Skip to main content

அஞ்சறைப் பெட்டியின் அவசியம் - விளக்குகிறார் சித்த மருத்துவர் அருண்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

 Siddha Doctor Arun Explained about Spice Box

 

உணவே மருந்து; மருந்தே உணவு என்பது நாம் பலமுறை கேள்விப்பட்ட சொல்லாடல். நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளில் குவிந்திருக்கும் மருத்துவ நலன்கள் என்னென்ன? நம்முடைய முன்னோர்கள் எவ்வாறு உணவையே மருந்தாகப் பயன்படுத்தினார்கள்? என்பது குறித்து சித்த மருத்துவர் டாக்டர். அருண் விளக்குகிறார்.

 

மருந்தே உணவு என்றால் என்ன? அதன் அர்த்தம் தான் என்ன என்ற கேள்வி பலருக்கு வரும். உணவுப் பொருட்கள் மருந்தாகப் பயன்படக்கூடியவை. வீட்டில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள், மிளகு, வெந்தயம், சீரகம், பூண்டு, பெருங்காயம், சுக்கு, ஏலக்காய் ஆகியவை இருக்கும். இவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட முறையில் மருந்தாகவும் பயன்படும்; உணவாகவும் பயன்படும். இதனால் தான் உணவே மருந்து, மருந்தே உணவு என்கிறோம். தினமும் நாம் பயன்படுத்தும்போது உணவாகவும், நோய்க்காகப் பயன்படுத்தும்போது மருந்தாகவும் பயன்படுகிறது.

 

மஞ்சள் ஒரு மகத்தான மருந்து. சிறிய நோய்களிலிருந்து பெரிய நோய்கள் வரை குணப்படுத்தக்கூடியது. மிளகு, நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கக்கூடியது. கிருமிகளுக்கு எதிராகப் போராடக் கூடியது. எந்த மருந்தாக இருந்தாலும் அதனோடு மிளகு சேர்த்துக் கொடுத்தால் மருந்தின் வீரியம் அதிகரிக்கும். வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட்டால் குளிர்ச்சி தரும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தம். பூண்டு கொழுப்பைத் தடுக்கும். சீரகம் செரிமானத்திற்கு உதவுகிறது; பித்தத்தைத் தணிக்கக் கூடியது. 

 

பொதுவாக சித்த மருத்துவத்தில் நாடி பிடித்துப் பார்க்கும் வழக்கம் உண்டு. அதன் மூலம் நோயை அவர்களால் கண்டறிய முடியும். வாதம், பித்தம், கபம் ஆகியவை இயல்பு நிலையில் இருக்கும்போது நோய்கள் அண்டாது. அன்றாடம் ரசம் வைத்து சாப்பிட்டாலே அவை இயல்பு நிலையில் இருக்கும். மிளகு கசாயம், அருகம்புல் சாறு, இனிப்பில் ஏலக்காய், குழம்புகளில் மஞ்சள், சர்க்கரை நோய் தீர தண்ணீரில் வெந்தயம், தொண்டையில் உள்ள டான்சில் பிரச்சனை தீர தேனுடன் பூண்டு ஆகியவை உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பெரும்பங்காற்றுகிறது. மேற்சொன்ன ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் மிகப்பெரிய மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. பவுடர்களாக இருந்தாலும் அவற்றை வீட்டிலேயே தயாரிப்பது சிறந்தது. இவை அனைத்தையும் தினசரி உணவாகவே நாம் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியம் உறுதி.


 

Next Story

ஒழுங்காக தூங்காவிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Dr Arunachalam | Insomnia |

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆனால் நாம் வாழும் இன்றைய நவீன உலகில், நம் நேரத்தின் தேவைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை, தவிர்க்கமுடியாத சங்கிலியாக அது தூங்கும் நேரத்தையும் சேர்த்து கடன் வாங்கிகொள்ளத்தான்  செய்கிறது. அமெரிக்க மனநல சங்கத்தின் படி, மூன்றில் ஒரு பங்கு மக்கள் தூக்கமின்மை அறிகுறிகளைப் புகாரளிப்பதாகவும், 6 முதல் 10 சதவீதம் பேர் தூக்கமின்மை சிகிச்சையை சந்திக்கும் அறிகுறிகளையும் கொண்டுள்ளனர். ஒரு நாள் அல்லது இரண்டு நாள்  தூக்கம் கெடுவது ஒரு முக்கியமான பிரச்சனை அல்ல. ஆனால் அதுவே வாரங்களாக, மாதங்களாக தொடரும்போது தான் அது அந்த தனிபட்ட நபரை மட்டுமல்லாது, அவரை சார்ந்த முழு குடும்பத்தின் இயக்கவியலையும் பாதிக்கிறது. இப்படியான தூக்கமின்மையின் காரணிகளையும், விளைவுகளையும், பற்றி மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடன் சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.. 

தூக்கமின்மையால் இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரும் பாதிப்படைய பெரிய காரணங்கள் என்ன ? அதை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் ?

