Skip to main content

'யார் பெரியவன்' முகிலன் யானையும், மாரி பன்றியும் - இரண்டு நிமிட கதை!

Published on 03/02/2020 | Edited on 05/02/2020

மனிதர்களின் முன்னெற்றத்துக்கு பெரிய இடைஞ்சலாக இருப்பது நான் பெரியவனா, இல்லை நீ பெரியவனா என்ற மனோபாவம். பெரிய அரசர்கள் முதல் பணக்கார்கள் வரை, இந்த எண்ணத்தால் சரிந்தவர்கள் ஏராளம்.  எவ்வளவு பெரிய ஆளுமைகளாக இருந்தாலும் இந்த எண்ணத்தில் இருந்து அவர்களால் வெளியேற முடியாமல் தவிக்கின்றார்கள். இதற்கு உலகம் முழுவதும் பல்வேறு வாழும் உதாரணங்களே இருக்கிறார்கள். இந்த யார் பெரியவன் என்ற மனோநிலையே உலகப்போர்கள் ஏற்பட கூட காரணமாகவும் அமைந்திருந்தன. இந்த எண்ணத்தை எப்படி எளிமையாக கடந்து போகலாம் என்பதை நாம் ஒரு கதை மூலம் காணலாம்.
 

jk



கந்தன் என்ற காட்டுவாசி முகிலன் என்ற யானையை வளர்த்து வந்தார். காலை நேரத்தில் யானையை குளிப்பாட்டும் நோக்கில் அதனை காட்டில் உள்ள நதி ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார். யானை ஆர்வமாக குளிப்பதை பார்த்த அவர், யானையை அங்கேயே விட்டுவிட்டு தான் சிறிது நேரம் கழித்துவருவதாக கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நன்றாக ஆற்றில் குளித்த யானை கந்தன் வர நேரமானதால் ஒற்றையடி பாதை வழியாக வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தது. அதே வழியில் மாரி என்ற பன்றியும் எதிரே நடந்து வந்தது. சேரும் சகதியுமான நிலையில் மாரியை பார்த்த யானை ஒற்றையடி பாதையில் இருந்து சற்றுவிலகி நின்றுக்கொண்டு பன்றி செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது.

பன்றியும் அந்த வழியாக சென்றது. பின்னால் வந்த தன் நண்பர்களிடம் யானை தன்னை பார்த்து பயந்து வழி விட்டதாக மாரி பன்றி கூறிச் சிரித்தது.  குளித்துவிட்டு வரும் நாம் பன்றியிடம் மோதி நாமும் சேராக வேண்டாமே என்ற எண்ணத்தில் நாம் ஒதுங்கி சென்றால் பன்றி இவ்வாறு எடுத்துகொண்டுள்ளதே என்று சிந்தித்தவாறே யானை அந்த இடத்தை கடந்து சென்றது. வேகமாக மூச்சு காற்று விட்டாலே சிதறி செல்லும் பன்றியிடம் போய் தன்னுடைய பலத்தை காட்டாமல் முகிலன் யானை நடந்து கொண்ட விதத்தை மாரி பன்றி வேறு ஒரு விதமாக எடுத்துக்கொண்டது. உருவத்தை வைத்து பெரியவர், சிறியவர் என்ற பதம் தீர்மானிக்கபடுவதில்லை, அவர்களின் நன்னெறி குறையா செயல்பாடுகளே அதனை தீர்மானிக்கின்றது என்பதே இந்த கதை சொல்லும் நீதி!

 

 

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது.