Skip to main content

செல்ஃபி ப்ரியரா நீங்கள்...? - இது உங்களுக்கான பதிவு!

Published on 02/07/2018 | Edited on 02/07/2018

சில ஆயிரங்களில் கிடைக்கும் ஸ்மார்ட்ஃபோன்களே பல வசதிகளைத் தருவதால், உலகமே அதற்குள் சுருங்கிவிட்டது. குறிப்பாக பரவலாக இருக்கும் செல்ஃபி மோகத்தை வியாபாரமாக்க மூன்று, நான்கு கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள்தான் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றை வாங்குபவர்கள் நினைவுகளைச் சேமிப்பதாக சொல்கிறார்கள். ஆனால், செல்லுமிடமெல்லாம் செல்ஃபி எடுத்தால், எந்த நினைவும் தங்காது என அதிர்ச்சியூட்டுகின்றனர் அறிவியலாளர்கள். 
 

Selfie


 

 

‘புகைப்படங்களை கிளிக்கிக் கொண்டால் நினைவுகளைப் பத்திரப்படுத்தலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதன் விளைவோ எதிர்மறையாக இருக்கிறது’ என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி ஜூலியா. இதை வெறும் கருத்தாக முன்வைக்காமல், ஒரு ஆராய்ச்சியையும் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். ஒரு குழுவை ஓவியங்கள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்களில் சிலர் புகைப்படம், செல்ஃபி மற்றும் ஸ்நாப்சாட் பிரியர்களாக இருக்க, சிலர் எந்தப் புகைப்படமும் எடுக்கவில்லை. 
 

மொத்தமாக அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்த அந்தக் குழுவினரை ஒவ்வொருவராக ஆய்வுக்குட்படுத்தியபோது, புகைப்படம், செல்ஃபி மற்றும் ஸ்நாப்சாட் பயன்படுத்திய பலராலும் அங்கு என்ன பார்த்தார்கள் என்பதை தெளிவாக விளக்க முடியவில்லை. அதேசமயம், புகைப்படங்கள் எடுப்பதைத் தவிர்த்தவர்கள் நல்ல முறையில் தாங்கள் ரசித்ததை விளக்கியுள்ளனர். செல்ஃபி போன்ற விஷயங்களில் கவனம் போகும்போது, இயல்பாகவே தாங்கள் காணும் பொருளின் மீதான கவனத்தை அவர்கள் இழக்கிறார்கள் என்பது அறிவியலாளர்கள் சொல்லும் முடிவு. எனவே, செல்ஃபிக்களில் நம் முகத்தை மட்டும் ரசிக்காமல், அழகு கொஞ்சும் உலகையும் கொஞ்சம் கவனித்து நினைவுகளை இயல்பாகவே சேமிக்கலாமே.
 

Next Story

செல்பி எடுக்க முயன்று விபரீதம்; சிங்கம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Tragedy trying to take a selfie; One killed after being attacked by a lion

அண்மையில் திருப்பதியில் காட்டு வழியாகச் சென்று சிறுமி புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது திருப்பதியில் சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற பார்வையாளர் ஒருவர் சிங்கம் தாக்கி உயிரிழந்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சுந்தரி, குமார் தெங்கள்பூர் உள்ளிட்ட இரண்டு ஆண் சிங்கங்களும், ஒரு பெண் சிங்கமும் உள்ளது. பார்வையாளர்களுக்காக ஒவ்வொரு நாளும் சிங்கங்கள் பாதுகாப்பு கூண்டில் இருந்து காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து முப்பது வரை திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் இருந்து வளாகத்திற்குள் இன்று திறந்துவிடப்பட்டது. அப்போது ஒருவர் செல்பி எடுப்பதற்காக முயன்றபோது சிங்கம் நடமாடும் வளாகத்திற்குள் தவறி விழுந்தார். அவரது ஆடைகளைக் கடித்துக் குதறிய சிங்கம் அவரது கழுத்தையும் கடித்துக் குதறியது. இதைப் பார்த்த வெளியே இருந்த மற்ற பார்வையாளர்கள் அலறியடித்து ஓடினர். அதன் பிறகு மரத்தில் ஏறித் தப்ப முயன்றபோதும்  விடாத சிங்கம் அவரைத் தாக்கிக் கொன்றது.

இந்த சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சிங்கத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஊழியர்கள் அதனைக் கூண்டில் அடைத்தனர். அந்த நபரின் உடல் கைப்பற்றப்பட்டது. சிங்கத்தின் தாக்குதலால் உயிரிழந்த நபர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதும், அவரின் பெயர் குருஜாலா பிரகலாதா என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

விபரீத செல்ஃபியால் உயிரிழந்த புதுமண தம்பதி; காப்பாற்ற முயன்றவரும் உயிரிழந்த சோகம்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

 Newly wed couple after botched selfie; It is a tragedy that an uninsured attempter also lost his life

 

அண்மையில் கர்நாடகாவில் அருவி ஒன்றில் ரீல்ஸ் வீடியோவிற்கு மாசாக போஸ் கொடுத்த இளைஞர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் திடீரென கால் இடறி விழுந்து அருவியில் அடித்துச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் இதேபோல கேரள மாநிலத்திலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள பாரிப்பள்ளியைச் சேர்ந்தவர் சித்திக். இவருக்கும் நவுபியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அன்சில் என்ற உறவினரின் வீட்டிற்கு இருவரும் விருந்துக்காக சென்றுள்ளனர். இருவரும் விருந்தை முடித்துவிட்டு மாலையில் அங்கே ஏதேனும் இடத்தை சுற்றிப் பார்க்கலாம் என முடிவெடுத்து அருகில் உள்ள ஆற்றுக்கு சென்றுள்ளனர்.

 

 Newlywed couple after botched selfie; It is a tragedy that an uninsured attempter also lost his life

 

அன்சில் குடும்பத்தினரும் உடன் துணையாக சென்றுள்ளனர். அப்பொழுது ஆற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்த தம்பதிகள் இருவரும் அங்கிருந்த பாறை ஒன்றின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். அதற்காக முயன்ற பொழுது இருவரும் தடுமாறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கினர். இருவரையும் காப்பாற்ற உறவினர் அன்சிலும்ல் ஆற்றில் குதித்தார். ஆனால் அவரும் நீரில் மூழ்கினார். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் உடலைத் தேடினர். இறுதியாக மூவரின் உடலும் சடலமாக மீட்கப்பட்டது. செல்ஃபி எடுக்க முயன்று தம்பதி மட்டுமில்லாது, அவரைக் காப்பாற்றச் சென்ற உறவினரும் உயிரிழந்த சம்பவம் அங்கு  சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.