத்தும் உணவாகவும் பயன்படும், மருந்தாகவும் பயன்படும். சிறிய நோய்கள் முதல் பெரிய நோய்கள் வரை இவற்றால் குணப்படுத்த முடியும். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் என்பது பழமொழி. 

 

மிளகு என்பது நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கக் கூடியது. கிருமிகளுக்கு எதிராக போராடக் கூடியது. மருந்துகளோடு மிளகு சேர்த்துக் கொடுக்கும்போது அதன் வீரியம் அதிகரிக்கும் என்பது ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். பூண்டு கொழுப்பைத் தடுக்கக் கூடியது. இதன் மூலம் மாரடைப்பு தடுக்கப்படும். சீரகம் செரிமானத்துக்கு உதவும், பித்தத்தைக் குறைக்கும். 

 

இவை அனைத்தையுமே நாம் உணவாகவும் பயன்படுத்துகிறோம், மருந்தாகவும் பயன்படுத்துகிறோம். வாதம், பித்தம், கபம் ஆகியவை இயல்பு நிலையிலிருந்து மாறும்போது தான் நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை எப்போதும் இயல்பு நிலையில் வைத்திருக்க வேண்டும். இதை உணவின் மூலம் நம்மால் செய்ய முடியும். அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பொருட்களை அன்றாடம் சமையலில் நாம் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக ரசம் வைக்கும்போது இதில் உள்ள பெரும்பாலான பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். எனவே ரசம் உண்ணுவதே அவற்றை இயல்பில் வைப்பதற்கான முக்கியமான ஒரு வழி. 

 

நம்முடைய உடலைப் பாதுகாப்பதற்கான அடிப்படையான ஒரு விஷயம் இது. ஒவ்வொன்றையும் தேவையான அளவுக்கு நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தலைவலியை நீக்க சுக்கு பயன்படும். இனிப்பினால் வரும் மந்தத்தைப் போக்க ஏலக்காய் நமக்குப் பயன்படுகிறது. மஞ்சள் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. அனைத்து குழம்புகளிலும் மஞ்சள் பொடியை நாம் சேர்க்கிறோம். குடல் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி கூட மஞ்சளுக்கு இருக்கிறது. மஞ்சள் பயன்பாட்டினால் தான் இந்தியாவில் குடல் புற்றுநோய் குறைவாக இருக்கிறது.

 


 

Next Story

குழந்தைகளுக்கு சித்த மருந்துகள் கொடுக்கலாமா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 22/12/2023 | Edited on 26/12/2023
 Dr Arun | Cold | Fever | Child | Siddha | Recap |

சித்த மருத்துவ மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்விக்கு பிரபல சித்த மருத்துவர் அருண் விளக்கமளிக்கிறார்.

இன்றைய இளம் தாய்மார்களுக்கு தங்களுடைய குழந்தைகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் கொடுக்கலாமா என்ற சந்தேகம் வருகிறது. முதலில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நோய் உருவாகிறது என்று பார்ப்போம். காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு இதற்கெல்லாம் உடனடியாக பெரிய எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை.

பூமிக்கு வந்த உயிர் இங்குள்ள நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும்போது சில எதிர்வினை நடக்கத்தான் செய்யும். அதுதான் மேலே சொன்ன சிறிய அளவிலான நோய்களாகும். அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்கத்தான் செய்யும், எங்கேயாவது சளியால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையை தூக்கி கொஞ்சினாலோ, பேருந்துகளில் பயணிக்கும்போது அருகே இருப்பவர்களுக்கு தொற்று இருந்தால் கூட சளி பிடிக்கத்தான் செய்யும். சக குழந்தைகளோடு விளையாடும்போது கூட யாராவது ஒருவருக்கு சளி இருந்தால் கூட மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

யாரோடும் பழகாமலும், பார்க்காமலும், தொடாமலும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் எந்த நோய் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கிற எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும். சிறுவயதிலேயே தாய்ப்பாலுடன் இணைத்து உரை மருந்து கொடுப்பார்கள், அதை ஆறு மாதம் வரை கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது குழந்தைக்கு உரை மருந்தின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும். 12 வயது வரை கொடுக்கலாம். 

இந்த உரை மருந்தில் சுக்கு, அதிமதுரம், அக்கரகாரம், வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், திப்பிலி, பெருங்காயம், பூண்டு அனைத்தும் கலந்து இருக்கும். முன்னெல்லாம் இதை வீட்டிலேயே தயாரிப்பார்கள், இப்பொழுது நகரங்களில் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கிறது. வாங்கி பயன்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானாலே காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்காமல் காக்கலாம். இந்த சித்த மருந்துகளை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் நோயின் தன்மை தீவிரமடைந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்ளலாம்.

Next Story

நன்றாக தூங்குவதற்கு இதை பின்பற்றுங்க - சித்த மருத்துவர் நித்யா விளக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Siddha doctor Nithya - Sleeping tips

 

நன்றாக தூங்குவதற்கு சித்த மருத்துவர் நித்யா சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறார்.

 

தூக்கமின்மையால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்று முந்தைய பகுதியில் பார்த்தோம். எனவே இதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறவர்கள் ஒரு வாரம் சித்த மருத்துவ குறிப்பின்படி சொல்கிற சில டிப்ஸ்களை பின்பற்றினாலே உடனடியாக சரி செய்ய முடியும்.

 

காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இரவு முழுவதும் வயிறு நீரற்று உஷ்ணமாக இருப்பதால் முதற்கட்டமாக நீர் அருந்த வேண்டும். இரவே வெந்தயம் ஊறப்போட்டு அதை பருகலாம். அல்லது சீரகம் ஊற போட்டு குடிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி, தேர்த்தாங்க் கொட்டை, வெட்டி வேர் போன்றவற்றை வாங்கி தேவையான அளவு எடுத்துக் கொண்டு இரவே ஊறவைத்து காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். 

 

இது குடிப்பதால் உடல் உஷ்ணம் நீங்கி ஆழ்ந்த தூக்கத்திற்கு உங்களை உடல் தயார்ப்படுத்திக் கொள்ளும். கசகசாவை பாலில் கலந்து குடிக்கலாம். சித்த மருத்துவத்தில் அதிமதுரம் சூரணம் வாங்கி இளம் சூடான பாலில் கலந்து குடிக்கலாம். அதிமதுரம் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் சரிசெய்து தூக்கம் அதிகரிக்கும். இரவு நேர உணவை சீக்கிரம் முடித்துவிட்டு தூங்க வேண்டும். போனை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது. ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் இரவு நேர உறக்கத்தினை பெறலாம்.