அக்கியூட் இன்சோம்னியா என்று குறிப்பிடுவது ஒரு இரவு முழுக்க தூங்காமல் இருப்பது, ஒரு சில வாரங்களோ அல்லது, வாரத்திற்கு 3 நாள் என்று மூன்று மாதங்கள் நீடித்து இருக்கும் நிலையை தூக்கமின்மைக்குள்  வகைப்படுத்தலாம். தூக்கம் என்பது நம் செல்போன்க்கு ரீச்சார்ஜ் செய்வது போன்று. தூக்கம் இல்லையென்றால் ஒருநாள் சமாளிக்கும் உடம்பு, அதுவே வாடிக்கையாகும் போது நம் சிந்தனை வேகம் குறைவது முதல் மனஎரிச்சல் வரை  வருகிறது. 

நான் 1994ல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்தபோது ஒரு நோயாளி மட்டுமே காணப்பட்ட நிலையில், நைட் ஷிப்ட் , ஐ .டி  நிறுவனங்கள் தொடங்கிய காலம் பிறகு, தூக்கமின்மையால் வரும் அவ்வளவு நோய்களையும் பார்க்க வேண்டி வருகிறது. தண்ணீரை எவ்வாறு முறைப்படுத்தி காய்ச்சி குடிக்கவேண்டும் என்று நோயாளிகளுக்கு எடுத்துரைக்கும்போதே, இவ்வாறு அனுப்பிவிட்டீர்கள் என்றால், உங்களுக்கு நோயாளிகளே வரமாட்டார்கள் என்று என்னிடம் கருத்துகள்  வந்தது. இது இல்லையென்றால் இன்னொரு நோய் வரும் என்று பதிலளித்தேன். அதுபோல இப்போது பொது வெளியில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, அது சிறுநீர் கல் பிரச்சனைகளுக்கு வழிசெய்து, மருத்துவமனைக்கு சென்று அளவுக்கு அதிகமாக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

எனவே, நாம் என்னதான் கற்பித்தாலும், அது வேறொரு பாதையைதான் சென்று அடைகிறது. தூக்கமின்மை நோயாளிகளை அதிகமாக இன்று பார்ப்பது  போல் 1994ல் பார்த்தது இல்லை. காலத்திற்கேற்ப, மனிதன் தன் உடலை புரிந்துக்  கொள்ளாத வரைக்கும் நோய்  வந்து கொண்டே இருக்கும். 

தூக்கமின்மை வராமல் இருக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

நம் உடல் ஒரு கிரோனோலோஜிக்கல் கிளாக்கின்  கட்டளைப்படி தான் இயங்கி வருகிறது. அந்த 24 மணி நேரம் இயங்கும் கடிகாரத்திற்கு ரிதம் தான் பிடிக்கும்.  எப்படி காலை, மாலை என்று இரு வேளையும்  சூரியன் உதிக்கும் நேரமும், அஸ்தமன நேரம் தவறாமல் நடப்பதை போன்றது அது. பகலில் தூங்கி, இரவில் விழிக்கும் விலங்குகளைப்  போன்று அல்லாது, இரவில் தூங்கி பகலில் 12 மணி நேரம் இயங்கும் விலங்குகளை சேர்ந்தவர்களே மனிதர்கள். நம் உடலே இயற்கையின் ரிதமோடு ஒன்றியது தான். சூரியனால் உதயமாகும் மலர்கள் முதல், கண்கள் தெரியும் விலங்குகள் வரை,  சூரியன் உதித்தலோடு வாழ்க்கையை தொடர்ந்து, சூரியன் மறையும் வரை முடித்து 12 மணி நேரம் ஓய்வெடுக்கும் வகையாகத்தான், நம் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. 

தூங்கினால் மட்டும்தான் பல உறுப்புகள் சரியாக இயங்கும். 3 மாதம் தொடர்ந்து தூங்காத ஆண்களுக்கும், 6 மாதம் தொடர்ந்து தூங்காத  பெண்களுக்கும், வாழ்க்கை முறை மாற்ற நோய்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். மரணங்கள் அதிகமாக உலகில் காணப்படுவதற்கு இது போன்று தொற்று அல்லாத நோய்களே  பெருமளவு காணப்படுகிறது. இதற்கு தூக்கமின்மை மிக முக்கியமாக இருக்கிறது. மன அழுத்தம் அல்லது வேலையை சரியாக கையாளுதல் இல்லாமல்  இருப்பது போன்ற காரணியாக தூக்கமின்மைக்கு  இருக்கலாம்.  

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் திருமணமான பெண்களையும் , ஆண்களையும் இது மிகவும் பாதித்தது. இரவெல்லாம் அலுவலகத்தில் மேலாளரோடு வேலை நிமித்தமாக வாக்குவாதம் செய்கிறார்கள் என்றெல்லாம் பாதிக்கப்பட்ட  அவரவர் தந்தைமார்கள் என்னிடம் கூட்டி வருவார்கள். இதுபோன்று காலகட்டத்தில் உழைக்கும்போதும், குறிப்பாக கல்வியும் இதில் முக்கிய பங்காக இருக்கிறது. என்னைப்பொறுத்த வரை ஒரு தொழிலை செய்வதற்கு அவனின் ஈடுபாடு தெரிந்து வாய்ப்பை தருவதே முக்கியமானதாக இருக்க முடியுமே தவிர்த்து, மனப்பாடம் செய்து வென்று ஒரு சமுதாயத்தில் நல்ல தொழில் வல்லுநராக இருப்பது கேள்வி குறியாகவே இருக்கிறது. 

