Skip to main content

''நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?’'

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

மனிதனை மனிதனாக மதிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு இதுவும் மிக முக்கியம். பண வசதி படைத்தவர்கள், உயர் பதவி வகிப்பவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், உடல் வலு பெற்றவர்கள் போன்றவர்களை மட்டுமே மதிப்பதுதான் பலரது செயலாக இருக்கும். இது உண்மையான மதிப்பா என்றால் நிச்சயமாக இருக்காது. பயம் காரணமாக வரும் போலித்தனமான மதிப்பு மரியாதையாகவே இதனைக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்களை விடவும் வசதி குறைவானவர்கள், அதிகாரம் அற்றவர்கள், அவர்களை விட குறைந்த பதவியை வகிப்பவர்கள், நோஞ்சான்கள் போன்றவர்களைக் கண்டால் கொஞ்சம்கூட மதிப்பு தருவதே கிடையாது. புழு பூச்சியைப் போல அவர்களைப் பார்ப்பார்கள். அலுவலக செக்யூரிட்டி தன்னைப் பார்த்ததும் வணக்கம் செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் எதிர்பார்ப்பர். அப்படியே அவர் சல்யூட் வைத்தால் பதிலுக்கு வணக்கம் தெரிவிக்க மாட்டார்கள். அதனைக் கண்டுகொள்ளாததுபோல செல்வார்கள்.

security images

 

வணக்கம் தெரிவித்தால் அது மரியாதைக் குறைவு என்ற கருத்து உயர் மட்ட மனிதர்களிடம் நிறைந்திருக்கிறது. பதில் வணக்கம் செய்யவில்லை என்றால் செக்யூரிட்டியின் மனம் வலிக்கத்தானே செய்யும். அவர்களும் மனிதர்கள் தானே? இறைச்சிப் பதப்படுத்தப்படும் தொழிற்சாலை ஒன்றில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் ஒருவர் ஒருநாள் மாலை நேரத்தில் இறைச்சியைப் பதப்படுத்த அமைக்கப்பட்டுள்ள ஃப்ரீஸர் அறைக்குள் நுழைந்தார். அங்கே ஏதோ சோதனை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அறையின் தானியங்கிக் கதவு பூட்டிக் கொண்டுவிட்டது. அவர் உள்ளே மாட்டிக் கொண்டார்.யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று செல்பேசியைத் தேடியபோது அதனை மேஜை மீதே வைத்துவிட்டு வந்தது நினைவு வந்தது. இப்போது என்ன செய்வது என்ற பயம் வந்துவிட்டது. பயங்கரமாகக் கத்திக் கூச்சலிட்டார். கதவை முடிந்த வரையில் பலமாகத் தட்டி உதவி செய்ய யாராவது வருமாறு அழைத்தார்.ஒரு பயனும் இல்லை. வெளியே யாருக்குமே அவர் எழுப்பிய ஓசை கேட்கவே இல்லை. ஐஸ் கட்டிகளின் குளிர் மிகப் பயங்கரமாக இருந்ததால் ஒரு கட்டத்தில் கை, கால்கள் அனைத்தும் மரத்துப் போயின. குரல் எழுப்பக்கூட வலுவின்றி சோர்ந்து போனார்.  இப்படியே இன்னும் சில நிமிட நேரம் நீடித்தால் தான் இறக்கப் போவது உறுதி என்ற பயம் அவருள் எழுந்தது. 

மனம் தளர்ந்து மயங்கி விழப்போகிற நிலையில் திடீரென்று கதவு திறப்பதுபோல சப்தம் கேட்டது. மகிழ்ச்சி துளிர்விட பார்த்த போது, தொழிற்சாலை காவலாளி கதவைத் திறந்தபடியே, ‘சார்... சார்..’ என்று குரல் கொடுத்தபடியே உள்ளே வந்தார்.சாக இருந்தவனைக் காப்பாற்றிய அந்தக் காவலாளியை கட்டி அணைத்தார் அதிகாரி. பின்னர் அவரிடம், ‘‘நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ என்று சந்தேகத்தோடு கேட்டார்.‘‘சார் ரொம்ப வருஷமா இந்த ஃபேக்டரில வேலை பார்த்து வர்றேன். என்னை யாரும் மனுசனாவே மதிக்கறதில்லை. வணக்கம் சொன்னாலும் பதிலுக்கு சொல்றதே இல்ல. ஆனா நீங்க மட்டும்தான்  காலைலயும், சாயங்காலமும் நான் சல்யூட் அடிச்சா பதிலுக்கு திருப்பி வணக்கம் சொல்வீங்க. அதனால உங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும். இன்னிக்குக் காலைல நீங்க வணக்கம் சொன்னீங்க. ஆனா சாயங்காலம் எல்லாரும் திரும்பிப் போயிட்டாங்க. ஆனா பதிலுக்கு வணக்கம் சொல்ற உங்கள மட்டும் காணோம். அதனால சந்தேகம் வந்திச்சி. ஒவ்வொரு இடமா உங்களைத் தேடினேன். அப்பத்தான் இங்க உங்களக் கண்டுபிடிச்சேன்’’ என்றார் காவலாளி.மனிதனை மனிதனாக மதித்துப் பழகிய குணம் இருந்ததால்தான் காவலாளிக்கு பதில் வணக்கம் செய்தார். அதுதான் இன்று அவரது உயிரையே காப்பாற்றி இருக்கிறது. அவரைத் தேடிக் கண்டுபிடிக்கிற அளவிற்கு காவலாளிக்குத் தோன்றி இருக்கிறது என்றால் உண்மையான முன்னேற்றம் என்பது இதுதான். பணத்தில் மட்டுமல்லாமல் பிறரின் மனத்திலும் இடம் பிடிப்பது மட்டுமே உண்மையான முன்னேற்றமாக இருக்கும்.

