Skip to main content

கம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம்! - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்! 

Published on 28/10/2020 | Edited on 31/10/2020
kadalaimittai

 

 

தனது சொந்த ஊரை பிரிந்து இன்னொரு நகரத்திலோ, நாட்டிலோ பணி நிமித்தமாக வாழ்பவர்கள் ஒவ்வொருவருமே தனது ஊரை மிஸ் பண்ணுவார்கள். அப்படி மிஸ் பண்றதுக்கான காரணங்கள் என்னென்ன? ஊர்... ஊரிலிருக்கும் உறவுகள்... அடுத்ததா, ஊருக்கே உரிய உணவுகள். உண்மைதான், இப்போதும் ஊருக்கு சென்று வரும் ஒருவர் தன் ஊரின் ஸ்பெஷல் உணவு/இனிப்பை அலுவலக நண்பர்களுக்கு வாங்கி வர வேண்டுமென்பது எல்லா அலுவலகங்களிலும் எழுதப்படாத விதி. உணவு சம்மந்தமாக இன்னும் நூறு யூ-ட்யூப் சேனல்கள் தொடங்கப்பட்டாலும் மில்லியன் வ்யூஸ் கொடுக்க ரெடியாக இருப்பவர்கள் நம்மவர்கள். இப்படி, உணவோடு உணர்வுபூர்வமான உறவு கொண்ட பெருமைமிகு 'ஃபுட்டி'க்கள் (foodies) நம் மக்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, வரப்பிரசாதமாக ஒரு வெப்சைட் இருக்கிறது. 'நேட்டிவ் ஸ்பெஷல்' (www.nativespecial.com) தான் அது. உள்ளே சென்று பார்த்தால், சுரக்கும் எச்சிலில் லேப்-டாப்/மொபைல் ஃபோன் நனைந்துவிடும், உருவாகும் கூஸ்பம்ப்ஸில் உடம்பு சிலிர்க்கும். திருநெல்வேலி அல்வா, திருவில்லிப்புத்தூர் பால்கோவா, கருப்பட்டி மைசூர்பாக், கரூர் தேங்காய் மிட்டாய்... என நீண்டுகொண்டே போகிறது ஸ்வீட் லிஸ்ட். நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உங்கள் ஊர் பண்டத்தை அதே ருசியோடு, அதே தயாரிப்பாளர்களிடம் வாங்கி அனுப்புகிறார்கள். எவ்வளவு பெரிய சேவை இது? எங்கு தொடங்கியது இது? தொடங்கியவர்களை தேடிப்பிடித்துப் பேசினோம்.

 

நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உங்கள் ஊர் பண்டத்தை அதே ருசியோடு, அதே பாரம்பரிய மணத்துடன் ஐந்தே நாட்களில் உங்கள் வசிப்பிடத்தில் ஹோம் டெலிவரி செய்கிறார்கள். எவ்வளவு பெரிய அசாத்தியச்  சேவை சங்கிலி இது? எப்படி சாத்தியமாயிற்று? எங்கு தொடங்கியது இது? தொடங்கியவர்களை தேடிப்பிடித்துப் பேசினோம்.


"என்ஜினியர் டிகிரி,  சாஃப்ட்வேர் வேலை, அமெரிக்க பயணம்  என்ற ரெகுலர் நடுத்தர குடும்ப இளைஞர்களின் போக்கில் பயணித்த இளைஞர்கள் என்றாலும் நம் மொழி மற்றும் மண் சார்ந்த சிந்தனையில்  இயல்பாகவே அதிக நாட்டம்  கொண்டிருந்தோம். தூர தேச வாழ்வியல் நமது ஊரின் சிறப்புகளை நிறைய உணர்த்தியிருந்த காலகட்டம். அங்கு அலுவலகத்தில் அனைத்து நாட்டுக்காரர்களும் அவரவர் ஊர் சென்று திரும்பும் பொழுது அவர்களுது ஊரின் உணவுப் பண்டங்களைக் கொணர்ந்து தருவது வழக்கம். அது போல் ஒரு நாள் இத்தாலியில் இருந்து வந்த ஒரு குறிப்பிட்ட பதார்த்தம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து மிகுந்த வரவேற்பினைப் பெற்றது.  சரி நாமும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று ருசித்துப் பார்த்தால் அது நம்ம ஊர் தேங்கா மிட்டாய்தான்.  அந்த குறிப்பிட்ட தருணத்தில் சிறு புள்ளியாக துவங்கிய சிந்தனைதான் பிறகு இந்தியா திரும்பியதும் நேட்டிவ் ஸ்பெஷல் என முழுமைப் படுத்தப்பட்டு நண்பர்களுடன் சேர்ந்து செயல்படத் துவங்கியது.