ஒரு தாயார், தன் மகள் இரவு 12 மணி நேரம் தாண்டி படிப்பதாகவும், முடி கொட்டுவதாகவும் சமீப காலத்தில் நிறைய பேர் என்னிடம் வருகிறார்கள். இப்படி இரவு உறங்காமல் படித்து கொண்டே இருந்தால் பகலில் ஒன்றுமே நினைவில் இருப்பதில்லை. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவரவர் வாழ்க்கையை எவ்வாறு தயார்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே இது விளைகிறது. எனவே தூக்கம் என்பது உடலை பொறுத்த வரை, மிக மிக அத்தியாவசியமான  தேவை. எனவே தூக்கமின்மையை விட்டு நல்ல தூங்கும் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

Next Story

இளம் வயதில் முதிய தோற்றத்திற்கு என்ன காரணம்? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
 Kirthika Tharan | Skin | Allergy |

இளம் வயதிலேயே சிலர் பார்ப்பதற்கு வயதான தோற்றமாக காட்சியளிக்கிறார்கள். இதற்கான காரணங்களைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

சிலர் இளம் வயதிலேயே பார்ப்பதற்கு வயதான தோற்றமளிப்பார்கள். சிலர் வயதானாலும் இளமையாக இருப்பார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக உணவில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் இளமை சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு முக்கிய பங்களிக்கிறது. மேலும் ‘ஸ்கின் மைக்ரோப்ஸ்’ உடலெங்கும் பரவி இருக்கிறது அவையும் ஒரு காரணமாகும். ஸ்கின் மைக்ரோப்ஸ் என்பது நமது உடலில் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பல்வேறு வகை நுண்ணுயிரிகள் தோலில் மேல் உள்ளது. அவற்றை எப்போதும் சமநிலையில் வைத்துக் கொண்டால் நாம் இளமையாக இருப்போம்.

ஸ்கின் மைக்ரோப்ஸை தொந்தரவு செய்யும் அளவிற்கு நச்சுத்தன்மை மிக்க பொருட்களை தோலின் மீது பயன்படுத்தும் போது அவை உயிரற்ற தன்மையாகி தோலிற்கு பாதுகாப்பு அளிக்காமல் போய் விடுகிறது. இதனால் தோல் இளமைத்தன்மையற்று காட்சியளிக்கிறது. நாம் உடலுக்கு பயன்படுத்துகிற கிரீம்கள், சோப்புகள், ஆகியவற்றினை தோல் மருத்துவர் பரிந்துரையின் பேரில் தான் வாங்கி பயன்படுத்த வேண்டும். ஆனால், நாம் அப்படி பயன்படுத்துவதில்லை. இதனாலும் இளமைத் தோற்றம் இல்லாமல் ஆகிவிடுகிறது.

ஆயில் ஸ்கின், டிரை ஸ்கின் என ஒவ்வொருவருக்கும் ஸ்கின் வித்தியாசப்படும். உடலுக்குள் நடக்கும் வேதியியல் மாற்றங்கள் உடலுக்கு வெளியே தோலிலும் வெளிப்படும். அதை முறையாக ஸ்கின் ஸ்பெசலிஸ்ட்டுகளிடம் காண்பித்து நாம் சரி செய்துகொள்வதில்லை. உடனடியாக நச்சுத்தன்மையின் அளவோ, வீரியமோ தெரியாத கிரீம்களையோ, சோப்பையோ பயன்படுத்தி சரியாக்கி விட்டதாக நினைத்துக் கொள்கிறோம். 

பச்சைப்பயிறு மாவு கரைத்து உடலில் பூசுங்கள் என்றோ இயற்கைக்கு சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள் என்றோ இன்றைய அவசர காலகட்டத்தில் சொல்ல முடியாது, மாடர்ன் என்னவோ அதற்கு தகுந்தாற்போல் நாம் மாறிக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அதிகப்படியான நச்சுத்தன்மை வாய்ந்த கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்த்தே ஆக வேண்டும். குறிப்பாக வெயிலில் போனால் சன் ஸ்கிரீன் லோசன் என்று தடவுகிறார்கள். வெயில் தோலுக்கு உணவாகும், அதிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி உடலுக்கு நன்மையை உண்டாக்க கூடியது. 

அப்ப எப்படித்தான் தோலினை பராமரிப்பது என்றால், ‘மைக்ரோப்ஸ் ப்ரண்ட்லி ஸ்கின் கேர்’ முறைக்கு நாம் மாற வேண்டும். அவை தயிர், பால் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், நிறைய தண்ணீர் குடித்தல், நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் போன்ற சிறு சிறு விசயங்களில் கவனம் செலுத்தும் போது தோல் இளமையாக காட்சியளிக்கும்.