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

குடும்பம் கைவிட்டதும் கலையை கையில் எடுத்தேன் - டிரெண்டிங் நடன பிரபலம் ஷர்மிளா உற்சாகம்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 LETS DANCE SHARMILA interview

 

சினிமா பாடல்களை அப்படியே ரீ-கிரியேசன் செய்து இணையத்தில் உலாவவிட்டு பிரபலமடைந்து வருகிறார்கள் இன்றைய இளைய தலைமுறையினர்; பலர் இதனை கொண்டாட்டமாகவே செய்தாலும் சிலருக்கோ அது தனது வலியினை மறைப்பதற்கான ஒன்றாக உள்ளதாகவும் இருக்கிறது என்கின்றனர் சிலர். அந்த வகையில் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றையும் நம்முடைய நேர்காணலின் மூலம் டான்ஸர் ஷர்மிளா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலிருந்தே எனக்கு இருந்தது. சென்னை வந்த பிறகு ஆக்டிங், டான்ஸ் என்று பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறேன். பள்ளிக்காலங்களில் பல்வேறு போட்டிகளில் நான் கலந்துகொள்வேன். இதுதான் செய்வேன் என்று எப்போதும் என்னை நான் சுருக்கிக்கொண்டது கிடையாது. அனைத்து விதமான கலைகளிலும் என்னால் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். சமூக வலைதளங்களால் இன்று வாய்ப்புகள் கிடைப்பது எளிமையாகி இருக்கிறது. 

 

அம்மா, அப்பாவுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்ததால் சிறுவயது முதல் நான் ஹாஸ்டலில் இருந்தேன். தலைமையாசிரியரின் உதவியால் தான் என்னுடைய பள்ளிப்படிப்பை நான் முடித்தேன். அடுத்தகட்ட படிப்புக்கு கோர்ட் உத்தரவு மூலம் என்னுடைய தந்தை மாதாமாதம் கொடுத்த ஜீவனாம்ச பணம் உதவியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடியோக்கள் செய்ய ஆரம்பித்து சென்னை வந்தேன். எனக்கு கிடைத்த ஆயுதம் போன் தான். இரவெல்லாம் கண்விழித்து வீடியோக்கள் செய்வேன். 

 

 

நம்பிக்கையும் உழைப்பும் தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்கள். கொரோனா காலத்தில் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்குக் கிடைத்த வாய்ப்பு தான் லெட்ஸ் டான்ஸ் 360. ஒவ்வொருவருக்கும் என்னுடைய ஒவ்வொரு பர்ஃபாமன்ஸ் பிடிக்கும். சிலருக்கு என்னுடைய நடிப்பும் சிலருக்கு என்னுடைய நடனமும் பிடிக்கும் என்று சொல்வார்கள். என்னுடைய டீமிடமிருந்து எனக்கு எப்போதும் நல்ல சப்போர்ட் கிடைக்கும். என்னை அவர்கள் நன்றாக ஊக்குவிப்பார்கள். 

 

பறை இசை வாசிக்கும்போது எமோஷனலாக இருக்கும். நெகட்டிவ் கமெண்டுகள் வரும்போது அதைப் புறந்தள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது கடினம். பள்ளியில் இருக்கும்போது மற்ற மாணவர்கள் அவர்களுடைய பெற்றோருடன் பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக இருக்கும். ஆனால், எனக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தால் தான் என்னால் நிறைய சாதிக்க முடிகிறது என்று நினைக்கிறேன். எனக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எனக்கு எப்போதும் ஆதரவு. என்னுடைய வீடியோக்கள் பற்றி என் பெற்றோரிடம் சிலர் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு யூடியூப் குறித்து தெரியாது. 

 

என்னுடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டு என்னுடைய ஆசிரியர்கள் பாராட்டுவது பெருமையாக இருக்கும். என்னுடைய வீடியோக்களுக்காக அதிகமான முன்தயாரிப்புகளில் நான் எப்போதும் ஈடுபடுவேன். யூடியூபில் சில்வர் பட்டன் கிடைத்த நாள் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. என்னைப் போன்று இந்தத் துறைக்குள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் பாலா சாரின் 'இவன்தான் பாலா' என்கிற புத்தகத்தைப் படிக்க வேண்டும்.