Skip to main content

மனிதன், நிர்வாணத்தை எண்ணி வெட்கப்பட்ட தருணம்! - உடையின் கதை #1

Published on 10/06/2018 | Edited on 10/06/2018
udaiyin kadhai

 

1. ரோமம் முதல் தோல் வரை!

“இந்தத் தோட்டத்தில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், அந்த ஆப்பிள் பழத்தை மட்டும் தொடவே கூடாது” - ஆதாம் ஏவாளிடம் கூறினாராம் கடவுள். ஆனால், கடவுளின் வார்த்தையை மீறி அந்த ஆப்பிளை சாப்பிட்டாள் ஏவாள். ஆதாம் சாப்பிடுவதை தடுத்துவிட்டார் கடவுள். கடவுளின் வார்த்தையை மீறி அந்த ஆப்பிளைத் தின்றதால் ஏவாளுக்கு வெட்கம் வந்தது. அவள் தனது நிர்வாண உடலை இலை தழைகளைக் கொண்டு மறைக்க முயன்றாள் என்பது பைபிள் கதை.

ஏழே நாளில் உலகையும், சமுத்திரத்தையும், தாவரங்களையும், உயிரினங்களையும் கடவுள் படைத்ததாக பைபிள் கூறுகிறது. ஆனால், அறிவியல் அதை மறுத்து, நிரூபித்து விட்டது. பைபிள் கதைப்படி, உலகம் தோன்றி 10 ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. ஆனால், நமது சூரிய மண்டலத்தின் வயது 460 கோடி ஆண்டுகள் என்கிறது அறிவியல். நாம் வாழும் பூமி இப்போதுள்ள வடிவம் பெறுவதற்கு முன் எத்தனையோ மாறுதல்களைச் சந்தித்துள்ளது. ஓருயிரி முதல் ராட்சத விலங்குகள் வரை இங்கு உருவாகி உலவியிருக்கின்றன. லட்சக்கணக்கான ஆண்டுகள் பரிணாமவளர்ச்சியில், குரங்கு இனத்தின் மரபணு சற்று சிதைந்ததால் மனித இனம் தோன்றியது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்...

 

adam and eve



உடையின் கதை என்று கூறிவிட்டு, இதென்ன இடைச் செருகல்? என்று நீங்கள் நினைக்கக் கூடும். கதையின் பூர்வீகத்துக்கு தக்கபடிதானே பீடிகையும் இருக்கும். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களின் படிமங்கள் கூட கிடைத்திருக்கின்றன. ஆனால், மனிதன் அணிந்த உடைகள் எதுவும் படிமங்களாக கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அவை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உடைகளின் படிமங்களாக மட்டுமே இருக்கின்றன. எனவே, மனிதன் எப்போது உடை அணியத் தொடங்கினான் என்பது, மானுடவியல் நிபுணர்களுக்கு விடை தெரியாத புதிராகவே நீடிக்கிறது.

ஆனால், மனித இனத்துக்கு ரோமம்தான் முதல் ஆடை. பரிணாம வளர்ச்சியில் ரோமம் உதிரத் தொடங்கியதும் தனது அடையாளம் மறைந்துவிட்டதாக அவன் உணர்ந்திருக்கக் கூடும். அல்லது, தனது உடலின் வெப்பத்தைப் பாதுகாக்க அவன் உடையைத் தேடியிருக்க வேண்டும். தொடக்கத்தில் விலங்குகளின் தோலை உடையாக பயன்படுத்துவதற்கு முன்பே, தனக்கென ஒரு அடையாளத்தை மனிதன் விரும்பினான். எனவேதான், தனது உடலில் அப்போதைக்குக் கிடைத்த சாயங்களை பூசியும், பச்சை குத்தியும் தன்னை அடையாளப்படுத்தினான்.

நெய்யப்படாத உடைகளைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகும், அவற்றைப் பயன்படுத்துவதில் வித்தியாசத்தை வெளிப்படுத்தினான். அப்போதே ஃபேஷன் தொடங்கிவிட்டதாக மானுடவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போதும்கூட, அணிகிற உடை ஒருவரின் சமூக அந்தஸ்தை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது. எல்லாக் காலகட்டத்திலும் குறிப்பிட்ட சமூகப் பிரிவுகள் ஒரே மாதிரியான உடையை தேர்வு செய்திருக்கின்றன. அந்த உடை தங்கள் சமூகத்தின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துவதாக அவர்கள் கருதினர்.