வணிக ரீதியான தொழில் சார்ந்த சிந்தனை அடிப்படை இல்லாமல் நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்களுக்கு ஒரு பொருளாதார அடிப்படையினை உருவாக்க வேண்டும் அதனைச் சார்ந்து இருக்கும் நம்ம ஊர் கிராமத்து உற்பத்தியாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அது அமைய வேண்டும் என்ற சிந்தனையில் செயல்படத் துவங்கியதால் லாபத்தினை பெரியதாகக் கொள்ளாமல் வருமானம் இல்லாத போதிலும் தொடர்ந்து இதில் செயல்படத் துவங்கினோம்.  வேலை செய்து கொண்டே இதனைச் செய்ததால் வார இறுதி நாட்களில் தமிழகம் முழுக்க பயணிப்பது,  மாலை நேரங்களில் வரும் ஆர்டர்களை அனுப்புவது என மூன்று ஆண்டுகள் எந்த ஒரு பொழுது போக்கும் இன்றி இதற்காகவே இயங்கினோம்.  வருமானம் இல்லை என்றாலும் இப்படி ஒரு பிளாட்பார்மினை நிறுவுவது நம்ம ஊர் பாரம்பரிய உற்பத்தியாளர்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருக்கும் என்ற சிந்தனை ஒன்று மட்டுமே எம்மை உந்தித் தள்ளியது" என தங்களது அனுபவத்தினை சிரித்த முகத்துடன் பகிர்ந்தனர் அதன் இயக்குனர்கள்.

 

 

murukku

 

 

பிறர் எண்ணத் துணியாததையும், எண்ண மட்டுமே துணிவதையும் செய்பவர்கள்தானே சாதிக்கிறார்கள்?  2015 வரை இப்படித்தான் அவர்களின் தொழில்முயற்சி தொடர்ந்தது. ஏற்கனவே  வாங்கிய வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் ஆடர் செய்தது, இவர்களுக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது.

 

இன்னும் இதனை வீரியமாக முன்னெடுக்க 'இதை முழு நேரத் தொழிலாக செய்தால் என்ன?' என்ற கேள்வி எழும்ப அதற்கான முயற்சிகளைத் துவங்கினர். "மெல்ல குடும்பத்தாருடன் இதனைப் பகிரத் துவங்கினோம் இப்பொருளினை ஆன்லைனில் விற்க முடியும்  என்பதை  யாரும்  நம்பவில்லை. அவர்களுக்கு அது புதிதாக இருந்தது. ஆனாலும் நாங்கள் ஏற்கனவே பார்ட்-டைமாக இதை செய்யும்போது ஒரு சின்ன நம்பிக்கையை உருவாக்கியிருந்ததால் யாரும் தடுக்கவோ எதிர்க்கவோயில்லை."

 

மெல்ல 'நேட்டிவ் ஸ்பெஷல்'லில் விற்கப்படும் பண்டங்களின் எண்ணிக்கை வகைகளை அதிகரித்தனர். ஒவ்வொரு பண்டத்தையும் சேர்க்கும் முன் அவர்கள் செய்யும் களப்பணி ஆச்சரியப்பட வைக்கிறது. "மணப்பாறை முறுக்கு வாங்க மணப்பாறை போய் இறங்கினோம். முறுக்கு செய்றவங்க 200 பேருக்கு மேல இருந்தாங்க. அதுல நாம எதிர்பாக்குற தரத்தை யார் தருவாங்கன்னு தேர்ந்தெடுக்குறதுதான் நம்ம பிஸினஸோட முக்கிய பகுதி. ஒவ்வொரு ஐட்டம் புதுசா சேக்குறதுக்கு முன்னாடி நிறைய வேலை பாக்குறோம்.  அதனால் குவாலிட்டியில் எந்தக் குறையும் வராமல் பார்த்துக்க முடியுது" என்று ஊர் ஊராக சுற்றி உணவு வகைகளை சுவைத்த கதை சொல்கிறார்கள்.
 

