Skip to main content

முடி உதிர்வுக்கு தீர்வு - விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் 

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

Remedy for Hair Loss - Explains Ayurvedic Doctor Sugandan

 

முடி உதிர்தலைத் தடுக்க நாம் சாப்பிட வேண்டியவை குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் நம்மிடையே விளக்குகிறார் 

 

முடி உதிர்தல் பிரச்சனை இன்று பலருக்கும் இருக்கிறது. ஹெல்மெட், ஏசி, ஷாம்பூ போன்ற பல காரணங்களினால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. வாரத்தில் இருமுறை நல்லெண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். இதைப் பலரும் இப்போது செய்வது கிடையாது. நேரமின்மையை அதற்கான காரணமாகச் சொல்கின்றனர். அந்தக் காலத்தில் கால் பாதத்தில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து வந்தனர். இதன் மூலம் உடலில் உள்ள சூடு வெளியேறும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும்போது தான் முடி உதிர்தல் ஏற்படும்.

 

மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மொபைல் ஸ்கிரீனை நாம் அதிகம் பார்க்கும்போது நம்மை அறியாமல் நம்முடைய தலையில் உஷ்ணம் ஏறும். அதிக நேரம் ஏசியில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை நாம் உண்ண வேண்டும். கால்சியம் உள்ள உணவுகளையும் நாம் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் முருங்கைக் கீரையில் இருக்கிறது. 

 

முருங்கைக் கீரையை நாம் உணவில் குறைவாகவே பயன்படுத்துகிறோம். பெண்களுக்கு நிறைய சத்து தேவைப்படுகிறது. அவர்கள் முருங்கைக் கீரையை அதிகம் உண்ண வேண்டும். மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதால், அவர்களுடைய எனர்ஜி குறைகிறது. இதனால் முடி உதிர்தல் பிரச்சனை அவர்களுக்கு இயல்பாகவே ஏற்படுகிறது. வாரத்தில் இருமுறை அவர்கள் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலையையும் நாம் உணவில் பயன்படுத்த வேண்டும். 

 

கறிவேப்பிலையில் நிறைய வைட்டமின்கள் இருக்கின்றன. கரிசலாங்கண்ணியை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி கருமையாகும். தினமும் நாம் பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டும். அனைத்து விதமான சத்துக்களும் அதில் இருக்கின்றன. காலையில் இரண்டு பேரிச்சம்பழம், மாலையில் இரண்டு பேரிச்சம்பழம் என்று நாம் சாப்பிட வேண்டும். அதேபோல் பாதாமையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பாதாம் எண்ணெய் பயன்படுத்துவதும் நல்லது. கொய்யாப்பழம், உலர் திராட்சை சாப்பிடுவது நல்லது. முடிந்தவரை சீயக்காய் பயன்படுத்தலாம்.

 

 

Next Story

வறட்டு இருமலுக்கு என்ன தான் தீர்வு? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Dr Suganthan | Cold | Dry Cough |

 

மழைக்காலங்களில் ஏற்படுகிற வறட்டு இருமலுக்கு ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் தீர்வு சொல்கிறார்

 

வறட்டு இருமலுக்கு எவ்வளவோ மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்பவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ‘மகா சுதர்சன சூரணம்’ பரிந்துரை செய்வோம். இதனை 125 மில்லி கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனை தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். 

 

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறவர்கள் பலவகையான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ’ஆடாதொடா மணப்பாகு’ பரிந்துரை செய்வோம். இது சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி சாப்பிட்டு வருவதால் நெஞ்சு சளியை சரி செய்து, நன்றாக மூச்சு விட உதவும். 

 

தீவிரமான காசநோய் ஏற்பட்டு சளி, இருமல் இருப்பவர்கள் ஆடாதொடா மணப்பாகு உடன் இம்பூரல் பொடியினை கலந்து சாப்பிட்டு வர சரி ஆகும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். இதனால் இருமல் நீங்கி ஆரோக்கியமான உடல்நிலைக்கு வரலாம்.

 

இருமலுக்கு அதிமதுரம், வெற்றிலை, மிளகு, ஓமம், துளசி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொண்டு தேநீர் வைப்பது போன்று காய்ச்சி அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சரியாகும். 

 

நல்லெண்ணைய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் வைரஸ் தொற்றுகள் தங்காது. சீரகம், ஓமம் கலந்து தண்ணீரை சுட வைத்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வறட்டு இருமலில் இருந்து குணமடையலாம். விஷக்காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்பு கசாயம் வைத்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு காய்ச்சல் அளவு குறையும்.

 

 

 

 

Next Story

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு பிரச்சனையா?  -  ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் ஹெல்த் டிப்ஸ்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Dr Suganthan | Digestion tips

 

தீபாவளி தின்பண்டங்கள் அதிகம் சாப்பிட்டு வயிறு மந்தமாகவே இருந்தால் பின்வருகிற டிப்ஸை பின்பற்றி சரி செய்து கொள்ளலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன்

 

தீபாவளிக்காக தலையில் எண்ணெய் தேய்த்து குளித்திருப்போம். இப்போதைய பருவ கால மாற்றத்தால் இதில் உங்களுக்கு சளி பிடிக்க வாய்ப்பிருக்கிறது. மழை காலம் என்பதால் சுடுதண்ணீர் வைத்து குளிப்பது நல்லது. மேலும் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும் ராஸ்னாதி சூரணம் வாங்கி உச்சந்தலையில் வைத்தால் நல்லது. மேலும், கற்பூராதி தைலம் என்று கிடைக்கும். அதை வாங்கி தேய்த்து வருவதாலும் தலைவலி, சளி பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு மந்தமாக இருந்தால் ஓமம் சிறிதளவு எடுத்துக்கொண்டு, சுடுதண்ணியில் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். வயிறு மந்தத்தால் வாந்தி எடுக்க முயன்றால், இதை குடிக்க வேண்டும். அப்போது இது சரியாகும். 

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு மலச்சிக்கல் ஏற்பட்டால் ஓமம், சீரகம், இந்து உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவற்றை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவு சுடுதண்ணீரில் கலந்து குடித்தால், காலையில் சிக்கல் சரியாகிவிடும். வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி தீபாவளி தீனியால் வரும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.

 

கடையில் தீபாவளி லேகியம் என்றே வைத்திருப்பார்கள். அவையெல்லாம் இது போன்ற வீட்டில் கிடைக்கும் மளிகை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுபவையே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.