 

chimp bonobos

சிம்பன்ஸி - போனோபோஸ்



விலங்குகளின் தோல், விலங்குகளின் மயிர், சணல், மரப்பட்டை நார் என மனிதனின் உடைகள் பலவாறாக மாறி மாறி வந்திருக்கிறது. முடிச்சுகள், பின்னல்கள், சடையாக திரிப்பது என அவர்கள் உடைகளை வடிவமைத்து வந்திருக்கின்றனர். இப்போதுள்ள உடை வடிவமைப்பு முறைக்கு பின்னே, பல்லாயிரக்கணக்கான ஆண்டு சரித்திரம் இருக்கிறது. அந்தச் சரித்திரம் பிரமிப்பூட்டக் கூடியது. அந்த பிரமிப்பை அனுபவிக்க வேண்டுமென்றால், சற்று பின்னோக்கி சறுக்கிச் செல்ல வேண்டியது அவசியம்.

80 லட்சம் முதல் 1 கோடி ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் ஒருவகை குள்ள மனிதக்குரங்கு  இனம் இருந்தது. அந்த குரங்கு இனம் 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மறைந்தது. அதிலிருந்து இரண்டு வகை குரங்கு இனம் உருவானது. போனோபோஸ், சிம்பன்ஸி என்ற அந்த இரண்டு வகை குரங்கு இனத்தில், சிம்பன்ஸி இனத்தின் மரபணுத் தொகுதி மனித மரபணுத் தொகுதிக்கு இணையாக இருக்கிறது. அப்படியானால், சிம்பன்ஸிதான் நமது மூதாதையரா? இல்லை. சிம்பன்ஸியும் நமது மூதாதையரும் ஒரேவகை பொது குரங்கு இனத்திலிருந்து உருவானவர்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.

 

 


“சூ மந்திரகாளி” என்று மந்திரம் போட்டவுடன் ஒரே நாளில் இன்றைக்கு இருக்கிற மனித இனம் உருவாகிவிடவில்லை. கடந்த ஒரு கோடி ஆண்டுகளில் எத்தனையோ படி நிலைகளைத் தாண்டித்தான் இப்போதைய மனித இனம் உருவாகி இருக்கிறது. பல விதமான குரங்கு இனங்களைப் போல மனித இனம் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதிர்ச்சி அடைந்து முன்னேறிய நிலைக்கு உயர்ந்திருக்கிறது.

சுமார் 60 லட்சம் முதல் 45 லட்சம் வரையான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆப்பிரிக்காவில் மனித இனம் தோன்றியது. அந்த இனம் மனிதனுக்கு உரிய புத்திசாலித்தனம் ஏதும் இல்லாமல் வனத்தில் உலவியது. அந்த இனத்திலிருந்து சற்று முதிர்ச்சி அடைந்த மனித இனம் 40 லட்சம் முதல் 20 லட்சம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆப்பிரிக்காவில் உருவானது. அந்த இனத்துக்கு ஆஸ்ட்ராலோபிதிகஸ் என்று மானுடவியலாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்த இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் இரண்டு கால்களில் நடந்தனர். தங்களுடைய உயரத்துக்கு சமமான குரங்குகளை விட, பெரிய அளவிலான மூளையைப் பெற்றிருந்தனர். தாவரங்களை மட்டுமே உணவாகக் கொண்டனர். இந்த இனத்தைச் சேர்ந்த மனித இனத்தின் முழுமையான எலும்புக்கூடு ஒன்று, 1974ல் எத்தியோப்பியாவில் கிடைத்தது. இந்த எலும்புக்கூடுக்கு லூஸி என்று பெயரிட்டுள்ளனர்.

  sablis sapiens

ஹோமோ ஹாபிலிஸ் - ஹோமோ ஸாபியென்ஸ்  ஸாபியென்ஸ்

 

20 லட்சம் ஆண்டுகள் வாக்கில் முதல் புத்திசாலித்தனமான மனித இனம் தோன்றியது. ஹோமோ ஹாபிலிஸ் என்று பெயரிடப்பட்ட அந்த மனிதர்கள் விலங்குகளை வேட்டையாட ஆயுதங்களைத் தயாரித்தனர். தாவர உணவுடன் வேட்டையாடிய விலங்குகளின் மாமிசத்தையும் இவர்கள் சாப்பிட்டனர். ஹோமோ ஹாபிலிஸ் இனத்திலிருந்து உருவான புதிய மனித இனம் ஹோமோ எரெக்டஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த இனம் 18 லட்சம் ஆண்டுகள் வாக்கில் தொடங்கி, 2 லட்சம் ஆண்டுகள் வரை பூமியில் வாழ்ந்தது. இந்த இனம் பெரிய மூளையைப் பெற்றிருந்தது. பிரமாண்டமான விலங்குகளை வேட்டையாடவும், நெருப்பை உருவாக்கவும், இவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து இவர்கள்தான் முதன்முறையாக குளிர்நிறைந்த வடபகுதிக்கும் வெப்பம் மிகுந்த யுரேஸியாவின் பாகங்களுக்கும் பரவினர்.

