Skip to main content

டைவர்ஸ் அதிகரிக்க மாமியார்கள் தான் காரணமா? - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
motherinlaw | daughterinlaw | Divorce | DrRadhika Murugesan

டைவர்ஸ் குறித்து சமூகத்தில் பல்வேறு விதமான பார்வைகள் உள்ளன. அதை எப்படி பார்க்க வேண்டும் என்கிற உளவியல் பார்வையை மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அதிகப்படியான சண்டை வருவதற்கான முக்கிய காரணமாக மாமியார் இருக்கிறார். இன்றைய காலத்து பெண்கள் நல்ல முறையில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நல்லபடியாக திருமணமும் செய்து வைக்கப்படுகிறது. அதை ஆண்களும் ஏற்றுக்கொண்டு, புரிந்து கொண்டு வாழ ஆரம்பிக்கிறார்கள். ஆனால், மாமியார்கள் அப்படியாக தனது வீட்டிற்கு வரும் மருமகள்களை பார்ப்பதில்லை நடத்துவதுமில்லை. தன் மகனை திருமணம் செய்துகொண்டு தன் வீட்டிற்கு வரும் மருமகள் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைத்தே மருமகள்களை கையாள ஆரம்பிக்கிறார்கள்.  

உளவியல் ஆய்வாளர் பிராய்டு கூற்றுப்படி, தன் மகன் மீதான அதீத அன்பை பங்கு போட்டுக்கொள்ள வந்தவளாகவே மருமகளைப் பார்க்கிறார்கள் மாமியார்கள். அதோடு மகன்களை 18 வயதிற்கு மேலும் மைக்ரோ பேரண்டிங் செய்கிறார்கள். அவனின் அன்றாட செயல்பாடுகளில் அதிக அக்கறைகளை அம்மாக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதுவே அவனது திருமண வாழ்க்கை வரை நீடிக்கிறது.

பெரும்பான்மையான அம்மாக்களுக்கு உளவியல் மருத்துவராக நான் சொல்வது இதுதான், “உங்களது பிள்ளைகளை அவர்களாகவே வாழ விடுங்கள்; நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை வாழுங்கள்”. ஆனால் பெரும்பாலான அம்மாக்கள் மகனது வாழ்க்கையில் எப்போதுமே தலையிடுகிறார்கள். அவன் காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பிறகும் தலையிட்டு அவனுக்கு பிரச்சனையாகிறார்கள்.

வெளிநாடுகளில் தனித்துவத்தோடு, தனித்தன்மையோடு தனியாக வாழ பழகுகிறார்கள். ஆனால் இந்தியாவில் குடும்பத்தோடு தான் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். அதோடு பெரும்பாலான இந்திய குடும்பங்களில் மகன்களில் வாழ்க்கையில் டைவர்ஸ் நடப்பதற்கு அம்மாக்களே முக்கிய காரணமாகவும் அமைந்து விடுகிறார்கள். தன் மகனையும், மருமகளையும் தனியாக விட்டால் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். ஆனால் மாமியார்கள் தனியாகவும் விடுவதில்லை.

இந்த காலத்து பெண்களுக்கு குடும்ப அரசியல் பண்ணுவதற்கு நேரமே இல்லை. ஏனெனில் அவர்கள் வேலைக்கு போகிறார்கள், புதிய விசயங்களை கற்றுக் கொள்கிறார்கள். பிசியாகவே இருக்கிறார்கள். ஆனால் மாமியார்கள் பழைய ஆட்களாக வேலைக்கு போகாமல் எந்நேரமும் குடும்பத்திற்குள் அரசியல் செய்து கொண்டே இருக்கிறார்கள். மாமியாரை கொடுமைப்படுத்துவதற்கு இந்த கால மருமகள்களுக்கு நேரமே இல்லை. ஆனால், மாமியார்கள் மருமகள்களை கொடுமைப்படுத்துவதற்கே தன் மீத வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

மகன்கள் பெரும்பாலும் அலுவலகங்களில் ஆளுமையாக இருப்பார்கள். ஆனால், வீட்டில் அம்மா பேச்சைக் கேட்டுக்கொண்டு மனைவிகளுக்கு ஆதரவாக இல்லாமல் போய்விடுகிறார்கள். அல்லது இருவரில் யாருக்கு சார்பாக நிற்பது என்கிற முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். மகன்கள் தான் அம்மாவிற்கு சொல்ல வேண்டும். அம்மா நீ உடன் இருக்கலாம், ஆனால் என் மனைவி என்பவள் தனிப்பட்டவள் அவளை பேசவோ, துன்புறுத்தவோ கூடாது என்பதை மகன்கள் தான் பேச வேண்டும். அதுதான் தீர்வை நோக்கி நகர்த்தும். இல்லையென்றால் மகனின் வாழ்க்கையில் டைவர்ஸ் நடக்கும், அதை பார்த்துக் கொண்டுதான் இருக்க முடியும்.

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.