 

srivilliputhoor palkova

 

"நிறைய டிராவல் பண்ணோம். எல்லா ஊரும் சுத்தினோம்... ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சுவை... கிடைச்ச பொருளை, இவ்வளவு தூரம் கொண்டு சேர்க்கணும்னா, அதை அவர்களது வழக்கத்தை விட அதிகமான தரத்தில் செய்யணும். அதுக்கு நிறைய பேர் ஒத்துக்க மாட்டாங்க. 'இவ்வளவு மெனக்கிட்டு தயார் செய்வது கஷ்டமாச்சே?'னு சிலர் தயங்குவாங்க. சிலர் ரொம்ப ஆர்வமாகி அவுங்களே ஆராய்ச்சி பண்ணி பல வகைகள் அனுப்புவாங்க. நாங்க எதிர்பார்க்குற உயர்ந்த தரத்துக்கு ஒத்துக்கொள்பவர்களைத்தான் செலக்ட் பண்ணுறோம். கன்னியாகுமரில சுட்ட முந்திரின்னு ஒரு ஐட்டம் இருக்கு, வெள்ளியணைல அதிரசம். மணல்மேடு முறுக்குன்னு ஒரு ஐட்டம். ஒரு காலத்துல கிராமம் முழுக்க அதுதான் தொழில். ஆனா, நாங்க போனப்போ ஒரே ஒருத்தர்தான் அதை செஞ்சார். அவர்கிட்ட வயசான நாலுபேர்தான் வந்து செஞ்சு கொடுத்தாங்க. முதலில் பயந்தார். நாங்க நம்பிக்கை கொடுத்து செய்யச் சொன்னோம். இப்போ இன்னும் கொஞ்ச பேர் வந்து செய்றாங்க. அழிவின் விளிம்பில் இருந்த, தன்னை அடுத்த காலத்துக்கு நகர்த்திக்கொள்ள முடியாத பல உணவுப்பொருட்கள் போயிருச்சு. அதுல சில விஷயங்களை நாங்க மீட்டோம் என்பது பெரிய திருப்தி" என்று அவர்கள் சொல்லும்போது நாம் அறியாத இந்தத் தொழிலின் பரிமாணம் விரிந்தது.

 

வெளிநாடு வரை சுவையைக் கொண்டு சேர்ப்பது சரி... தரத்தையும் சிந்தாமல் சிதறாமல் சென்றடைவதையும் எப்படி உறுதி செய்கிறார்கள்?

"பேக்கிங்ல அமெரிக்காவின் ஸ்டாண்டர்டில் அதிக பட்ச தரத்தை கடைபிடிக்குறோம், அதே தரத்தில்தான் இந்தியாவுக்கும் பண்றோம். ஆரம்பத்தில் முறுக்கு உடைந்து தூள் தூளாகப் போய் சேர்ந்திருக்கு. பஞ்சாமிர்தம் கீழே ஊத்தியிருக்கு... இப்படி சில தவறுகள். ஒரு முறை மும்பைல இருந்து ஒரு ஆடர். தனது கணவரின் பிறந்தநாளுக்காக விருந்தினர்களுக்குப் பஞ்சாமிர்தம் கொடுக்கவேண்டுமென்று ஆசை ஆசையாக ஆடர் பண்ணாங்க ஒரு அம்மா. ஆனா, எதிர்பாராவிதமா பஞ்சாமிர்தம் பேக்கிங் உடைஞ்சு ஊத்திருச்சு. முதலில் மனைவி கூப்பிட்டு புகார் செஞ்சாங்க, ரொம்ப கோபமாகப் பேசுனாங்க. எங்களுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. ஆனா பின்னாடியே கணவர் கால் பண்ணி, 'இது இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம். நீங்க ஆரம்ப கட்டத்தில் இருக்கீங்கன்னு தெரியும். அதுனால, என் மனைவி சொன்னதை வச்சு எதுவும் முடிவுக்கு வந்துறாதீங்க. இன்னும் நல்லா பண்ணுங்க..." என்று கூறி ஊக்கப்படுத்தினார். எங்களுக்கே அது புதுசா இருந்தது. அதன் பிறகு பேக்கிங்கில் சின்ன தவறு கூட நடக்கக்கூடாது என்பதில் மிக கவனமா இருக்கோம்.