சுமாராக 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான், நமது சொந்த இனத்தின் மூதாதையரான ஹோமோ ஸாபியென்ஸ் இனம் தோன்றியது. இவர்களில் இருந்து சற்று முன்னேறிய ஹோமோ ஸாபியென்ஸ் நியாண்டர்தால் இன மக்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாகினர். இந்த காலகட்டம்தான் மனித நாகரிக வளர்ச்சியில் மிக முக்கியமானது. ஆம். மனித இனம் அதுவரை உடல் முழுவதும் அடர்ந்த ரோமத்தைப் பெற்றிருந்தது. வடக்கு நோக்கிய நகர்வில்,  குளிர் காரணமாகவும் ஹார்மோன்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவும் நியாண்டர்தால் மனிதர்கள் ரோமத்தை இழக்கத் தொடங்கினர்.

இதையடுத்து, அவர்கள் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாக்க, வேட்டையாடிய விலங்குகளின் தோலைப் போர்வையாக பயன்படுத்தினர். கற்களாலும் கட்டைகளாலும் ஆயுதங்களைச் செய்ய பழகியிருந்தனர். இவர்கள்தான் இறந்த உடலை புதைக்கத் தொடங்கியவர்கள். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இறந்த உடல்களை இவர்கள் புதைத்தனர்.

 

 


உடல்ரீதியாக நல்ல பலத்துடனும் மிகச்சிறந்த வேட்டைக்காரர்களாகவும் இருந்தனர். 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்களுடைய இனம் அழியத் தொடங்கியது. இவர்களுடைய அழிவுக்கு நவீன மனித இனத்தின் வருகையே காரணமாக அமைந்தது. ஹோமோ ஸாபியென்ஸ் ஸாபியென்ஸ் என்ற இந்த புதிய இனம்தான் தற்போதைய மனித இனத்தின் மூதாதையர்கள். புதிய மனித இனம் தோன்றும் போதெல்லாம் ஏற்கெனவே இருந்த மனித இனம் அழிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாகரிகத்தில் அல்லது புத்திசாலித்தனத்தில் முன்னேறிய இனம், பின்தங்கிய இனத்தை அழித்தே வந்திருக்கிறது.

இந்த புதிய ஹோமோ ஸாபியென்ஸ்  ஸாபியென்ஸ் மனித இனம் ஐரோப்பாவில் வசித்த க்ரோமக்னான் இனத்தின் பிரதிநிதிகளாக உருவானவர்கள். இவர்கள் திடீரென்று ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சி பெறத் தொடங்கினார்கள். கி.மு.32 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழைந்து, நியாண்டர்தால் மனிதர்களை அழித்து ஐரோப்பாவை ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். யுத்தத்திலோ, கலப்புத் திருமணம் செய்தோ நியாண்டர்தால் மனித இனத்தை இவர்கள் ஒழித்துக் கட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

 


ஹோமோ ஸாபியென்ஸ் ஸாபியென்ஸ் இனத்தினர்தான் கலை, வழிபாடு ஆகியவற்றை அறிந்திருந்த முதல் மனிதர்கள். பிரான்ஸில் உள்ள  சாவ்வேட் குகை ஓவியங்கள் இவர்களுடைய கலைத் திறமையை வெளிப்படுத்தும் பழமையான சான்றாக இருக்கிறது. உலகின் வேறுபட்ட தட்பவெப்ப பகுதிகள் அனைத்திலும் வாழும் ஆற்றலை இவர்கள்தான் பெற்றிருந்தனர். சுமாராக 20 ஆயிரம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவிய இவர்கள், கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், விலங்குகளை பழக்கப்படுத்தவும், விவசாயம் செய்யவும் கற்றுக் கொண்டனர். நகரங்களை உருவாக்கி, எழுத்து வடிவத்தையும் இவர்கள் அறிமுகப்படுத்தினர்.

இதுதான் மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு.
   
       

 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.