ADVERTISEMENT

"இங்குதான் என் குழந்தைகள் பிறந்தன... இதை வைத்து நான் வியாபாரம் செய்ய மாட்டேன்" - நெகிழ வைத்த மருத்துவர் 

03:28 PM Jun 28, 2018 | vasanthbalakrishnan


ADVERTISEMENT

டாக்டர். ராஜேஷ் ஜெகநாதன்

ADVERTISEMENT

"உடனே இன்னொரு பிரான்ச் ஆரம்பிக்கும் ஐடியா இல்ல சார். மதுரை, திருச்சி என்று கிளைகளைத் தொடங்கிவிட்டு அங்கு அனுபவமில்லாத மருத்துவர்களை வைத்துக்கொண்டு மாதமொருமுறை சென்று அவசரமாக பார்த்து, இப்படி இதை கமர்சியல் ஆக்க விரும்பல சார்..." - இந்த பதிலை ஒரு தனியார் மருத்துவமனையின் இயக்குனரிடமிருந்து கேட்ட போது ஆச்சரியமாக இருந்தது. காரணம் இருக்கிறது...

இப்பொழுதெல்லாம் எஃப்.எம் ரேடியோக்களைப் போட்டுக் கேட்டால், துணிக்கடைகள், எலெக்ட்ரானிக்ஸ் கடைகள் விளம்பரங்களோடு போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன கருத்தரிப்பு மருத்துவமனைகளின் விளம்பரங்கள். திண்டுக்கல்லில் புகழ் பெற்ற பிரியாணிக்கடைகளின் கிளைகளை சென்னையில் திறப்பது போல ஊர்களில் புகழ் பெற்ற கருத்தரிப்பு மருத்துவமனைகளின் கிளைகளை சென்னையில் திறக்கிறார்கள். ஆடி மாதம் வந்தால் துணிக்கடைகள் போடும் தள்ளுபடிகள், கிராண்ட் சேல் ஆஃபர் போல மகளிர் தினம், அன்னையர் தினம் வந்தால் ஸ்பெஷல் ஆஃபர் போடுகிறார்கள் இந்த மருத்துவமனைகளில். சில விளம்பரங்கள் பேக்கேஜ் சலுகை, காம்போ ஆஃபர் என்றெல்லாம் கூறி நம்மை பயமுறுத்துகின்றன.

தமிழகத்தில், ஏன் முழு இந்தியாவிலும் குழந்தைப் பேறு என்ற ஒன்று உணர்வுகளோடு கலந்ததாக இருக்கிறது. தங்கள் குடும்ப கடந்த கால பாரம்பரியத்தின் நீட்சியாகவும் எதிர்காலமாகவும் வாரிசுகள் பார்க்கப்படுகின்றன. முன்பெல்லாம் இதற்காக பெண்கள் பட்ட கொடுமை கொஞ்சநஞ்சமல்ல. திருமணமாகி ஓராண்டில் குழந்தை பெறாவிட்டால் கடுமையான சொல், ஏளனமான பார்வை, கணவன் அடுத்தொரு பெண்ணை மணத்தல் என அவர்கள் சந்தித்த அநீதிகள் அதிகம். அறிவியல் வளர்ச்சியும் மக்களின் கல்வியும் இந்த நிலையை ஓரளவு மாற்றி, குழந்தைப் பேறின்மைக்கு காரணம் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்தான் என்று மக்களை உணர வைத்திருக்கின்றன. இப்பொழுது மாறிவிட்ட வாழ்க்கை முறையும் உணவு முறையும் பெண்களுக்கிணையாக ஆண்களும் இதற்கு காரணமாக இருக்கும் நிலையை உருவாக்கியிருக்கின்றன. மக்களின் உணர்வில் கலந்த விஷயங்களை வணிகமாக்குவது இன்று நேற்று நடப்பதல்ல. ஆன்மிகம் தொடங்கி அக்ஷய திரிதியை வரை பல விஷயங்களிலும் இதை காண்கிறோம். அதில் ஒன்றாக இடம் பெற்றுவிட்டது கருத்தரிப்பு சிகிச்சை.

ரஜினி ராஜேந்திரன்



விளம்பரங்களும், விலையும் ஒரு பக்கம் பயமுறுத்துகின்றன என்றால் மறுபக்கம் அவற்றை நம்பி சிகிச்சைக்கு செல்வோரை, முழுமையாக நம்பிக்கை கொடுத்து, வலியையும், செலவையும் கொடுத்து பின்னர், 'இந்த முறை IVF ஃபெயிலியர் ஆகிடுச்சு. அடுத்த முறை ட்ரை பண்ணலாம்' என சாதாரணமாக சொல்லி ஏமாற்றும் வேலைகளும் ஆங்காங்கே நடக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்று (27-06-18) சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் பில்ரோத் மருத்துவமனை மேலாண் இயக்குனர் டாக்டர். ராஜேஷ் ஜெகநாதன் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு பேசினார்.