 

ஒவ்வொரு முறையும் கஸ்டமர்கள் தந்த ஃபீட்பேக்தான் எங்களை நகர்த்தியது. UKயில் இருந்து ஒரு பெண்மணி பேசுனாங்க. 'இரவு 12 மணி, லேட் ஆய்டுச்சுன்னு தெரியும், இருந்தாலும் நாளைக்கு தள்ளிப்போட வேண்டாமென்று கூப்பிட்டேன். 30 வருஷமா நாங்க இங்க செட்டிலாகிட்டோம். இதை கண்ல பார்த்ததே பெரிய விஷயம். இளந்தவடை என்று ஒரு தின்பண்டம் இருக்கிறதென்பதே என் பொண்ணுக்கு தெரியாம போயிடுமோன்னு நெனச்சேன். உங்க மூலமா எங்க பொண்ணு அதை சுவைச்சுட்டா'ன்னு ரொம்ப நெகிழ்ச்சியா பேசுனாங்க. இப்படி பல அனுபவங்கள்" என்று ஸ்வீட்க்கொரு செண்டிமெண்ட் சைட் இருப்பதை நமக்கு உணர்த்தினார் பாஸ்கரன்.

 

native sweets

 

பேசப்பேச நமக்கு நாவூறியது. 'நேட்டிவ் ஸ்பெஷல்.காம்'மின் டாப் - 5 உணவுப்பண்டங்கள் என்னவென்று கேட்டோம். "திருநெல்வேலி அல்வா, திருவில்லிப்புத்தூர் பால்கோவா இரண்டும் எப்போதும் டாப். கருப்பட்டி மைசூர்பாக்ன்னு ஒரு ஐட்டம் எமது முயற்சியில் நமது பாரம்பரிய கருப்பட்டியினைக் கொண்டு ஒரிஜினலாக கொண்டு வந்தோம், எல்லோருக்குமே பிடித்த ஐட்டம் இது. சின்ன வெங்காய முறுக்கு... பீட்பேக், விற்பனை இரண்டிலும் டாப். இவை தவிர அவ்வப்போது ஒவ்வொரு பண்டம் முன்னிலையில் இருக்கும்" என்று பெஸ்ட் செல்லர் லிஸ்ட் சொன்னார்.

 

கடைசியாக ஒரு கேள்வி மனதில் இருந்தது. ஐடி வேலையை விட்டுட்டு பிசினஸ் பண்றேன், விவசாயம் பண்றேன் என்பது ஒரு ஃபேஷன் மாதிரி ஆகிவிட்டது. உண்மையில் எப்படி உணர்கிறார்கள் இவர்கள்? கேட்டுவிட்டோம்... "எமது ஐடி நண்பர்களில் எம்மை விட அதிகம் சம்பாரிப்பவர்களும் இருக்காங்க, இன்னும் இந்த அளவுக்கு வராதவங்களும் இருக்காங்க. ஆனால், ஒரு விஷயம். எங்கள் நண்பர்களை சந்திக்கும்போது, அவர்களிடம் பேசும்போது, 'ஸ்ட்ரெஸ்' என்ற வார்த்தையை அடிக்கடி கூறாக கேள்விப்படுகிறோம். ஆனால், எங்களுக்கு அந்த வார்த்தை பொருந்தாது. ஞாயிற்றுக்கிழமையிலும் கூட அலுவலகம் வந்துவிடுவோம். வருமானம் குறைவுதான் என்றாலும் நம் சமூகம் சார்ந்த நலன் பயக்கும் நோக்கத்துடன் செயல்படுவதால் மிகுந்த ஊக்கத்துடன் செயல்படுகிறோம்" என்றனர் திருப்தியுடன். எல்லோரும் இப்படி முயற்சியில் ஈடுபட முடியாது. ஒவ்வொருவர் வாழ்க்கையும் வெவ்வேறு. நாம என்ன செய்யலாம்? 'நேட்டிவ் ஸ்பெஷல்.காம்'மில் (www.nativespecial.com) ஆடர் செய்து 'ஸ்வீட் சாப்பிடுவோம், ஸ்ட்ரெஸ்ஸை மறப்போம்'. நம்மிடம் மிகுந்த உற்சாகத்துடன் பகிர்ந்த ’நேட்டிவ் ஸ்பெஷல்’ இயக்குனர்கள் பார்த்திபன், பாஸ்கரன் மற்றும் செல்வகுமார் ஆகியோரை வாழ்த்துவோம். 

 

   

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

குடும்பம் கைவிட்டதும் கலையை கையில் எடுத்தேன் - டிரெண்டிங் நடன பிரபலம் ஷர்மிளா உற்சாகம்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 LETS DANCE SHARMILA interview

 

சினிமா பாடல்களை அப்படியே ரீ-கிரியேசன் செய்து இணையத்தில் உலாவவிட்டு பிரபலமடைந்து வருகிறார்கள் இன்றைய இளைய தலைமுறையினர்; பலர் இதனை கொண்டாட்டமாகவே செய்தாலும் சிலருக்கோ அது தனது வலியினை மறைப்பதற்கான ஒன்றாக உள்ளதாகவும் இருக்கிறது என்கின்றனர் சிலர். அந்த வகையில் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றையும் நம்முடைய நேர்காணலின் மூலம் டான்ஸர் ஷர்மிளா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலிருந்தே எனக்கு இருந்தது. சென்னை வந்த பிறகு ஆக்டிங், டான்ஸ் என்று பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறேன். பள்ளிக்காலங்களில் பல்வேறு போட்டிகளில் நான் கலந்துகொள்வேன். இதுதான் செய்வேன் என்று எப்போதும் என்னை நான் சுருக்கிக்கொண்டது கிடையாது. அனைத்து விதமான கலைகளிலும் என்னால் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். சமூக வலைதளங்களால் இன்று வாய்ப்புகள் கிடைப்பது எளிமையாகி இருக்கிறது. 

 

அம்மா, அப்பாவுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்ததால் சிறுவயது முதல் நான் ஹாஸ்டலில் இருந்தேன். தலைமையாசிரியரின் உதவியால் தான் என்னுடைய பள்ளிப்படிப்பை நான் முடித்தேன். அடுத்தகட்ட படிப்புக்கு கோர்ட் உத்தரவு மூலம் என்னுடைய தந்தை மாதாமாதம் கொடுத்த ஜீவனாம்ச பணம் உதவியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடியோக்கள் செய்ய ஆரம்பித்து சென்னை வந்தேன். எனக்கு கிடைத்த ஆயுதம் போன் தான். இரவெல்லாம் கண்விழித்து வீடியோக்கள் செய்வேன். 

 

 

நம்பிக்கையும் உழைப்பும் தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்கள். கொரோனா காலத்தில் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்குக் கிடைத்த வாய்ப்பு தான் லெட்ஸ் டான்ஸ் 360. ஒவ்வொருவருக்கும் என்னுடைய ஒவ்வொரு பர்ஃபாமன்ஸ் பிடிக்கும். சிலருக்கு என்னுடைய நடிப்பும் சிலருக்கு என்னுடைய நடனமும் பிடிக்கும் என்று சொல்வார்கள். என்னுடைய டீமிடமிருந்து எனக்கு எப்போதும் நல்ல சப்போர்ட் கிடைக்கும். என்னை அவர்கள் நன்றாக ஊக்குவிப்பார்கள். 

 

பறை இசை வாசிக்கும்போது எமோஷனலாக இருக்கும். நெகட்டிவ் கமெண்டுகள் வரும்போது அதைப் புறந்தள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது கடினம். பள்ளியில் இருக்கும்போது மற்ற மாணவர்கள் அவர்களுடைய பெற்றோருடன் பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக இருக்கும். ஆனால், எனக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தால் தான் என்னால் நிறைய சாதிக்க முடிகிறது என்று நினைக்கிறேன். எனக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எனக்கு எப்போதும் ஆதரவு. என்னுடைய வீடியோக்கள் பற்றி என் பெற்றோரிடம் சிலர் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு யூடியூப் குறித்து தெரியாது. 

 

என்னுடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டு என்னுடைய ஆசிரியர்கள் பாராட்டுவது பெருமையாக இருக்கும். என்னுடைய வீடியோக்களுக்காக அதிகமான முன்தயாரிப்புகளில் நான் எப்போதும் ஈடுபடுவேன். யூடியூபில் சில்வர் பட்டன் கிடைத்த நாள் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. என்னைப் போன்று இந்தத் துறைக்குள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் பாலா சாரின் 'இவன்தான் பாலா' என்கிற புத்தகத்தைப் படிக்க வேண்டும்.