மேலும் அவர், "2015ஆம் ஆண்டு, எனக்கு எங்கள் மருத்துவமனையில் எங்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி நடந்துகொண்டதால் இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஒரு ஆண், ஒரு பெண். அவர்கள் பிறந்தது எனக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்து. அந்த வேதனையை நான் நன்கு அறிவேன். எனக்குக் கிடைத்த இந்த சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கவேண்டும், அதுவும் தேவையில்லாத மனஉளைச்சல், உடல்வலி, செலவு இல்லாமல் கிடைக்கவேண்டும் என்கிற எண்ணத்தில்தான் கருத்தரிப்புக்கென 'அதித்ரி' என்ற என் மகளின் பெயரில் இந்த தனி பிரிவைத் தொடங்கியுள்ளோம். ஒரு மருத்துவமனையின் இயக்குனர் என்பதால் எனக்கு மட்டும் கிடைத்து நின்று விடக் கூடாது. எந்த பணியில் இருப்பவரும் பெறக் கூடிய வகையில் இதை உருவாக்குகிறோம். எங்கள் மருத்துவமனையின் இந்தப் பிரிவு என் உணர்வோடு கலந்தது. ஏற்கனவே 18 ஆண்டுகள் கருத்தரிப்பு சிகிச்சையில் சிறந்து விளங்கினாலும், இப்பொழுது IUI, IVF போன்ற சிகிச்சை முறைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி கருவிகள், வசதிகளோடு தனி பிரிவை உருவாக்கியுள்ளோம்" என்றார். அவரிடம் ஒருவர், "இது போல பிற ஊர்களில் தொடங்குவீர்களா?" என்று கேட்டார். வேறு எந்த தனியார் மருத்துவமனை நிறுவனர் என்றாலும் உறுதியாக "ஆம், விரைவில்" என்றே சொல்லியிருப்பார்கள். இவரது வித்தியாசமான பதிலே இவர் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.





அந்த விழாவில் பேசிய மூத்த கருத்தரிப்பு மருத்துவரான ரஜினி ராஜேந்திரன், "குழந்தையில்லாதவர்கள், முதலில் நோயாளிகளே அல்ல. அவர்களுக்கு சிகிச்சை என்பதைவிட சரியான வழிகாட்டுதலே தேவை. அதனால் நாங்கள் எடுத்தவுடனே பெரிய சிகிச்சை செய்து உடனே வெற்றி பெறலாம், குழந்தை பெற்றுவிடலாம் என்றெல்லாம் கூறி ஆசையை உண்டாக்கமாட்டோம். அதே நேரம், இது கடினமானது, உங்கள் உடல்நிலை மோசம் என்று கூறி பதற்றப்படுத்த மாட்டோம். ஒவ்வொருவரின் உடலும் தனி. அதற்கேற்ப அறிவுரை கூறி வழிநடத்துவோம். உடலைத் தாண்டி இது மனம் சார்ந்தது. அதுமட்டுமல்லாமல் முன்பெல்லாம் பெண்களிடம் உடல்குறைகள் இருந்தன. இப்பொழுதெல்லாம் ஆண்கள்தான் அதிகமாக குழந்தையின்மைக்குக் காரணமாக இருக்கின்றனர். கடந்த காலங்களை விட இந்த குறைபாடு ஆண்கள் மத்தியில் இருபது சதவிகிதம் அதிகமாகியுள்ளது. வரும் காலங்களில் இன்னும் இருபது சதவிகிதம் அதிகமாகுமென கணிக்கப்படுகிறது. முக்கியமாக நகரங்களில் கார்ப்ரேட் வாழ்க்கை வாழும் ஆண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என அக்கறையும் எச்சரிக்கையும் சேர்த்து பேசினார்.

சென்னை ஷெனாய் நகர் பில்ரோத் மருத்துவமனை தன்னுடைய கருத்தரிப்பு பிரிவான 'அதித்ரி' குறித்து அறிமுகம் செய்த நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் அவர்கள் வழிகாட்டுதலில் குழந்தை பெற்ற தம்பதிகள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர். அவர்கள் பெரும்பாலும் கூறியது, "சிகிச்சைக்கு வந்தவுடன் முதலில் இருந்துதான் தொடங்குவோம் என செலவிழுத்துவிடாமல், ஏற்கனவே வேறு மருத்துவமனைகளில் பார்த்ததையெல்லாம் கருத்தில் கொண்டு எந்த நிலையில் இருக்கிறோமோ அதற்கேற்ப வழிகாட்டுகிறார்கள்" என்பதே. பெருகி வரும் குழந்தையின்மைக்கு மக்களை பயமுறுத்தாமல் சரியான வழிகாட்டுதல் தருவார்கள் என நம்பிக்கையை அளித்தது அவர்கள் பேச்சு.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT